இலங்கையில் தற்பொழுது கொவிட் 19 கொள்ளை நோய் சமூகப்பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் முழு தேசமும் பாரிய நெருக்கடி நிலைக்குள் தள்ளப் பட்டிருப்பதனை நாமறிவோம்.
அரசு, சுகாதார, பாதுகாப்பு, இன்னோரன்ன அத்தியாவஷ்ய சேவைகளுக்கான துறைகள் மற்றும் கொவிட் 19 ஒழிப்பு செயலணி ஆகியன குறைநிறைகளுக்கு மத்தியிலும் தம்மாலான அனைத்தையும் மேற்கொண்டாலும் சமூகப்பரவலை கட்டுப்படுத்துகின்ற மிகப்பாரியதும் சிக்கலும் சிரமங்களும் நிறைந்த பொறுப்பு பொதுமக்களையே சாரும்.
அந்த வகையில் நாடு முழு அளவிலும் பகுதியாகவும் முடக்கப்பட்டுள்ள இந்த காலகட்டத்தில் பொதுவாழ்வில் அதிகரித்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்ற அசாதாரண சூழ்நிலையில் சமூக கேந்திர நிலையங்களான வணக்கஸ்தலங்கள் மஸ்ஜிதுகள் தமது பணியை கடமையை சரிவரச் செய்வது குறித்து அதிகூடிய கவனம் செலுத்துதல் வேண்டும்.
குறிப்பாக அவ்வப் பிரதேசங்களில் உள்ள பொதுசுகாதார அலுவலர்கள், கொவிட் 19 நோய்த்தடுப்பு மற்றும் சுகாதார துறையினர், பாதுகாப்பு துறையினருடன் பூரணமாக ஒத்துழைப்பது முதலாவது விடயமாகும்.
அவ்வப்போது அவர்களை அழைத்து மஸ்ஜித் ஒலிபொருக்கிகளூடாக உரிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதோடு நோய்த்தடுப்பு முதலுதவி ஆலோசனைகளையும் வழங்கப்படும் சேவைகள் குறித்த அறிவிப்புக்களையும் மக்களுக்கு வழங்குதல் வேண்டும்.
சகோதர சமூகங்களுடன் வாழுகிற பிரதேசங்களில் நகரங்களில் சிங்கள மொழியிலும் அவ்வாறான அறிவித்தல்களை மேற்கொள்வதோடு தமக்கு மத்தியில் வாழும் அவர்களுக்கும் சேவைகளை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
(சமாதான சகவாழ்வு நிகழ்சித் திட்டங்கள் என்ற பெயரில் அரசு மேற்கொள்ள வேண்டிய பணிகளையும் சேவைகளையும் விளம்பரத்திற்காக ஏனைய சமூகங்களுக்குள் வலிந்து சென்று இனவெறியர்களை திருப்திப்படுத்துகிற அஞ்சுவதும் கெஞ்சுவதும் போன்ற செயற்பாடுகள் வேண்டப்படாதவையாகும்.)
ஒவ்வோரு ஊரிலுமுள்ள வைத்தியர்கள் துறைசார் உயர்கல்விச் சமூகத்தினர் சமூக ஆர்வலர்களது ஒன்றிணைந்த சேவையை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும், குறிப்பாக மருத்துவ ஆலோசனைகளை வழங்க முடியுமான அவசர அழைப்பு இலக்கங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
அவ்வாறான முழுநேர பகுதி நேர சேவைகளை பணிகளை வழங்குவோரது நலன்களை உறுதிசெய்வதற்கு ஒரு நிதியம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்வதும் கட்டாயமாகும்.
தொடர்ந்தேர்ச்சியாக பலநாட்கள் நாடுமுடக்கப்படும் பட்சத்தில் ஏழை எளியவர் மற்றும் தேவையுடையவர்களுக்கு உலர்உணவு பொதிகளை வழங்குவதற்கான ஒரு பொறிமுறையை தத்தமது மஹல்லாக்களில் ஏற்படுத்திக் கொள்வது அல்லது ஒரு ரேஷன் அட்டை வழங்கும் முறையை ஒழுங்கு செய்வது காலத்தின் கட்டாயமாகும்.
மஸ்ஜிதுகளில் ஐவேளையும் தவறாது அழகிய குரலில் அதான் சொல்வதையும் தொடர்ந்து சுகாதார நடைமுறைகள் குறித்த ஒரு சிறிய (ஓரிரு வினாடிகள், நிமிடங்கள் அல்ல) நினைவூட்டலையும் வழங்க வேண்டும்.
எவ்வித காரணம் கொண்டும் நீண்ட பயான்கள் திலாவத்துக்கள் அறிவித்தல்கள் என மஸ்ஜித் ஒலிபெருக்கிகளை துஷ்பிரயோகம் செய்து ஒலிமாசடைவை ஏற்படுத்தவோ ஏனைய சமூகங்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தவோ கூடாது.
மேற்படி பொதுப்பணிகளை சுகாதார நடைமுறைகளை மீறாது இயன்றவரை ஒன்றிணைத்து விளம்பரங்களுக்கு அப்பால் மேற்கோள்வதும் பயனாளிகளது சுயகெளரவத்தை பாதுகாப்பதும் எமது கடமையாகும்.
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
0 Comments