Subscribe Us

header ads

கொரோனாவா அல்லது நானா ஒரு கை பார்க்கிறேன் - ஜனாதிபதி On Action சவாலையும் வெற்றி கொள்வேன்

(எம்.மனோசித்ரா)

கொவிட் - 19 வைரஸ் உலகலாவிய ரீதியில் முற்றாக ஒழிக்கப்படும் வரை இடைக்கிடை நாட்டினுள் பரவல் தீவிரமடைவதைக் கட்டுப்படுத்தி நாட்டு மக்களை பாதுகாப்பதற்கான சவாலை வெற்றி கொள்வதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

கொவிட்-19 வைரஸ் பரவலோடு உலகில் பெரும்பாலான நாடுகளுக்கு முன்னர் அதனை ஒழிப்பதற்கு பொறுப்புடைய அரசாங்கம் என்ற வகையில் வெற்றிகரமாக நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன் போது வௌ;வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது. சிறந்த திட்டங்களுடன் அவை ஒவ்வொன்றையும் வெற்றி கொள்ள முடிந்தது.

தனிமைப்படுத்தல் நிலையங்கள் தொடர்பில் இதற்கு முன்னர் எந்த நாடுகளும் அறிந்திருக்கவில்லை. அதனை நாமே ஏற்படுத்தினோம். எனினும் அதனை தற்போது பலர் மறந்துள்ளனர்.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கொவிட்-19 தொற்று ஏற்பட்டு அதனால் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக கொவிட்-19 ஒழிப்பிற்காக விஷேட ஜனாதிபதி செயலணியுடனான சந்திப்பு நேற்று செவ்வாய்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவதுறை நிபுணர்கள் , இராணுவம் , புலனாய்வுப்பிரிவு மற்றும் பொலிஸ் என்போரை உள்ளடக்கி கடந்த ஜனவரி 26 ஆம் திகதி கொவிட் ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டது.

அரசிற்கு தலைமைத்துவம் வழங்கி தீர்மானங்களை எடுத்தல் மற்றும் அனைத்து துறைகளினதும் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்ளல் சவால்களை வெற்றி கொள்வதற்கு ஏதுவாக அமைந்தது. 74 நாடுகளைச் சேர்ந்த 16 279 பேரை நாட்டுக்கு அழைத்து வந்து தனிமைப்படுத்தி அதன் பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்காக 70 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்கும் போது பிரதேசவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இத்தாலி , தென்கொரியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருகை தந்தவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திய போது அவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது போன்று எதிர்காலத்திலும் இவ்வாறான சவால்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தாலும் அவற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான பொறுப்பை கைவிடப் போவதில்லை.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இனங்காணப்பட்ட நோயர்களுடன் தொடர்டபுகளைப் பேணியவர்கள் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்புகளைப் பேணிய அடுத்தடுத்த 4 கட்டங்களிலுள்ளவர்களும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையைக் கட்டுப்படுத்துவதோடு எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய சவால்களுக்கும் முகங்கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது.

பி.சி.ஆர். பரிசோதனைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு சமூகத்தில் பரவல் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். அத்தோடு கொரோனா ஒழிப்பிற்காக தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்படுபவர்களுக்கு மதிப்ப்பளிப்பதாகவும் இதன் போது ஜனாதிபதி தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி , ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜயசுந்தர , ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்குபற்றினர்.

Post a Comment

0 Comments