Subscribe Us

header ads

கதையெழுதி கைதாகிய துருக்கிய கதாசிரியர்..!

 


துருக்கியை இராணுவம் ஆட்சி செய்த காலமது, ஒரு குடும்பத்தினர் தமது வரவு செலவு பற்றாக்குறையை சரி செய்து கொள்ள வீட்டின் ஒரு அறையை வாடகைக்கு விட தீர்மானித்தனர்.

வருமானம் வரும் திருப்தியில் மற்றொரு அறையையும் வாடகைக்கு விட்டனர், இது இலகுவான வருமான வழியாக இருக்கிறதே என மூன்றாவது அறையையும் வாடகைக்கு விட்டனர்..

அடிப்படைத் தேவைகள், தேவைகள் போக ஆசைகள் பேராசைகள் என செலவு செய்ய ஆரம்பித்தனர்..

திடீரென வீட்டின் குளியலறைகளை சரிசெய்து தருமாறு வாடிக்கையாளர்கள் கேட்க காசு போதாமையால் அவர்களிடமே வாடகை முற்பணங்களாக கடன் பெற்று சரிசெய்து கொடுத்தனர்..

இன்னும் சிலநாட்கள் கழியவே மின்சார இணைப்புகள், நீர்வழங்கல், கழிவுநீர், வடிகான்கள் என பல திருத்த வேலைகள் வருகின்றன அவற்றிற்கும் அவர்களிடமே அறவிட்டு செய்து கொடுத்து வாடகையில் கழித்தனர்..

நாட்கள் நகரவே வருவாயும் இல்லாத நிலையில் இன்னும் ஓரிரு அறைகளை வாடகைக்கு விட முடிவு செய்து தாம் வீட்டின் மொட்டை மாடியில் தற்காலிக கொட்டகை அமைத்து அதில் வசிக்க ஆரம்பித்தனர்..

குடியிருப்பாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவே உட்கட்மைப்பு வேலைகளை செய்யவும், பொது வசதிகளை வழங்கவும், பொழுது போக்கும் பூந்தோட்டங்களை செய்து தரவும் என செலவுகளும் அதிகரித்தன..

இனி அவர்களுக்கு தேவையான ஆகாரங்கள் பானங்களை தாமே தயாரித்து தரவும், அவர்களது ஆடைகளை சலவை செய்து தரவும் என சில சேவகங்களை செய்து தரவும் உடன் பட்டனர்..

ஏற்கனவே அவர்களிடம் பெற்ற கடன்களை காரணம் காட்டி வாடிக்கையாளர்கள் பல அறைகளை பூங்காவை என தமதாக்கிக் கொண்டு தமக்கு தரப்பட வேண்டிய தொகைகளுக்காக புதியவர்களையும் தாமாக குடியமர்த்த ஆரம்பித்தனர்...

அவர்களது பிள்ளைகளும் வளர ஆரம்பித்தனர் ஒரு நாள் மூத்த மகன் வீட்டில் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி இது எங்களுடைய வீடா அல்லது நாங்கள் இந்த வீட்டில் பணியாளர்களா? என தாய் தந்தையரிடம் கேட்டிருக்கிறார்..?

வாதப் பிரதிவாதங்கள் முற்றவே தந்தை தனது அலமாரியில் இருந்து ஒரு கோவையை எடுத்து
மகனே இதோ பார் இந்த வீட்டின் உறுதிப்பத்திரம் எங்கட பாட்டன் அப்பாவிற்கு எழுதி வைத்து அவர் எனக்கு எழுதித் தந்தது என புழுதியை தட்டி எடுத்துக் கூறியுள்ளார்..

இந்தக் கதையை எழுதிய ஆசிரியர் அஜீஸ் நிஸ்யன் என்பவரை துருக்கிய இராணுவம் கைது செய்கிறது..

விசாரணைக்காக கொண்டு வரப்பட்ட பொழுது ஏன் என்னை கைது செய்தீர்கள் என கேட்கிறார்..

நீர் அரசியல் நையாண்டி பண்ணி இராணுவ ஆடசியாளர்களை அவமதித்துள்ளீர் என கூறியிருக்கின்றனர்..

கதாசிரியர் அமைதியாக: ஆக நாட்டின் நிலை இதுவென தெரிந்து தான் கைது செய்தீர்களா? எனக் கேட்டாராம்...!

இன்று எமது நாட்டின் நிலை இதை விட மோசமாகி விடுமோ என அஞ்சியே மக்கள் கிளர்ந்திருக்கிறார்கள்.. டாலர்களுக்காக நாடு காவு கொள்ளப்படுகிறதா.. முதலீடு சுற்றுலா என மொத்தமாகவும் சில்லறையாகவும் நாடு வாடகைக்கு விடப்படுகிறது? பாரிய வெளிநாட்டு கடன்களுடன் மேற்கொள்ளப்படும் உள்கட்டமைப்புகள் தேச மக்களுக்கானவையா? யாருக்கு வரிச்சலுகைகள் வழங்கப் படுகின்றன?

டாலர்களுக்காக தான் நிபுணத்துவம் இல்லாமல் இளைஞர் யுவதிகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பணியாளர்களாக அமர்த்தப் பட்டுக் கொண்டிருக்கிறார்களா..?

மக்களே, இனிமேலும் காத்திருக்க நேரமில்லை, சரியான திசையறிந்து பயணியுங்கள்..!

We need a Change not an Ex-Change!

அரபு மொழியில் இருந்து:

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
23.02.2023

Post a Comment

0 Comments