தனது தந்தையின் கொலை அமெரிக்காவுக்கு இருண்ட தினத்தைக் கொண்டு வருமென, அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் இராணுவ தளபதி குவாசிம் சுலைமானியின் புதல்வி, செயினப் சுலைமானி தெரிவித்துள்ளார்.
“பைத்தியக்கார ட்ரம்ப் என் தந்தையின் தியாகத்துடன் அனைத்தும் முடிந்து விட்டதாகக் கனவு காணாதீர்கள்” என அவர், தேசிய தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தொடர்ந்து தாம் சுலைமானி வகுத்த பாதையில் பயணிப்பதோடு, அமெரிக்காவை மத்திய கிழக்கிலிருந்து விரட்டுவதே தமது ஒரே இலட்சியமென, சுலைமானிக்கு பதிலாக பதவியேற்றுள்ள குவானி தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், அமெரிக்க துருப்புகளை ஈராக்கிலிருந்து வெளியேறுமாறு அந்நாட்டு நாடாளுமன்றம் பிரேரணை நிறைவேற்றியுள்ள நிலையில், ஈராக்கிற்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி அச்சுறுத்தியுள்ளார்.
“நாங்கள் மிகவும் அசாதாரணமான விலையுயர்ந்த விமானத் தளத்தை அங்கே அமைத்து வருகின்றோம். இதைக் கட்டுவதற்கு பில்லியன் கணக்கான டொலர்கள் செலவாகும். அதனை அவர்கள் எங்களுக்குத் திருப்பிச் செலுத்தாவிட்டால் நாங்கள் வெளியேற மாட்டோம்” என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஒரு சூழலில் வளைகுடா பகுதியில் அதிகரித்து வரும் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் சவுதி அரேபிய மன்னர் சல்மான் ஈராக் ஜனாதிபதி பர்ஹம் சல்லேஹ்வை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அதன் பின்னர் ஈராக் பிரதமர் அதெல் அப்தல் மஹ்தியிடமும் சவுதி மன்னர் சல்மான் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார்.
0 Comments