Subscribe Us

header ads

நீங்கள் லேசாக எண்ணக்கூடிய தவறுகளும், துபாய் அரசின் தண்டனைகளும்.!


புதிதாக அமீரகத்திற்கு வர நினைப்பவர்கள், இந்த நாட்டின் சுற்றுலா தளங்களை பற்றி மட்டும் ஆராயாமல், சட்டங்களையும் விதிகளையும் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும். 

ஏனெனில் இந்த உலகம் முழுவதும் அறிந்த ஒரு விஷயம், அரபு நாடுகளில் குற்றங்களுக்கு தண்டனை மிகவும் கடுமையாக இருக்கும் என்பது. நாம் அவசரத்திலோ, கவனக்குறைவிலோ செய்யும் ஒவ்வொரு குற்றத்திற்கும் இங்கு கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டியிருக்கும். 

இந்த சிறிய தவறுக்கு கூடவா அபராதம் செலுத்த வேண்டும்? என்று நம் மனதில் தான் நினைத்து கொள்ளலாமே தவிர, அபராதங்கள் செலுத்துவதிலிருந்தும் தண்டனைகளிருந்தும் தப்பிக்க முடியாது.

அப்படி லேசாக எண்ணக்கூடாத ஒரு சில குற்றங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. இது ஏற்கனவே அமீரகத்தில் வசிப்பவர்களுக்கும் பொருந்தும். ஏனென்றால் சிலருக்கு இப்படிப்பட்ட தவறுகளுக்கு தண்டனைகள் உள்ளதா என்பதில் உறுதியில்லை.

சாலைகளை கவனமாகக் கடக்கவும்:

உங்களுக்கு ஏதேனும் அவசரமாக இருக்கலாம் அல்லது அன்றைய நாள் மிகவும் வெயிலாகவும் வெப்பமாகவும் இருக்கலாம். அதற்காக நீங்கள் மேற்கொள்ளும் ஒரு சீரற்ற சட்டவிரோத சாலை கடக்கும் முயற்சி உங்களுக்கு செலவை தான் விட்டுவைக்கும். ஏனென்றால், அமீரகத்தில் அப்படி கிடைத்த இடத்தில் எல்லாம் சாலையை கடந்து சென்றால் 400 திர்ஹம்ஸ் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். ஆதலால் சாலைகளை கடக்க ஸீப்ரா கிராசிங் (Zebra Crossing) அல்லது மெட்ரோ பாலங்கள் மற்றும் நிலையங்களைப் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட புகைப்படம் மட்டுமே எடுத்தல்:

உங்களை ஒரு நல்ல சமூக புகைப்படக் கலைஞராக நீங்கள் கருதலாம். அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் அந்த காரணத்திற்காக அனுமதியின்றி மக்களின் படங்களை எடுப்பது அல்லது வெளியிடுவது ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாகக் கருதப்படுகிறது. ஆகவே இந்த சைபர் குற்றத்திற்கான தண்டனை, சிறை செல்வது மற்றும் 150,000 முதல் 200,000 திர்ஹம்ஸ் அபராதம் செலுத்துதல் ஆகும்.

தவறான வார்த்தைகளில் உரையாடுவது:

ஒருவரது மனதை பாதிக்கும் சொற்கள் மற்றும் வார்த்தைகள் முதல் எமோடிகான்கள் (Emoticons) வரை தவறான மெஸ்ஸேஜ்கள் யாருக்கும் அனுப்பக்கூடாது. ஏனெனில் உங்கள் செய்தியைப் பெறுபவர் உங்களது “அந்த குறிப்பிட்ட” மெஸேஜை காவல்துறைக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்தால், நீங்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். மோசமான சூழ்நிலைகளில், இது சிறை அல்லது நாடுகடத்தலுக்கு கூட வழிவகுக்கும்.

