Subscribe Us

header ads

திகில் நிறைந்த சுற்றுலா வேண்டுமா “ஹவாகல” மலைக்கு செல்லுங்கள் (வீடியோ இணைப்பு)


(திகில் அனுபவம்)இலங்கையின் சப்ரஹமுவ மாகாணத்தின் ரத்னபுர மாவட்டத்தில் உள்ள பெலிகுல் ஓயா எனும் அழகிய மலைக்கிராமத்தில் உள்ள மலைத்தொடரான “ஹவாகல” மலைக்கு நண்பர்கள் 10 பேருடன் மலையேற்றத்திற்காக சென்ற ஒரு நண்பரின் அதிர்ச்சியூட்டும் திகில் அனுபவம்

குறிப்பு- முழுமையாக படித்தால் ஒரு மலையேற்றம் சென்று வந்த உணர்வு ஏற்படும்

பத்து பேர் ஒரு காட்டில் வழி தவறி குத்துயிரும் குலையுயிருமாக ஊர் திரும்பிய ஒரு ஜீவ மரண போராட்டம். அன்றைய நாளை ஒருமுறை முழு மூச்சுடன் நினைத்துப்பார்த்து பெருமூச்சு விட்டபடி அட்டைக்கு இறையாகிய எங்கள் அத்தனை பேரையும் சாட்சியாக கொண்டு கதையை ஆரம்பிக்கின்றேன்.

பட்ட கஷ்டத்தை போலவே கதையும் கொஞ்சம் நீளம்…..!


தொகுப்பு - நண்பர் மகீன் சுப்ரமணியம்





வீடியோ வடிவில் காண எமது Tamil Youtube Traval Channel ஐ மறக்காமல் Subscribe செய்யுங்கள்

h


#ஏன்_இந்த_ட்ரிப்


என்ன தான் இலங்கையின் மத்திய மலை நாட்டில் ஏறக்குறைய அத்தனை மலைகளையும் ஏறி கடந்திருந்தாலும் சென்று வந்த அத்தனை ட்ரிப்பிலும் ஒரு குறை இருந்தது. ஒவ்வொரு பயணத்திலும் எவனாவது ஒருவன் குறைவான். ஒன்பது பேரும் ஒன்றாக சேர்ந்து சென்ற முதல் ட்ரிப் இது தான். அதற்கு முக்கியமாக இருந்த காரணம் நம்மில் மூவர் அடுத்த சில மாதங்களில் வெளிநாடு பயணத்துக்கு தயாராகியிருந்தோம். ஆகவே இது ஒரு பிரியாவிடை ட்ரிப். எந்த அளவுக்கு எங்களுடைய அலப்பறை இருந்தது என்றால் எங்களை குரூப்பாக படம் பிடிக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு நண்பனை நாங்கள் அழைத்து சென்றிருந்தோம். ( மன்னிச்சிரு மாப்புள அது தான் நெசம் ). ஆகவே இந்த பயணக்கட்டுரையை நான் அவனுக்கு சமர்பிப்பது தான் முறையாக இருக்கும். Nanda Karthigeshan 😛

Lets start the journey folks 😉


#அஹா_ஹாவாகல.

கதை நிகழும் ஆண்டு 2017 may 18.



”ஹாவாகல“. (ஹாவா என்றால் சிங்களத்தில் முயல்) இது தான் எங்களை வைச்சி செய்த மலை. ஆனால் அதற்கு முன்னால் ”ஹன்த்தான” என்ற இன்னொரு மலையை பற்றி சொல்லியே ஆகவேண்டும். ஒவ்வொரு முறையும் இங்கு தான் செல்ல வேண்டும் என்று திட்டமிடுவோம் ஆனால் கடைசி தருணத்தில் இடம் மாறிவிடும். அப்படி வழக்கம் போக ஹன்த்தானைக்கு செல்ல தான் இந்த ட்ரிப்பும் திட்டமிடப்பட்டது. அப்போது பார்த்து தான் நண்பன் ஒருவன் ஹாவாகலையை அறிமுகப்படுத்தினான். தேடி பார்த்ததில் அந்த மலையை யாரும் பெரிதாக explore செய்ததாக தெரியவில்லை. ஹாவாகல மலையை ஏற “GUIDE” இல்லை. மலைக்கு கீழ் இருக்கும் கிராமவாசிகளிடம் கேட்டு போக முடியும் என்று கேள்வி பட்டோம். ஏற்கனவே பல மலைகள் ஏறிய அனுபவம் உண்டு என்ற ஓவர் கான்பிடன்ஸ்சுடன் ஏகமனதாக எல்லோரும் ஓக்கே கூறினோம். சனிக்கிழமை முன்பகல் மலையேற ஆரம்பித்து இரவு அங்கேயே கேம்ப் செய்துவிட்டு ஞாயிற்று கிழமை முன்பகல் மீண்டும் கொழுப்புக்கு பஸ் பிடிக்க வேண்டும் இது தான் எங்களின் எளிய திட்டம்.


