Subscribe Us

header ads

ஜனாதிபதி தேர்தலுக்கு முன் கைது செய்யப்பட இருந்த ஜனாதிபதி கோட்டாபயவை காப்பாற்றியது நானே

ரணில்-மைத்திரி தலைமையிலான கடந்த நல்லாட்சி அரசாங்கம் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கைது செய்ய முயற்சித்தபோது அவரை தாமே காப்பாற்றியதாக முன்னாள் நீதியமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜேதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதனூடாக தாம் ஒருபோதும் சட்ட அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இன்றைய தினம் வழிபாடுகளில் ஈடுபட்டப் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக முன்னைய அரசாங்கத்திலிருந்தவர்கள் மற்றும் இராஜதந்திர மட்டத்திலிருந்தவர்களை கைது செய்வதற்காக பொலிஸாரிற்கு உத்தரவிட்டவர்களாக மோசடி தடுப்பு இயக்கத்தின் உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, பாட்டலி சம்பிக்க ரணவக்க, அநுரகுமார திஸாநாயக்க, சரத் பொன்சேகா ஆகியோர் செயற்பட்டனர்.
இவர்களே அன்று கோட்டாபய ராஜபக்சவை கைது செய்வதற்கும் உத்தரவிட்டார்கள். பொலிஸிற்குப் பொறுப்பான அமைச்சரோ அல்லது, ஜனாதிபதியோ இந்த உத்தரவை பிறப்பிக்கவில்லை.

அதற்கான அதிகாரமும் அவர்களுக்கு இல்லை. பொலிஸார் சுயாதீன விசாரணை நடத்தி எடுக்க வேண்டிய முடிவாகும். மாறாக மற்றவர்களைக் கைது செய்யும்படி உத்தரவிட அரசியல்வாதிகளுக்கு அதிகாரம் கிடையாது. பயங்கரவாத விசாரணைச் சட்டத்தின்படி அவன்காட் நிறுவன ஒப்பந்தத்திற்கு அனுமதியளித்தமையே கோட்டாபயவுக்கு எதிரான குற்றச்சாட்டாகும்.

அதற்கான அனுமதியை பாதுகாப்புச் சபையே வழங்கியிருந்தது. அதன் பிரதிபலனாக 16,000 மில்லியன் வெளிநாட்டு செலாவணி இலங்கைக்கு கிடைத்தது. அதில் 4,000 மில்லியன் ரூபா அரசாங்கத்திற்கு வரி வருவாயாகக் கிடைத்தது. நாட்டிற்கு வெளிநாட்டு வருமானத்தைக் கொண்டுவர பாதுகாப்புச் சபை ஊடாக அனுமதியளித்தமையே பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்படி குற்றச்சாட்டாக முன்வைத்து கோட்டாபயவை கைது செய்ய ஆலோசித்தார்கள்.

இது குற்றமா? ஆகவே அப்போதைய நீதியமைச்சராக நான் சட்டத்தை துஸ்பிரயோகம் செய்யவில்லை. மாறாக குற்றம் செய்யாத நபர் அதேபோல தீவிரவாதத்திலிருந்து நாட்டை காப்பாற்றியவரான கோட்டாபய ராஜபக்சவை கைது செய்து சிறை தள்ளுவதில் இருந்து நான் தடுத்தேன். அதனூடாக நாட்டிற்கு நான் நீதியை செய்துள்ளேன் என நினைத்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments