உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் இருந்து ரஷ்யா நீக்கப்பட்டுள்ளதாக பீபாவும் ஐக்கிய ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கமும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சகலவிதமான சர்வதேச விளையாட்டுப் போட்டிகளிலிருந்தும் ரஷ்யாவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து உலகக் கிண்ண கால்பந்தாட்டத்திலிருந்து ரஷ்யாவை மறு அறிவித்தல்வரை நீக்கியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யூக்ரெய்ன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை கண்டிக்கும் வகையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ரஷ்யாவின் பலம்வாய்ந்த எரிசக்தி நிறுவனமான கெஸ்ப்ரொம் நிறுவனத்துடனான பங்காளித்துவத்தை ஐக்கிய ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கம் முடிவுறுத்திக்கொண்டுள்ளது.
கத்தார் 2022 உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்னோடியாக மார்ச் மாதம் நடைபெறவுள்ள தீர்மானம் மிக்க ப்ளே ஓவ் (ஐரோப்பிய வலயம்) போட்டியில் ரஷ்யாவின் ஆடவர் அணி விளையாடுவதாக இருந்தது.
அதேவேளை, இங்கிலாந்தில் ஜூலை மாதம் நடைபெறவுள்ள ஐரோப்பிய சம்பியன்ஷிப் கால்பந்தாட்டத்தில் விளையாடுவதற்கு ரஷ்ய மகளிர் அணி ஏற்கனவே தகுதிபெற்றுவிட்டது.
'அனைத்து ரஷ்ய அணிகளையும் - தேசிய அணிகளாக இருந்தாலும் சரி அல்லது கழக அணிகளாக இருந்தாலும் சரி - மறு அறிவித்தல்வரை பீபா மற்றும் ஐக்கிய ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்க போட்டிகளிலிருந்து இடைநிறுத்துவதற்கு பீபாவும் ஐக்கிய ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கமும் நேற்று திங்கட்கிழமை 28 ஆம் திகதி தீர்மானித்துள்ளன' என அந்த அமைப்புகளின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் நடைபெறவிருந்த போட்டிகளை நடுநிலையான மைதானங்களில் பார்வையாளர்களின்றி நடத்துவதென முடிவு செய்யப்பட்டிருந்தது, அத்துடன் ரஷ்ய தேசிய கொடி, தேசிய கீதம் ஆகியனவும் தடைசெய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பீபா தனது முன்னைய முடிவை மாற்றிக்கொண்டு உலகக் கிண்ண கால்பந்தாட்டத்திலிருந்து ரஷ்யாவை திங்களன்று வெளியேற்றியது.
'இங்கு கால்பந்தாட்டம் முழுமையாக ஐக்கியப்பட்டுள்ளது. யூக்ரெய்னில் பாதிக்கப்பட்டுள்ள சகல மக்களுடனும் முழு ஒற்றுமையுடன் இருக்கின்றது' என பீபா மற்றும் ஐக்கிய ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கம் ஆகியவற்றின் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'யுக்ரெய்ன் நிலைமை குறிப்பிடத்தக்க வகையிலும் விரைவாகவும் முன்னேற்றம் அடையும் எனவும் மக்கள் மத்தியில் ஒற்றுமை மற்றும் அமைதிக்காக கால்பந்தாட்டம் நேரடி சக்தியாக அமையும் எனவும் இரண்டு சங்கங்களினதும் தலைவர்கள் (ஜியானி இன்பன்டினோ, அலெக்ஸாண்டர் செவெரின்) நம்புகின்றனர்' என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பீபா மற்றும் ஐக்கிய ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களினால் தமக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ரஷ்யா கண்டித்துள்ளதுடன் அது பாரபட்சமான தீர்மானம் என்றும் தெரிவித்துள்ளது.
0 Comments