#மலைக்கு_கீழ்.

எல்லோரும் ஒன்று சேர்ந்த முதல் ட்ரிப் என்றபடியால் எனெர்ஜி நிலை சற்று அதிகமாகவே இருந்தது. பலாங்கொடை டவுன் வரை பஸ்சில் வந்திறங்கியாச்சு. அங்கிருந்து உள்ளூர் ட்வுன் பஸ் ஒன்றை பிடித்து ஹாவாகல மலை பிரதேசத்துக்கி கீழ் வந்து விட முடியும். அந்த டவுன் பஸ் பயணம் மிக அழகானது. ஒரு கட்டத்துக்கு மேல் மண் ரோடு தான். பஸ்சில் பாதிக்கு மேல் நாங்கள் தான் இருந்தோம். ஊர் மக்களிடம் ஹாவாகல மலையை பற்றி பேச்சுகொடுத்ததில் ஒரு முக்கியமான தகவல் கிடைத்தது,. மலையின் அடிவாரத்தில் ஒரு கடை இருக்குமென்றும் அதில் உள்ள நாய் அங்கே யார் மலையேற வந்தாலும் வழிகாட்டுமென்றும் குறிப்பிட்டார்கள். சுவாரஸ்யமான தகவலாக தான் இருந்தது. அன்பே சிவம் படத்தில் ஒரு பஸ் விபத்துக்கு காரணமாக இருக்குமே நாய் அதன் வம்சாவழி தான் இவனும். இந்த கதையின் கர்த்தா இவர் தான்.



#Chooty_ஆவா!


அவர்கள் சொன்ன அந்த கடைக்கு வந்து சேர்ந்தோம். முழுக்க முழுக்க சிங்கள பிரதேசமது. கடையில் இருந்த அம்மா அன்பான மொழியில் பேசினார். மலை ஏறுவது ஒன்றும் பெரிய விடயம் இல்லை என்றும் சென்னார். Chootyயும் உங்களோடு வரும் என்று அழைத்தார். கபிலமும் வெள்ளையும் சேர்ந்த நிறத்தில் கட்டுமஸ்தான உடல் வாக்குடன் ஹஸ்கி வகை நாய் இனத்தினை போல தோற்றம் உள்ள ச்சூட்டி எங்கள் முன் வந்து நின்றான். அப்பறம் என்ன ஜாலியாக கிளம்ப வேண்டியது தான் என்று மதியவேலை உணவை சீக்கிரம் முடித்துக்கொண்டோம். அதற்கிடையில் Chooty எங்கள் அனைவரோடும் நண்பனானான்.



#சகுனம்

பயணம் ஆரம்பித்தது தான் மிச்சம் மழை பிடித்துக்கொண்டது. மலை ஏறும் போது மழை பெய்வது போலான மல பாயிற விசயம் வேறு எதுவும் இல்லை. சரி என்ன செய்ய என்று மெல்ல மெல்ல அடியடுத்து வைத்தோம். ஒரு ஐந்து நிமிடம் ஆகியிருக்கும் முன்னால் சென்றவன் தெரியாமல் ஒரு பெரிய சைஸ் கல்லை பிடித்து ஏற பார்த்ததில் அந்த கல் அப்படியே பேர்த்துக்கொண்டு உருண்டேடி பின்னால் வந்த நண்பனின் காலை பதம் பார்த்தது. பெரு விரலில் ரெத்தம் பீச்சிட்டது. ”ஆஹா நல்ல சகுனம் டா” என்று எவனே சொன்னது காதல் விழுந்த நியாபகம்.

#மழையோடு_மலை

Chooty எங்களுக்கு முன்னால் செல்ல நாங்கள் பத்து பேர் அவனுக்கு பின்னால் வந்தோம். மலை ஏற ஏற ஒரு விடயம் தெரிந்தது, கண்டிப்பாக ”கைட்” இல்லாமல் இந்த மலையை ஏற முடியாது. மழையும் ஒரு பக்கம் கூடிக்கொண்டே செல்ல பயணம் கடுமையானது. எங்கள் எல்லோருடைய தோளிலும் பெரிய பைகள் இருந்தது. மழை நீரில் ஊரி அது இன்னும் கனமாக மாறியது. Chootyயின் வேகத்துக்கு எங்களால் போக முடியவில்லை அது தான் உண்மை. ஆனால் அதே சமயம் Chootyயின் போக்கும் சற்று விசித்திரமாக தான் இருந்தது. அவன் பல வழிகளில் சென்று மோப்பம் பிடித்த பின்னரே சரியான வழிக்கு திரும்பி வருவான். ஆகவே நான் அவனோடு முன்னால் சென்றேன். மீதி நண்பர்கள் இரண்டு குழுவாக பிரிந்து பின்னால் வந்துகொண்டு இருந்தார்கள். உச்சிக்கு போக போக சுற்றிலும் ரம்மியமான காட்சியாக இருந்தது. பல பல மலை சிகரங்களை காணக்கூடியதாக இருந்தது உடல் முழுதாக மழையில் நனைந்து பனியில் வெடவெடத்தது. ” நெஞ்சே எழு” பாடலை முனு முனுத்த படி நடந்து சென்றது இன்னும் நினைவில் இருக்கிறது.



#திஸ்_இஸ்_ஹெவன்.


இரண்டு மணி நேர பயணத்து பின்னர் மலை உச்சிக்கு வந்ததை உணர முடிந்தது. ஆனால் Chooty மறுபடியும் ஒரு அடத்தியான காட்டு பகுதிக்குள் நுழைந்தான். எங்களுக்கு ஏதும் புரியவில்லை ஆனால் வேறு வழியும் இல்லை அவன் பின்னாலேயே சென்று அந்த காட்டுப்பகுதியை கடந்தோம். அதை சொர்க்கம் என்று தான் சொல்ல முடியும் நான் இன்றுவரை சென்று வந்த பயணங்களில் அழகுக்கு முதல் இடம் ஹாவாகல தான்.

#இரவு_குளிர்


மலை உச்சியை அடைந்த போது கிட்டதட்ட இருட்டி இருந்தது. மிக மும்முரமாக கூடாரம் கட்டும் வேலையில் இறங்கினோம். எங்கள் வாழ்கையில் கழித்த மிக கடுமையான இரவுகளில் அதுவும் ஒன்று. இரவு முழுக்க சாரல் மழை பெய்த படி இருக்க டென்ட் நனைந்து நெற்றி பொட்டில் ”டொபுக் டொபுக்” என்று நீர் வழிந்துக்கொண்டே இருந்தது. Chootyஎவ்வளவு அழைத்தும் டென்ட் உள்ளே வரவில்லை. அவன் அவனுக்கான ஒரு இடத்தை கண்டறிந்திருக்க வேண்டும் என்ன இருந்த்தாளும் ”கமே கொல்லா” அல்லவா.



எங்கள் ஆடைகள் போர்வைகள் என எல்லாம் நனைந்து ஈரமாக இருந்ததால் குளிர் ரெத்தத்தை உரைய வைத்தது. ஒருவர் மாறி ஒருவர் கட்டிப்பிடித்து உருண்டு உடலை சூடாக்க முயற்சித்தோம். ஏதோ விசித்திரமான விலங்குகளின் சத்தம் வேற கேட்டுக்கொண்டு இருந்தது. என்ன நடந்தாலும் விடிந்தால் தான் சுற்றி என்ன இருக்கிறது என்பதை சரியாக பார்க்க முடியும் அதுவரை தூங்க முயற்சிப்போம். கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்….!


#விடியுமா?

இரவெல்லாம் போராடி ஒரு 3 மணி நேரம் தான் தூங்கியிருப்போம். சூரியனின் இளம் சூட்டை டெண்ட் உள்ளே உணர முடிந்தது. விடிய ஆரம்பித்ததுமே எல்லோரும் எழும்பிக்கொண்டோம் வெளியே ஒவ்வொருவராக வர ஆரம்பித்ததுமே அந்த சூழலின் அழகு உற்சாகத்தை ஏற்படுத்தியது. மலை உச்சியில் இருக்கும் ஒரு சிறிய சமவெளி அது. சுற்றிலும் பறந்து கிடப்பது வானமும் மலைகளும் தான்.

ஹாவாகலையின் விசேஷம் என்னவென்றால் மேகங்களும் நாமும் ஒன்று சேர பயணிக்க முடியும் அப்படியே அது நம்மை உரசிக்கொண்டு நகர்ந்து செல்லும். ஒரு பக்கம் கொண்டு வந்த முட்டையை (பாதிக்கு மேல் உடைந்து நெருங்கிவிட்டது) பொறித்து அதை பாணுடன் உண்ண ஆரம்பித்தோம். Chootyயும் சாப்பிட்டான்.


