தேர்தலின் பின்னரான இலங்கையானது மிகப்பெரிய சிக்கலை எதிர்நோக்கவுள்ளது. அது மத ரீதியிலான அடக்கு முறையோ அல்லது கொரோனா தொற்றிலிருந்தான அதிகரிப்போ என்பதை விட, பொருளாதார ரீதியிலான மிகப்பெரிய நெருக்கடியே அது.
இலங்கைக்கு மிக முக்கிய அந்நியச் செலவாணி வருமானங்களாக இருப்பவை ஆடை ஏற்றுமதி, சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டு அந்நியச் செலாவணியாகும். (வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்றோர் அனுப்பும் காசு).
உதாரணமாக ஒரு வீட்டை எடுத்துக் கொள்வோம். அந்த வீட்டில் ஒரு தாய், தகப்பன், அண்ணன், மூன்று தங்கைகள் என்று மொத்தமாக ஆறு பேர்கள் என வைத்துக் கொள்வோம்.
வீட்டில் தாயும், தகப்பனும், மூத்த அண்ணனும் சம்பாதித்தே மொத்த ஆறு பேருடைய வாழ்க்கை வாழ்வாதாரம் ஓடுகிறது என வைத்துக் கொள்ளுங்கள். இவற்றில் அண்ணனும், தகப்பனாரும் வீட்டில் அதிகம் சம்பாதிப்பவராகவும், தாயார் சற்று குறைவாக சம்பாத்திப்பவராகவும் எடுப்போம்.
திடீரென அதிகம் சம்பாதித்த தகப்பனும், அண்ணனும் வேலை இழந்தால் அந்த வீட்டு செலவீனங்களுக்கு என்ன நடக்கும்? தாயாரின் உழைப்பு போதாது. ஒன்றேல் மற்றைய இருவரும் புதிய வேலை தேட வேண்டும். அல்லது கடன் வாங்க வேண்டும். எனினும் அந்தக் குடும்பம் ஊர் முழுக்க கடன்களை வாங்கியிருந்தால்? யாரும் கடன் கொடுக்க முன்வரா விட்டால்?
இந்த நிலையில்தான் இலங்கை உள்ளது. கடந்த வருடம் ஏப்ரல் 21 பிரச்சினைக்குப் பிறகு சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்து, மீண்டும் மெல்ல மெல்ல செப்டெம்பர், ஒக்டோபர்களில் முன்னேற்றமடைந்து வந்த மாத்திரமே இந்த கொரோனாப் பிரச்சினை தலைதூக்க ஆரம்பித்தது.
மார்ச் மாதத்தில் நிரந்தரமாக விமான நிலையத்தை மூடி விட்டார்கள். சுற்றுலாத்துறை படுத்தே விட்டது.
அடுத்த படியான அதிக அந்நியச் செலாவணியை உழைத்துத் தந்தது வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் தான். கொரோனா பிரச்சினையின் காரணமாக இன்று மத்திய கிழக்கு நாடுகளில் பல லட்சக் கணக்கானவர்கள் வேலையிழந்துள்ள அதேவேளை இலங்கையர் பலர் இலங்கைக்குத் திரும்பி வந்தும் விட்டனர். இழந்த வேலைவாய்ப்புக்களை மீண்டும் கட்டியெழுப்புவதென்பது அண்மையில் நடக்காத காரியம். அவற்றுக்குக் காலம் ஆகலாம். எனவே வெளிநாட்டு அந்நியச் செலாவணி உழைப்பும் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது.
இன்று இலங்கை அரசு, இலங்கையிலிருந்தான ஏற்றுமதிகள் பாதிக்கப் பட்டுள்ளதால், டொலரின் ரூபாய்ப் பெறுமதி வீழ்ச்சியடைவதைத் தடுக்க இறக்குமதிகளை கட்டுப் படுத்தியுள்ளது. முக்கியமாக உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருட்கள் இறக்குமதி, வாகன இறக்குமதிகளை கட்டுப் படுத்தி உள்ளது.