கை சைகைகள்:

உங்கள் நடத்தை மற்றும் தவறான கை சைகை குறித்து யாராவது புகார் செய்தால், நீங்கள் சட்டரீதியான தண்டனைக்கு உட்படுவீர்கள். “இது ஒரு பொதுவான சைகை தானே.! இதில் என்ன பாதிப்பு இருக்க போகிறது” என்று நீங்கள் நினைத்தாலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் மற்றும் இதை சார்ந்த பகுதியின் கலாச்சாரக் கண்ணோட்டங்களுடன் உணர்ந்து செயல்படுதல் புத்திசாலித்தனமான முடிவாகும்.

வாகனம் கழுவுதல் (பார்கிங்களில்):

பொது கட்டண வாகன நிறுத்துமிடம் அல்லது இலவச வாகன நிறுத்துமிடங்களில் மற்றும் கட்டிடங்களுக்கு முன்னால் கார்களைக் கழுவுவது ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமானது என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? எனவே, அருகிலுள்ள கார் கழுவும் நிபுணர்களிடம் செல்வதே அபாரதங்களிலிருந்து தப்பிக்க நல்ல வழியாகும்.

குப்பைகளை வீசுவது:

ஒரு மிட்டாயின் ரேப்பர் அல்லது சிகரெட்டை வீசுவது மிகவும் எளிதானது. ஆனால் இந்த ‘எளிய’ செயல் உங்களுக்கும் (அபராதம்) மற்றும் சுற்றுச்சூழலுக்கும் நிறைய செலவை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் குப்பை கொட்டுவது குறித்து ஐக்கிய அரபு அமீரகம் கடுமையான சட்டங்களை அமல்படுத்துகிறது.

காசோலை ரத்தாகுவது:

நீங்கள் கொடுக்கும் அனைத்து காசோலைகளுக்கும் கணக்கு வைத்து கொள்ளுங்கள். திடீரென உங்களது வங்கி கணக்கில் பணம் போதாமல், உங்களது காசோலை ரத்துசெய்யப்பட்டால் (Bounces back), அடுத்த நிமிடமே அது ஒரு சட்ட விரோதமான குற்றமாக மாறிவிடும். எனவே காசோலை கொடுப்பதில் மிகவும் கவனமாக இருத்தல் அவசியமாகும்.

சட்ட விரோதமாக நிதி திரட்டுவது:

அனைத்து நாடுகளை போல, அமீரகத்திலும் ஒரு தொண்டு நோக்கத்திற்காக பணம் திரட்டப்படுவது மதிக்கப்படுகிறது. அதுவே சட்ட விரோதமாக செய்யப்பட்டால், விளைவுகள் கடுமையாக இருக்கக்கூடும். ஐக்கிய அரபு அமீரக சட்டங்களின்படி, ஒரு தனிநபராகவோ அல்லது குழுவாகவோ – எந்தவொரு காரணத்திற்காகவோ அல்லது தொண்டுக்காகவோ ஆன்லைனில் (அல்லது ஆஃப்லைனில்) பணம் திரட்ட உங்களுக்கு அனுமதி இல்லை. நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தை தளமாகக் கொண்ட பதிவுசெய்யப்பட்ட தன்னார்வ மற்றும் தொண்டு அமைப்பு மூலம் மட்டுமே சென்று, நிதி திரட்டும் அம்சத்தை அவர்களிடம் விட்டுவிட வேண்டும்.

ரகசியங்களை வெளியிடுவது:

ஒரு நண்பரைப் பற்றிய தனிப்பட்ட ரகசியம் அல்லது நீங்கள் பணியில் கிடைத்த சில தகவல்களைப் பற்றி வேறொருவருடன் உரையாடுவது அல்லது புறம் பேசுவது ஒன்றும் இந்த உலகில் புதிதல்ல. ஆனால் அந்த நபர் அல்லது நிறுவனம் தகவல்களைப் பகிர்வதற்கு எதிராக புகார் செய்ய முடிவு செய்தால், அந்த ரகசியம் உங்களுக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கக்கூடும். ஏனென்றால், ஐக்கிய அரபு அமீரக சட்டங்களின் கீழ் தனியுரிமை, அவதூறு மற்றும் இரகசியத்தன்மை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன.


Post a Comment

0 Comments