#காலை_கக்கா.



சரியாக தான் வாசித்தீர்கள் அது காலை கக்கா தான். காடு என்று வந்து விட்டால் கண்ட இடத்தில் கழிக்க முடியும். கையில் தண்ணீர் பாட்டிலுடன் நானும் நண்பனொருவனும் கழிக்க இடம் தேடி அமர்ந்தோம். கழித்து முடித்து கழுவி விட்டு எழுந்ததும் Chooty அதை உண்டு விட்டான். Shit! சரி போகட்டும் என்று விட்டாலும் பின்னால் Chooty எங்களை வழி தவறி இக்கட்டில் மாட்டி விட்டதுக்கு இந்த கக்கா தான் காரணம் என்று ஒரு கருத்து உலாவியது. அது கன்பியூஸ் ஆகும் என்று தெரிந்திருந்தால் திண்ண விட்டிருக்க மாட்டோம் என்ன செய்ய.

சிறிது நேரத்தில் ”போட்டோ ஷூட்” வேலைகளை ஆரம்பிக்க DPகளும் ஃப்புரபைல் பிக்குகளும் பறந்தன. ஆளுக்கொரு பக்கம் Chootyயுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். நான் முன்பே சொன்னது போல அந்த நல்ல நண்பனின் உதவியுடன் சில மறக்க முடியாத குரூப் பிக்களும் எடுக்க பட்டன.

#ராங்_டர்ன்

நேரம் காலை பத்து மணியை நெருங்க நாங்களும் மூட்டை முடிச்சியை கட்டிக்கொண்டு இறங்க தயாரானோம். பகல் சாப்பாட்டுக்கு கீழே சென்றுவிட வேண்டும் என்பது தான் திட்டம். நடந்தது வேறு.

எங்களை சுற்றி அடர்த்தியாக வளர்ந்த காடுகள் தான் இருந்தது. எந்த வழியாக நுழைந்து வந்தோம் என்பது சரியாக நினைவில் இல்லை வழக்கம் போல Chooty முன்னால் போக எல்லோரும் அவனை பின் தொடர்ந்தோம். இந்த இடம் தான் நாங்கள் வழி மாறிய இடம். ஆமாம் ஆரம்பத்திலேயே எந்தவித குழப்பமும் இல்லாமல் சரியாக பிழையான வழியை தேர்ந்தெடுத்துவிட்டோம். பின்னாட்களில் மீண்டும் இங்கு வந்த போது தான் தெரிந்தது நாங்கள் மலை ஏறிய திசைக்கு நேர் எதிர் திசையில் இறங்க ஆரம்பித்திருக்கிறோம் என்று. எங்கு போய் சொல்ல!



#தவறி_விட்டோம்.

பயணம் ஆரம்பித்த சற்றைகொல்லாம் லைட்டாக சந்தேகம் வர ஆரம்பித்தது. நாம் கடந்து வந்த காடு போல இது இல்லையே என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் ஊற்றெடுத்தது. அதனால் என்ன Chooty தானே எங்களை சரியாக இங்கு கொண்டு வந்து சேர்த்தான் அதே போல பத்திரமாக இறக்கியும் விடுவான் என்று நம்பிக்கை இருந்தது. சில வேலை இது short cutஆக இருக்கலாம் என்று யாரோ சொன்னது நினைவுக்கு வருகிறது.

நேரம் ஆக ஆக பயணிப்பதற்கே பாதை இல்லாத காடாக அது தொன்பட்டது. Chootyயின் நடையில் தெரிந்த தளர்வு தவறான வழியில் வந்துவிட்டோம் என்பதை உணர்த்தியது. திரும்பி போக கூட முடியாத அளவு எங்கு திரும்பினாலும் ஒரே மாதிரியாக தோன்றியது. சரியான வழி எங்கோ பக்கத்தில் தான் இருக்க வேண்டும் ஆகவே போகின்ற வழியிலேயே போய் சரியான வழியை கண்டறியலாம் என்று முன்னோக்கி நகர்ந்தோம். இந்த கட்டத்தில் இருந்து பத்து பேரும் Chootyக்கு “கைட்” ஆனோம்!



