Subscribe Us

header ads

பெற்றோலும் விலை கூடிய நிலையில் இலங்கையின் இன்றைய (நாளைய) நிலை என்னவாக இருக்கும்

 


ஒன்றில் மக்களிடம் பணம் நிறைய இருக்கும் வாங்குவதற்கு பொருட்கள் இருக்காது. இது இறக்குமதி பொருளாதாரத்தை உடனடித் தீர்வாகவும் சுய உற்பத்தி பொருளாதாரத்தை நீண்ட கால தீர்வாகவும் கொண்டு அமையும்.

இல்லாதவிடத்து மக்களிடம் பணப்புழக்கம் குறைவாக இருக்கும் பொருட்கள் தட்டுப்பாடின்றி சந்தையில் கிடைக்கும். இது மக்களின் தொழிலின்மை மற்றும் வறுமை நிலையை புடம் போட்டுக் காட்டும்.

ஆனால் இன்றைய (நாளைய) இலங்கை மக்களின் நிலை இவை இரண்டிலிருந்தும் வேறுபட்டு மூன்றாவது ஒரு நிலையில் உள்ளது. அதாவது மக்களிடம் பணப்புழக்கமும் இல்லை சந்தையில் பொருட்களும் இல்லை உள்நாட்டு உற்பத்தியும் இல்லை வெளிநாடு இறக்குமதியும் இல்லை. இது ஒரு நாடு எதிர்கொள்ளக்கூடாத மிக மோசமான நிலை. ஆட்சியாளர்களின் கைமீறிய நிலை. இதன் அடுத்த கட்டம் விலை உயர்வு. அது வந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து வறுமை நிலை அதிகரிக்கும். அதுவும் கிட்டத்தட்ட வந்துவிட்டது . அதன் தொடர்ச்சி பட்டினி மற்றும் திருட்டுக் குற்றங்கள் அதிகரித்தல். இதுவும் துளிர்விட ஆரம்பித்துவிட்டது. இதன் உச்ச கட்டமாக உணவுக்காக கொலைகள் இடம்பெறும். ஆட்சியாளர்களால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு குற்றங்கள் இடம்பெறும். சர்வதேச உதவிகள் கிடைக்காவிட்டால் நாடு 100 வருடங்கள் பின்னோக்கி செல்லும் நிலை ஏற்படும்.

மக்களுக்கு இரண்டு தெரிவுகள் தான் உள்ளது. ஒன்று இங்கே இருந்து வறுமைக்கு எதிராக போராடுவது அதாவது உள்நாட்டு உற்பத்திக்கு பங்களிப்புச் செய்து நாட்டை மெல்ல மெல்ல வழமைக்கு திருப்புவது. இப்போதைய சூழலில் இலங்கை சிக்கியுள்ள சர்வதேச கடன் பொறிகளில் இது அசாத்தியமான ஒன்று. மற்றது அந்நியச் செலாவணி வருமானம் மூலம் நாட்டை ஸ்திரத் தன்மைக்கு கொண்டு வருவது. இது இரண்டு பிரிவுகளில் வர வேண்டிய விடயம். முதலாம் பிரிவு அந்நிய முதலீடுகளை கவர்வது. அதாவது சிங்கப்பூர் எவ்வாறு பன்னாட்டு நிறுவனங்களை தங்களது நாட்டில் முதலீடு செய்ய இடம் கொடுத்ததோ அவ்வாறே இலங்கையும் செய்ய வேண்டும். அதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை அவசியம் இருக்க வேண்டும்.அது இலங்கையில் இல்லை என்பது உலகறிந்த உண்மை. மற்றது அந்நியச் செலாவணிக்கான மனிதவள ஏற்றுமதி. விளக்கமாக கூறினால் இலங்கையர்கள் அதிகமாக வெளிநாடுகளுக்கு தொழிலுக்கு செல்ல வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் அந்நியச் செலாவணி வருமானம் நாட்டை பழைய நிலைக்கு கொண்டு செல்ல உதவும்.

வெறுமனே வரி வருமானத்தை மட்டும் நம்பி காலம் கடத்த இனிமேலும் இலங்கையால் முடியாது. கொரோனா உலக வல்லரசுகளையும் பணக்கார நாடுகளையும் சேர்த்துத் தான் பாதித்துள்ளது. ஆனாலும் அந்த நாடுகள் மக்களை பொருளாதார ரீதியாக அடிவாங்க விடவில்லை. இலங்கை போன்ற நாடுகளுக்கு செய்யும் உதவிகளை மட்டுப்படுத்தி உள்ளன. இந்த நிலையில் மோசமான ஆட்சியாளர்களால் சீரழிந்த இலங்கை போன்ற நாட்டுக்கு அந்நியச் செலாவணி வருமானமே ஒரே தீர்வு.அதற்கு இந்நாட்டின் மக்கள் மனதளவில் தயாராக வேண்டும். கொரோனாவும் வறுமையும் பொருட்கள் தட்டுப்பாடும் இந்நாட்டு மக்களை மனதளவில் மிகவும் பாதித்துள்ளது. மக்கள் கடைகளில் பொருட்கள் வாங்குவது வெகுவாக குறைந்துள்ளது. வாகனங்கள் வாங்குவது வெகுவாக குறைந்துள்ளது. நாளை சாப்பிட என்ன கிடைக்கும் என்ற ஏக்கமும் நாளை என்ன பொருட்களுக்கு தட்டுப்பாடு வரும் என்ற பயமும் ஆட்கொண்டுள்ளது. இந்த நிலை மாற குடும்பத்தில் ஒருவர் சரி வெளி நாடு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இன்றைய வறுமையின் தொடர்ச்சி தான் நாளை என்பது வெளிப்படையான உண்மை. நாட்டை நேசிக்கும் ஒவ்வொருவரும் தங்களது வாழ்நாளில் 5 வருடங்களை சரி வெளிநாட்டில் கழிக்க முன்வர வேண்டும்.

Post a Comment

0 Comments