புனித நகரமான மக்காவில் 1,500 க்கும் மேற்பட்ட மசூதிகள் கொரோனா வைரஸ்
பரவல் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில், கடுமையான
சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மத்தியில் வரும் ஞாயிற்றுக்கிழமை
மீண்டும் திறக்கப்பட உள்ளன.
படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான திட்டத்தின் ஒரு
பகுதியாகக் கடந்த மாதத்தின் பிற்பகுதியில், கூட்டுத் தொழுகைகளுக்காக சவூதி
அரேபியா முழுவதும் மக்காவைத் தவிர மீதி இடங்களில் மசூதிகள் மீண்டும்
திறக்கப்பட்டன.
இந்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை மக்காவில் உள்ள கிட்டத்தட்ட 1,560
மசூதிகள் ஃபஜ்ர் தொழுகையிலிருந்து தொடங்கி வழிபாட்டாளர்களுக்காக மீண்டும்
திறக்கப்பட இருக்கின்றன. மக்காவில் உள்ள இஸ்லாமிய விவகார அமைச்சகத்தின்
கிளை, தொழுகைக்காக வழிபாட்டாளர்கள் தனி விரிப்புகளை உபயோகிப்பது, தனி மனித
இடைவெளியைக் கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன்,
நகரத்தின் மசூதிகளைத் திட்டமிட்டபடி மீண்டும் திறப்பதற்குத் தயார்
செய்துள்ளது.
ஊரடங்கு நாட்களில் வழிபாட்டுத் தலங்களை சுத்தப்படுத்தவும் சுகாதாரம் பேணவும் அமைச்சகம் ஏஜென்சிகளை நியமித்திருந்தது.
மசூதிகளுக்குள் வழிபாட்டுக்குப் பயன்படும் விரிப்புகளில் சமூக
இடைவெளியைப் பின்பற்ற ஏதுவாக அடையாளங்கள் இடுவது போன்ற முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளை கடந்த நாட்களில் தன்னார்வலர்கள் செய்து வந்தனர்.
0 Comments