சுமார் ஒரு மணி நேர பயணத்துக்கு பின் ஒரு நீர் வீழ்ச்சியின் சிறிய கிளை கண்ணில் பட்டது. அதை பின் தொடர்ந்து அந்த வழியிலேயே சென்றால் எதாவது குடியிருப்பு கண்ணில் தென்படுட வாய்ப்பிருக்கு என்ற ஜென்ரல் நாலேஜுடன் அதோடு ஒட்டி பயணித்தோம். நதிகளை ஒட்டி தான் நாகரீகமே ஆரம்பித்தது அனால் இந்த ஊற்று திடீர் என கற்களுக்குள் மறைந்து காணாமல் போய் விட்டது. புஸ்ஸ்ஸ்…!

#கடைசியாக_ஒரு_கால்.


கூகுல் மாப்பில் பறந்த பச்சை மயமான ஒரு பகுதிக்குள் நாங்கள் இருக்கிறோம் என்பது மட்டும் தான் தெரிந்தது. அந்த பச்சை பறப்பு முடியும் இடத்தில் அதாவது கிராமம் இருக்கலாம் என அனுமானித்த இடத்தின் திசையை மட்டும் அறிந்துக்கொண்டு அது வழி நடக்கலாம் என நண்பன் ஒருவன் சொல்ல எல்லோரும் அது படி செய்ய ஆரம்பித்தோம் என்னளவில் கூகுல் மேப் மீது எனக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை. ஆனால் அது தவிற வேறு வழியும் இல்லை.

பகல் பொழுதை அடைந்திருந்தோம். உச்சி வெயில் மண்டையை பிழந்தது. பலருக்கு பசி மயக்கம், சிலருக்கு வழி தயக்கம் இன்னும் சிலருக்கு வாழ்கையை நினைத்து கலக்கம். அனால் யாருமே எதையுமே காட்டிக்கொள்ளவில்லை. பயத்தை கண்களில் காட்டியதோடு சரி வார்த்தைகளில் காட்டாது முன்னேறி நடந்தோம். பின்குறிப்பு என்னவென்றால் நாங்கள் கூட்டி வந்த அந்த புது நண்பனின் கன்னி ட்ரிப் இது. கதிகலங்கி போய் விட்டான் அவன்.

காடு என்னமோ பச்சை பசேலென்று தான் இருந்தது ஆனால் தின்ன ஒரு பழம் இல்லை. தெரிந்த ஒரு மரமில்லை. தண்ணீரை மட்டும் குடித்துக்கொண்டு முன்னேறினோம். Chootyயும் எங்களுடனேயே சேர்ந்து வந்தான்.



நிலைமையை கருத்தில் கொண்டு சிக்னல் கொஞ்சம் சுமாராக இருந்த போனில் கொழும்பில் இருக்கும் நண்பன் ஒருவனுக்கு கால் செய்தோம். எங்கள் சூழ்நிலையை பற்றி கூறி மாலைக்குள் எங்களிடம் இருந்து எந்த அறிவிப்பும் கிடைக்கவில்லை என்றால் இந்த பிரதேசத்தின் மீட்பு குழுவினருக்கு செய்தி கொடுத்துவிடும் படி அவனுக்கு சொல்லிவைத்தோம். எங்களுக்கே சற்று திகிலாக தான் இருந்தது. எவ்வளவு பயங்கற சூழ்நிலையாக இருந்தாலும் நண்பர்கள் கூட இருந்தால் ஒரு அசாத்தியமான தைரியத்தை உணரமுடியும். செத்தால் அவனும் தானே சேர்ந்து சாவான்! 😛

#செங்குத்து_பாறை.


மாலை வேலையை நெருங்கியிருந்தோம் என் மனதுக்குள் இரவு எப்படியும் இங்கேயே கழிக்க வேண்டி வந்து விடுமே என்ற எண்ணம் இருந்தது. உண்ண ஏதும் இல்லை என்பது தான் பெரிய பிரச்சனை.

மேப்பில் தென்பட்ட கிராமம் இருந்த அந்த திசையையே பிடித்து சென்றுக்கொண்டிருந்த போது தான் கதையின் மிக முக்கியமான ஒரு இடத்தை அடைத்தோம். திடீர் என வழி ஒரு பெரிய பள்ளத்தோடு முற்று பெற்றது. அங்கிருந்து பார்த்தால் தூரத்தில் ஆங்காங்கே சில ஓலை வீடுகள் தென்பட்டது. அனால் அங்கு செல்ல வழியே இல்லை. பள்ளத்தில் இறங்கி தான் செல்ல வேண்டும். ஒரு 20 அடி உயரமான சரிவான பாறை. நின்றபடி அதில் இறங்க முடியாது அமர்ந்தபடியே ஊர்ந்து ஊர்ந்து சென்றால் முடியும். அனால் அதற்கு அசாதாரணமான ஒரு உடல் சமநிலை தேவை. கொஞ்சம் தவரினாலும் உருண்டு விடுவோம். குழுவில் இரண்டு பெரிய மாமனிதர்கள் இருந்தார்கள். அவர்களுடைய கனத்துக்கு அந்த பாறை மிக பெரிய சவால் என்பது தான் பிரச்சனை. வேறு வழியில்லை என மனதளவில் எல்லோரும் தயார் ஆனோம். பார்ப்பதற்கு ஏதோ சின்ன சரிவு போல தெரிந்தாலும் அதை கடக்க மட்டும் ஒரு மணி நேரம் விரயமானது.


#உயிர்_ஒன்று_ஊசல்_ஆடியது

முதலில் தவழ்ந்து தவழ்ந்து நான் அந்த சரிவின் அடிவாரத்துக்கு போய் சேர்ந்தேன். கண்டிப்பாக கடினமான செயல் தான். விழுந்தால் அடி பலமாக இருக்கும். வலுவாக பிடித்துக்கொள்ள எதுவும் இல்லை. சிலந்தி போல ஒட்டிக்கொண்டு தான் இறங்க வேண்டும். ஒவ்வொருவராக பார்த்து பார்த்து பொறுமையாக இறங்கினோம். நாங்கள் பயந்த அந்த மாமனிதர்கள் கூட பாதுகாப்பாக வந்து சேர்ந்து விட்டார்கள் ஆனால்……. ஒரு ஜீவன் மட்டும் எங்கள் வயித்தில் பாப்பாத்திகளை பறக்க விட்டது.



அவன் சரியாக வந்துவிடுவான் என்று தான் எல்லோரும் நினைத்தோம் ஏன் அவனே அப்படி தான் நினைத்தான். பாறை சரிவின் மேல் அவன் இருந்து கவனமாக எல்லோரையும் கைத்தாங்களாக இறக்கி விட்டான். நான் கீழே நின்று வந்தவர்களை கைகொடுத்து தூக்கிவிட்டேன். கடைசியாக அவன் இறங்கும் போது என்ன நினைத்தான் என்று தெரியவில்லை. முதல் காலடியிலேயே எழும்பி நட்டுக்கொண்டு நின்று விட்டான். நான் சொன்னது போல அது ஒரு செங்குத்தான பாறை கொஞ்சமாக சரிந்திருக்கும் அதன் மேல் அமர்த்தால் மட்டுமே நம்மால் கடக்க முடியும் இவன் எழும்பி நின்றது மட்டும் தான் முழு ஈர்ப்பு விசையும் கீழ் நோக்கி இழுக்க முழுமையாக கட்டுப்பாட்டை இழந்த அவன் ஒரே பாய்ச்சலாக கீழ் நோக்கி உச்ச வேகத்தில் ஓடி வந்தான். அவன் வந்த திசைக்கு நேர் எதிர் திசையில் பாறை சரிவில் நான் நின்றுக்கொண்டிருந்தேன். (நல்ல வேலையாக நின்றுக்கொண்டு இருந்தேன்) புயல் வேகத்தில் என்னை நோக்கி வந்தவனை நான் அறிந்தோ அறியாமலோ என் இரண்டு கைகளையும் யேசு போல விரித்து catch பிடித்தேன். அடுத்த செக்கன் இரண்டு பேரும் கட்டிக்கொண்டு பாறையில் உருண்டோம் கீழே அமர்ந்திருந்த இன்னொரு நண்பனின் பட்டக்சில் மோதி லேண்ட் ஆனோம் ஒரு சில விநாடிக்குள் அத்தனையும் நடந்து முடிந்தது.

போன உயிர் எல்லோருக்கும் திரும்பி வந்தது. இப்போது நினைக்க காமடியாக இருக்கிறது ஆனால் அப்போது யாருக்கும் மூச்சில்லை.

ஒருமாறியாக எல்லோரும் ஆசுவாசப்படுத்திக்கொண்டு நகர எத்தனித்த வேலையில் பிரிதொரு சம்பவம் நடந்தேறியது Chooty அந்த சரிவை கடக்கவில்லை. பயந்துபோய் விட்டான். நாங்களும் இதை எதிர் பார்க்கவில்லை. அவனை எப்படியெல்லாமோ கூப்பிட்டு பார்த்தோம் அவன் வர தயங்கி பாரிதாபமான கண்களோடு எங்களை பார்த்தான். மேலே ஏறிச்சென்று அவனது கால்களை பிடித்து இழுத்தும் பார்த்தேன் பயனில்லை. அவனுக்காக அங்கேயே சிறிது நேரம் காத்திருந்தோம் அனால் அவன் வரவில்லை. மாறாக எங்கோ மாயமாக மறைந்து போனான். காத்திருந்து பார்த்த நாங்களும் செய்வதறியாது எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். அவனுக்கு இப்படி விடைகொடுத்ததில் எல்லோருக்கும் வருத்தம் தான்.

சரிவை கடந்த நாங்கள் மீண்டும் பயணத்தை ஆரம்பித்த போது வானம் இருட்ட ஆரம்பித்திருந்தது. உடம்பெல்லாம் வலி எழுத்தது. அட்டைகளின் கடிவேறு. திடீர் என்று கூட்டத்தில் ஒருவன் கத்த திரும்பி பார்த்தோம் பார்த்தால் Chooty வந்திருந்தான். எப்படி என்று தெரியவில்லை அனால் அவன் மாற்று வழியை கண்டறிந்திருந்தான். தெரிந்திருந்தால் நாங்களும் அப்படியே வந்திருக்கலாம். ம்ம்….

#ஆளில்லா_கிராமமும்_கடவுள்_படைத்த_கொய்யாவும்.


தூரத்தில் இருந்து பார்த்த போது குடிசைகளாக தெரிந்த இடத்துக்கு வந்து சேர்ந்தோம் ஆனால் அந்த குடிசைகளில் யாருமில்லை. அது போல நான்கு ஐந்து குடிசைகள் இருந்தன.. அது ஒரு கைவிடப்பட்ட கிராமம் போல திகிலாக காட்சியளித்தது. பிறகு தான் தெரிந்து கொண்டோம் விவசாய காலங்களில் மட்டும் அங்கு விவசாயிகள் வந்து தங்கியிருந்து விளைச்சல் முடிய திரும்பி சென்று விடுவார்கள் என்று.

என்னத்தான் குடிசைகளில் ஆட்கள் இல்லாவிட்டாலும் காட்டை கடந்துவிட்ட வெற்றி மனதுக்கு ஊக்கமளித்தது. அந்த இடத்தை ஆராய்ந்ததில் ஒரே ஒரு கொய்யா மரம் மட்டும் கண்ணில் பட்டது. அதில் இருந்த கொய்யாக்களை பறித்து கொஞ்சமாக பசியாறினோம். தேவாமிருதமாக இருந்தது.



அங்கிருந்து வெளியே வரும் வழியில் முதலில் கண்ணில் பட்ட மனிதரிடம் எங்களது நிலைமையை கூறினோம். அவரும் கொழுப்புக்கு செல்ல எப்படி பஸ் பிடிக்க வேண்டும் என்பதை பற்றி கூறினார். ஆனால் இப்போது பிரச்சினை என்னவென்றால் எங்களுடன் Chooty இருக்கிறான் அவனை அவன் இடத்திற்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதன் பிறகு தான் எங்கள் பயணத்தை தொடர்வது என ஏகமனதாக முடிவெடுத்தோம். அருகில் ஒரு விகாரை இருப்பதாகவும் அதில் உள்ள புத்த பிக்குவால் எங்களுக்கு உதவ முடியும் என்றும் கூறினார்.

அந்த வழிப்போக்கன் கூறியதன் படி அந்த விகாரைக்கு வந்து சேர்ந்தோம். அவரிடம் பேசிய போதுதான் தெரிந்தது நாங்கள் சப்ரகமுவ மாகாணத்தில் தொலைந்து மத்திய மாகாணக்கு வந்திருக்கிறோம் என்று. ஹாவாகல மலையின் அமைப்பு அப்படிப்பட்டது. இரண்டு மாகாணங்களை பிரிக்கும் புள்ளியில் உள்ள மலை அது. அந்த பிக்குவின் உதவியால் ஹாவாகல அடிவாரத்துக்கு அதாவது அந்த கடைக்கு செல்ல எங்களுக்கு ஒரு சிறிய லாரி ஏற்பாடு செய்யப்பட்டது.

உயிர் தப்பி எல்லோரும் லாரியில் சென்ற அந்த பயணமும் மறக்க முடியாதது தான். கிட்ட தட்ட எல்லோரும் தூங்கி போனோம். அட்டைக்கடியில் அரிப்பும் உடல் வலியும் போட்டி போட்டது. Chootyயும் அமைதியாக எங்களுக்கு நடுவில் அமர்ந்து வந்தான். ச்சூட்டியின் ஏரியா வந்ததும் அவனை லாரியில் இருந்து இறக்கி விட்டோம். அப்போது நடந்ததை மறக்க முடியாது. அவனை இறக்கி விட்டு வண்டி புறப்பட்டது ஆனால் ச்சூட்டி அவனால் முடிந்த மட்டும் எங்கள் லாரியின் பின்னால் ஓடி வந்தது இன்னும் கண்களில் இருக்கிறது.

