சவூதி ராயல் காவல்படையின் பெண் உறுப்பினர் ஒருவர் தனது சக ஆண் ஊழியருடன் இணைந்து, உயர் நிலை அரசு அலுவலகம் ஒன்றில் கடமையைச் செய்யும் புகைப்படம் வெளியானதைத் தொடர்ந்து சமூக ஊடகங்கள் வாயிலாக மக்கள் தங்கள் பெருமையையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
சவூதி ராயல் தரைப்படைகள், விமானப்படை, சவூதி அரேபியக் கடற்படை, வான் பாதுகாப்புப் படைகள், ஏவுகணைப் படைகள் மற்றும் ஆயுதப்படையின் மருத்துவ சேவைகளில் லான்ஸ் கார்போரல்கள், கார்போரல்கள், சார்ஜென்ட்கள் மற்றும் சார்ஜென்ட் பணியாளர்கள் போன்ற பணியிடங்களில் பெண்களும் இணைந்து இராணுவத்தில் பணியாற்றலாம் என்று சென்ற வருடம் அக்டோபரில் சவூதி அரசு அறிவித்தது.
அதன்படி, விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் மற்றும் நேர்காணல்களுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது பெண்களை தரவரிசையில் முன்னேற அனுமதிக்கும் முதல் முன்னெடுப்பு ஆகும்.
இந்த முன்னெடுப்பு சவூதி அரேபியாவின் ‘விஷன் 2030’ திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதை வலியுறுத்துவதோடு, அவர்களுக்கு அதிக அளவில் தலைமைத்துவ பதவிகளை வழங்குவது மற்றும் பல்வேறு துறைகளில் பெண்கள் ஈடுபட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கிறது.
போதைப்பொருள் இயக்குநரகம், சிறைச்சாலை இயக்குநரகம், குற்றவியல் சான்றுகள் மற்றும் சுங்கத்துறைகள் உள்ளிட்ட பொதுப் பாதுகாப்புத் துறைகளில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் சவூதி பெண்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments