உலகளாவிய அளவில் வளர்ந்து வரும் இஸ்லாமிய வெறுப்புவாதத்தைக்
கட்டுப்படுத்தவும், இத்தகைய செயல்பாடுகளை அதன் வேரிலிருந்து ஒழிக்கவும் ஒரு
திட்டவரைவை உருவாக்க சவூதி அரேபியா ஐக்கிய நாடுகள் சபைக்கு அழைப்பு
விடுத்துள்ளது.
ஐ.நா சபைக்கான சவூதியின் தூதுக்குழுவில் உள்ள மனித உரிமைகள் பிரிவின்
தலைவர் மிஷால் அல்-பாலாவி, இனவெறி, இனப் பாகுபாடு, பிற நாட்டினர் மீதான
வெறுப்பு மற்றும் சகிப்புத்தன்மையற்றிருத்தல் ஆகியவற்றின் சமகால வடிவங்கள்
குறித்த ஐ.நா. சிறப்பு அறிக்கையாளரான ஈ.டெண்டாய் அச்சியூமிடம் (E. Tendayi
Achiume) வைத்துள்ள கோரிக்கையில், இனப் பாகுபாடு மற்றும்
அசகிப்புத்தன்மையின் சமகால வடிவமான “இஸ்லாமிய வெறுப்புவாதம்”
(Islamophobia) என்ற நிகழ்வின் மீது தொடர்ந்து சிறப்புக் கவனம்
செலுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.
மிஷால் அல்-பலாவி மனித உரிமைகள் பேரவையில் ஆற்றிய உரையில், “இனவெறி,
இனப் பாகுபாடு மற்றும் பிறநாட்டினர் மீதான வெறுப்பு ஆகியவை புழங்கும் இடமாக
இணையம் மாறியுள்ளது. இணையத்தைப் பாதுகாப்பானதாக மாற்றுவதற்காகவும்,
கருத்துச் சுதந்திரம் மற்றும் கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம்
ஆகியவற்றிற்கும், இனவெறி மற்றும் இனப் பாகுபாட்டிற்கு எதிராகப்
போரிடுவதற்கும் இடையிலான துல்லியமான இடைவெளியைப் பராமரிப்பதற்கும் உரிய
தீர்வுகளைக் கண்டறிய முயற்சியெடுப்பது தேவையானதாக உள்ளது.” எனக்
கூறியுள்ளார்.
அல்-பாலாவி மேலும் கூறுகையில், இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் இனப்
பாகுபாட்டின் அடிப்படையில் கருத்துக்களைப் பரப்புவது, தகவல்
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இனவெறி மற்றும் வெறுப்பைத் தூண்டுவது ஆகியவை
தண்டனைக்குரிய குற்றங்கள் ஆகும். இந்தக் குற்றங்களை செய்பவர்கள் ‘தகவல்
குற்றத் தடுப்பு முறைமை 2007’ உள்ளிட்ட சவூதி சட்டங்களின்படி
தண்டனைக்குள்ளாவார்கள். தகவல் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி
மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிப்பவர்களுக்கு ஒரு வருடத்திற்கு மிகாமல்
சிறை தண்டனை அல்லது 500,000 சவூதி ரியால்களுக்கு மிகாமல் அபராதமும்
விதிக்கப்படும். இன, மத மற்றும் தேசிய வெறுப்பை வளர்க்கும் எந்தவொரு
அமைப்பும் சட்டத்தின் படி தடை செய்யப்படும் எனக் கூறியுள்ளார்.
0 Comments