We love you man.


பஸ் நிருத்தம் போகும் வழியில் ஒரு கடையில் இரவு சாப்பாடாக கொத்து உண்டோம். “ கொழும்பில் கிடைப்பது கொத்தன்று நெஞ்சத்து, கிராமத்து கொத்தே கொத்து ” .



2 மணிநேரத்தில் இறங்க வேண்டிய மலையை 7 மணிநேரம் இறங்கி இருக்கிறோம். உடம்பில் உயிர் மட்டும் தான் இருந்தது.

அங்கிருந்து கொழும்பு வரும் பஸ்சில் கூட எங்களை விதி விடவில்லை. பஸ்சில் இடம் கிடைக்காமல் நின்றபடியே வந்தோம். எங்களில் சிலர் வலி பொறுக்காமல் பஸ் தரையில் உற்கார்ந்தும் விட்டோம். எழும்பு முறிந்து கொழும்பு வந்தடைந்தோம். வீட்டுக்கு வந்து நடந்ததை காட்டிக்கொள்ளாது வெந்நீரில் குளியல் போட்டு மெத்தையில் சரிந்த போது கடவுள் தெரிந்தார்ர்ர்ர்.


இந்த சம்பவம் நடந்து மூன்று வருடங்கள் கடந்த நிலையில் நண்பர்களில் ஒருவன் இன்னும் அந்த அட்டைக்கடியின் தழும்புகளோடு வாழுகிறான்.

“Peak Wilderness Sanctuary” இது தான் நாங்கள் தொலைந்து போன காடு. இலங்கையின் மூன்றாவது பெரிய காடு இது தானாம். ஆத்தாடி!

நாங்கள் அழைத்து சென்ற அந்த பத்தாவது நண்பனுடைய லெவலே இப்பொழுது வேறு. இலங்கையில் அவன் காலடி பதிக்காத இடமே இருக்க முடியாது என்று செல்லுமளவு ஒவ்வொரு வார இறுதியிலும் அவனது புகைப்படங்கள் சோஷல் மீடியாவில் உலாவும். என்ன இருந்தாலும் அந்த முதல் ட்ரிப்பை அவன் மறக்கவும் மறுக்கவும் முடியாது.

அதற்கு பிறகு நான் ஹாவாகலைக்கு இரண்டு முறை சென்று விட்டேன் ஆனால் ஒவ்வொருமுறையும் அது தரும் அவஸ்தை அலாதியானது. கடைசியாக ஒரு பாடலை அங்கு தான் ஷூட் செய்தோம் அப்போது ஏற்பட்ட அனுபவத்தை இது போல இன்னொரு கட்டுரையாக எழுதலாம் அந்த அளவு அலப்பறை செய்தது ஹாவாகல.

இப்போதெல்லாம் ஹாவாகல அதிகமாக மக்கள் சென்று வரும் இடமாகிவிட்டது. அங்கு சென்று போட்டோ போடும் அத்தனை குழுவினரோடும் Chootyயை காணமுடியும். அனால் எங்களுக்கு நடந்ததை போல நடந்திருக்காது என்று நம்புகிறோம்.

சில மாதங்களின் முன் ஹாவாகல Chooty என்ற பெயரில் ரிக்வஸ்ட் கூட வந்திருந்தது. தலைவர் இப்போது famous போலும்.

அப்பறம் இப்போது வரை அந்த ஹந்த்தானவிற்கு நாங்கள் பயணப்படவில்லை. முயற்சியில் இருக்கிறோம். Coming soon

காட்டில் வழி தவறிவிட்டால் வந்த வழியாக திரும்பி நடப்பது உசிதமானது என்று பின்னால் படித்தேன். தொடர்ந்து நடக்கும் போது எங்களை போல திக்கற்ற நிலைக்கு சென்றுவிடும் அபாயமுள்ளது. அத்தோடு ”கைட்” மிக மிக அவசியம். Do not try this in home! என்பதை போல இந்த கதை ஒரு வார்னிங் ஆக அமையட்டும்.

“Traveling – it leaves you speechless, then turns you into a storyteller.” என்பதற்கு நாங்களும் ஒரு நடமாடும் உதாரணம்.

”கல” டா…..”ஹாவாகல”

-hawagala survivors- -TAMIL TRAVEL DIARIES- 🤘கன


Post a Comment

0 Comments