இதன் காரணமாக டொலரின் பெறுமதி வீழ்ச்சியடையாமல் பாதுகாக்கலாம். ஆனால் நாட்டில் உற்பத்திகள் நடக்கவில்லை எனில், இறக்குமதிகள் நடக்கவில்லை என்றால் வேலை வாய்ப்புக்கள் பாதிக்கப்படும். ஏற்கனவே இந்த கொரோனா பிரச்சினை காரணமாக பல உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பலர் வேலையிழந்துள்ளனர். இவை எதிர்காலத்தில் பலத்த பொருளாதாரப் பிரச்சினைகளைக் கொண்டு வரலாம்.
கொரோனா பரவி விடும் என்ற தேவையற்ற அச்சம் இலங்கை மக்களிடையே அதிகம் காணப்படுகிறது. இன்று பல நாடுகள் அவற்றைத் தவிர்த்து சமூக இடைவெளிகளைப் பேணி, கடுமையான கட்டுப்பாடுகள், முகக் கவசங்களை போட வற்புறுத்தி பொருளாதார செயற்பாடுகளை அனுமதிக்கிறது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் இவற்றையே செய்கின்றன. டுபாய், மாலைதீவுகள், போன்ற tourism க்கு பெயர்போன நாடுகள் மெல்ல மெல்ல Tourist ஐ வரவேற்க ஆரம்பித்து விட்டனர்.
ஆனால் இலங்கையோ, சைனாவிலும் இத்தாலியிலும் கொரோனா வைரஸ் இருந்த போது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துக் கட்டுப் படுத்தி விட்டு இப்போது எந்தக் கட்டுப்பாடுகளுமின்றி திறந்து விட்டிருக்கிறது.
இதேவேளை இவை அரசியல் காரணங்களுக்காகவும், தேர்தலை முகங்கொடுக்கவும் என்று கூறப்பட்டாலும், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போர் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்க வேண்டி வரும். ஒருபக்கம் இந்தத் தேர்தலில் தோல்வியடையும் கட்சி ஏதோவொரு வகையில் தப்பித்து விடுவர் என்றும் சொல்லலாம்.
ஏலவே சுற்றுலாத்துறை வருமானம் இன்று பூச்சியத்தை அடைந்துள்ளதால் அதில் முதலீடு செய்துள்ள பலர் அதை விட்டு வெளியேரலாம். பல ஆயிரக் கணக்கான தொழில் வாய்ப்புக்கள் இழக்கப்படலாம். இன்னொரு பக்கம் மத்திய கிழக்கிலிருந்தோ ஏனைய நாடுகளிலிருந்தோ தொழிலை இழந்து வருபவர்களும் இந்த வேலைவாய்ப்பற்றவர்கள் கூட்டத்தில் சேருவர். அதேவேளை கட்டுப்படுத்தப் பட்டுள்ள இறக்குமதிகள், வியாபார நடவடிக்கைகள் உள்நாட்டிலும் வேலை வாய்ப்புக்கள் இழப்பை ஏற்படுத்தலாம்.
அந்நியச் செலாவணி பாதிப்பு, வேலையின்மை அதிகரிப்பு, ஏற்றுமதி, இறக்குமதிகளில் பாதிப்பு இவை இலங்கையை மேலும் கடன் சுமைகளுக்குள் தள்ள வாய்ப்புள்ளது.
கொரோனா நோயினால் ஆயிரக் கணக்காணவர்கள் இறந்தாலும், எதிர்வரப் போகும் பஞ்சம் பட்டினி அதை விட நெருக்கடியான சூழலுக்கு வழிவகுக்கும். குறைந்தபட்சம் ஏனைய நாடுகள் போல கட்டுப்பாடுகளுடனான சுற்றுலாத்துறையை அனுமதித்தல், வெளிநாட்டு முதலீடுகளை வரவழைத்தல் போன்ற நடவடிக்கைகள் மூலமாவது மிஞ்சப்போகும் கோமணத்தைக் காத்துக் கொண்டால், இலங்கை அரசினது மானம் காப்பாற்றப்படும்.
மாறாக மேலும் கடன்களை எடுக்க நேரிட்டால், அவை இன்னுமின்னும் பொருளாதார சிக்கல்களையே ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
-Sabith Thaha-
0 Comments