கலாநிதி அமீரலி,
பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்குக் கடதாசி தட்டுப்பாடென்பதால் பரீட்சைகள் காலவரையின்றிப் பிற்போடப்பட்டுள்ளன என்ற ஒரு செய்தியைப் படித்தபோது சிந்தனைக் கவிஞர் அப்துல் காதர் லெப்பையின் மேற்கூறிய வரிகள்தான் என் ஞாபகத்துக்கு வந்தன. இரண்டாவது உலகமகா யுத்த காலத்தில் நிலவிய பொருளாதார நெருக்கடியைப்பற்றி அவர் விபரித்த விதமே அது.
இலங்கையின் இன்றைய பொருளாதாரச் சீரழிவும் நெருக்கடியும் எவ்வாறு பொதுமக்களைப் பாதித்துள்ளன என்பதை விபரிப்பது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. அதனை வாசகர்கள் ஒவ்வொருவரும் அனுபவிக்கின்றனர் என்பதை அறிவேன். அதை விபரிப்பதால் அவர்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை குறைக்க முடியாது. அதேபோன்று இச்சீரழிவுக்கான காரணங்கள் எவை என்பது பற்றியும் இக்கட்டுரை ஆராயப்போவதில்லை.
எந்த ஒரு நாடும் அதன் அரசாங்கமும் அந்த நாட்டு மக்களைப் புறக்கணித்துவிட்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது. பொருளாதாரம் என்பது மக்களால் மக்களுக்காக உருவாக்கப்படுவது. இவ்வாறான ஒரு பாடத்தை ஜனநாயகத்தைப் பற்றி அரசியல் நூல்கள் கூறுகின்றன. ஆனால் அதை ஓர் அடிப்படைப் பாடமாக பொருளியல் நூல்கள் கற்பிப்பதில்லை. மக்களின் ஒன்றுதிரண்ட உழைப்புச் சக்தியும், முயற்சியும், நுகர்வும், பரிமாற்றமும் இல்லாமல் பொருளாதாரம் இல்லை. அந்த அம்சங்களின் ஒன்றுபட்ட கூட்டின் விளைவே இன்றைய நவீன உலகு. ஆகவே ஒரு நாட்டின் நிரந்தரச் செல்வம் அந்த நாட்டின் மக்களே. அந்த மக்கள் ஒன்றுபட்டால் இமயத்தையும் வீழ்த்தலாம். அவர்களைப் பிரித்துவிட்டால் ஒரு தூசியைக்கூட நகர்த்த முடியாது. இந்த விளக்கத்தின் யதார்த்தத்தை இரண்டு நாடுகளின் துரிதமான பொருளாதார வளர்ச்சியைக்கொண்டு விளங்கலாம். ஒன்று வங்காளதேசம், மற்றது சிங்கப்பூர்.
இலங்கை சுதந்திரம் அடையும்போது வங்காளதேசம் என்ற ஒரு நாடே இருக்கவில்லை. 1971 இல் அந்த நாடு உருவாகியபோது அபிவிருத்தி அடையாத ஒரு பொருளாதாரத்துக்கு இலக்கணமாகவே அந்த நாட்டை பொருளியலாளர்கள் மதிப்பிட்டனர். வறுமை, பட்டினி, கல்வியறிவின்மை, நோய் ஆகிய பிணிகளுக்கு உறைவிடமாக வங்காளதேசம் அன்று விளங்கியது. ஆனால் இன்று 163 கோடி மக்களுடன் பொருளாதாரத்திற் துரித வளர்ச்சிகண்டு இலங்கைக்கே கடன் பிச்சைபோடும் நிலைக்கு மாறியுள்ளதன் இரகசியம் என்னவோ? அந்த நாட்டின் பொருளியலாளர்கள் பலரை நான் அணுகிக் கேட்டபோது அவர்கள் கூறிய ஒரே விடை எவ்வாறு அந்த நாட்டின் பிரதான வளமான மக்கள் பிரயோசனப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதே அப்பொருளாதார வளர்ச்சியின் இரசியம் என்றனர். இலங்கையில் உள்ளதுபோன்று அங்கும் இன மத வேறுபாடுகள் உண்டு. ஆனால் அந்த வேறுபாடுகளை ஒரு புறம் ஒதுக்கிவைத்துவிட்டு, பொருளாதாரப் போராட்டத்தில் அம்மக்கள் ஒன்றுதிரண்டு அந்த நாட்டை கட்டியெழுப்புகின்றனர்.
இது எழுபது ஆண்டுகளுக்கும் மேலான ஒரு சோகக் கதை. சுதந்திரம் கிடைத்ததன்பின் அரசாங்கம் முதலிற் செய்த வேலை இலங்கை மக்களென்றால் யார் என்பதை வரையறை செய்ததே. இந்த வரையறைக்குள்ளிருந்து முதலில் இந்திய வம்சாவழியினரை ஒதுக்கினர். அதன்பின் தமிழினத்தை ஒதுக்க முயன்று ஒரு போரையே உருவாக்கினர். இப்போது முஸ்லிம்களையும் அன்னியர் என்கின்றனர். இறுதியாக, இந்த நாடு சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்ற நிலையில் சுமார் மூன்றிலொரு பகுதி மக்களை ஓரங்கட்டியுள்ளனர். ஆகவே நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இந்த மூன்றிலொரு பகுதியினரின் பூரணமான பங்களிப்பை எதிர்பார்க்க முடியுமா? எல்லா மக்களையும் ஒன்றாகக் கட்டியணைக்காமல் ஒரு பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி காண முடியுமா? சுருக்கமாகச் சொன்னால் இனவாதத்தை வளர்த்துக்கொண்டு பொருளாதார மலர்ச்சி காணமுடியாது. இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் மறுபக்கம் இதுதான்.
சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அச்சாணியாகச் செயற்படுகிறார் இன்றைய ஜனாதிபதி. அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் பேரினவாதத்தை வளர்ப்பதாகவே இருக்கிறது. இன்றைய பொருளாதாரச் சீரழிவு இனவாதம் தந்த பரிசே என்றால் அது மிகையாகாது. உதாரணமாக, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவிக்கு வந்தபோது வடக்குக்கும் கிழக்குக்கும் அதிகாரப் பகிர்வு வேண்டும் என்று தமிழ் மக்கள் கேட்டனர். அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா? தமிழ் மக்களுக்குத் தேவை அதிகாரப் பகிர்வு அல்ல, பொருளாதார அபிவிருத்தியே என்றார். இந்த வார்த்தைகளை நன்றாகச் சிந்தித்துப்பார்த்தால் அவற்றுள் ஒழிந்திருக்கும் இனவாதத்தை உணரலாம். அவரது வார்த்தைகள், தமிழர்களைப் பார்த்து, கும்பிட்டு வாழுங்கள் நீங்கள் குபேரர்களாகலாம் என்பதுபோல் இல்லையா? இந்த அந்தரங்கத்தை முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மை இனங்கள் யாவும் உணர்தல் வேண்டும். இந்தப் பேரினவாத மனப்பாங்கும் அதனை ஒட்டிய செயற்பாடுகளுமே இன்று சர்வதேச அரங்குகளில் இலங்கையின் பெயரைப் பாழ்படுத்தியுள்ளன. ஐ.நா. மனித உரிமைச் சபையின் அறிக்கைகள் இதற்கோர் எடுத்துக்காட்டு.
0 Comments