உழ்ஹிய்யா கொடுக்கும் போது நாம் கடைபிடிக்க வேண்டிய மிக முக்கிய அம்சங்கள்.
இன்று உழ்ஹிய்யா குர்பான் என்பது பெரும் மாபியாவாக மாறியுள்ளது.
துல்ஹஜ் மாதம் வரப்போகிறது எனவே மாடு தட்டுப்பாடாகிவிட்டது.
குர்பான் கொடுப்பதற்கான அடிப்படை சட்டம் ஷரத்து ஒன்று இருக்கிறது.
இது குர்பானுக்கு மட்டுமல்ல ஹஜ்ஜூக்கும் பொருந்தும் வுழுக்கான தண்ணீருக்கும் பொருந்தும்.
அதாவது நாம் பொருளை அல்லது சேவையை வாங்கும் போது அதன் சந்தை பெறுமதியை கொடுத்துத்தான் வாங்க வேண்டும்.
உதாரணத்துக்கு, ஹஜ்ஜை எடுத்துக்கொண்டால் 5 லட்சம் இருந்தால் சாதாரணமாக ஒருவருக்கு ஹஜ் செய்யலாம்.
ஆனால் வீசா குறைவாகத்தான் கிடைத்திருக்கிறது என்று பல காரணங்களை கூறி ஹஜ்ஜூக்கான கட்டணத்தை 10 லட்சம் ரூபாவாக்கினால் அந்த சந்தர்ப்பத்தில் இஸ்லாத்தில் ஹஜ்ஜூ கடமையாகமாட்டாது.என்கிறது நமது மார்க்கம்.
இன்னொரு உதாரணம், தொழவேண்டும் ஆனால் தண்ணீர் இல்லை ஒரு கடையில் மட்டும் தண்ணீர் விற்பனைக்கு இருக்கிறது.
ஒரு லீட்டர் தண்ணீரின் சாதாரண விலை 40 ரூபா என்று வைத்துக் கொள்வோம். இவர்களுக்கு வுழு செய்ய தண்ணீர் இல்லை என்பதனை அறிந்த கடைக்காரர் 40 ரூபா விலையுள்ள தண்ணீரை லீட்டர் 80 ரூபா என விலையை கூட்டுகிறார்.
இவர்கள் எவ்வளவு பெறுமதியான பணத்தை கொடுத்தும் சரி தண்ணீரை கடையில் வாங்கி தொழுவார் என்ற காரணத்தினாலேயே அதன் விலையை கடைக்காரர் கூட்டியிருக்கிறார்.
இவ்வாறான நிலைமைகளில் தண்ணீர் தேவையில்லை தயம்மம் செய்து விட்டு தொழுதுகொள்ளுங்கள் என்றே மார்க்கம் சொல்கிறது.
அவர்களுக்கு 80 ரூபா கொடுத்து தண்ணீர் வாங்க வசதியிருந்த போதும் கூட. மார்க்கத்தின் சட்டம் இது தான்.
நீங்கள் தண்ணீருக்கு மேலதிகமாக கொடுக்கும் பணத்தை வேறு ஏதாவது முக்கியமான சமூகத் தேவைக்கு கொடுத்துவிட்டு நீங்கள் தயமம் செய்து தொழுகையை நிறைவேற்றுங்கள்.
இது போல் தான் நான் உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த குர்பான் மாபியாவில் மாட்டிக்கொள்ள வேண்டாம்.
இப்படி சந்தையை விட அதிகமான விலையில் மாடுவாங்கி குர்பான் கொடுக்கும்படி மார்க்கம் எங்களுக்கு கட்டளையிடவில்லை.
இப்படியொரு குர்பானை மார்க்கம் ஆதரிக்கவுமில்லை.
நாங்கள் 100 மாடு கொடுத்தோம் என பெருமையாக சொல்லிக்கொள்கிறோம். இது யாருடயை பணம் இது?
உங்களுடைய பாடசாலை நிலை எப்படியிருக்கிறது?
உங்ளுடைய ஊர் நூலகத்தின நிலை எப்படியிருக்கிறது?
உங்களுடடை ஊரில் எத்தனை பெண்கள் வயது சென்றும்
திருமணமாகாமல் இருக்கிறார்கள்?
உங்கள் ஊரில் எத்தனை ஏழைகள் இருக்கிறார்கள்?
உங்கள் ஊரில் எத்தனை அநாதைகள் இருக்கிறார்கள்?
உங்கள் ஊரில் எத்தனை பேர் வீடு அற்றவர்களாக இருக்கிறார்கள்?
இப்படியான எத்தனையோ பர்ளு அய்ன்கள், பர்ளு கிபாயாக்கள்,
நம் முன்னே கட்டாய கடமைகளாக குவிந்திருக்கும் போது உழ்ஹிய்யா போன்ற சுன்னத்தான ஒரு அமலுக்கு ஏன் இந்தளவு அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?
இதற்கு ஏன் பாரியளவு பணம் செலவழிக்க வேண்டும்?
இப்படியெல்லாம் பாரிய பிரச்சினைகள் சமூகத்தில் இருக்கும் போது 40 ஆயிரம் ரூபாய் மாட்டை ஒரு லட்சத்துக்கு வாங்கி கொடுத்து நாங்கள் அமல்களை நிறைவேற்றிவிட்டோம் என்று சொல்வதில் என்ன பயன்?
அவ்லவிய்யாத் தெரியாததே இதற்கான முக்கிய காரணம்.
அதாவது எதனை முற்படுத்த வேண்டும் என்ற அறிவின்மையே.
உழ்ஹிய்யா கொடுக்க இருக்கும் சகோதரர்கள் கட்டாயம் இந்த விடயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்.
சந்தை விலைக்கு உங்கள் உழ்ஹிய்யாவை கொடுத்து இந்த உழ்ஹிய்யா மாபியாவை இல்லாமல் செய்யுங்கள். அப்படியில்லாவிட்டால் நீங்கள் மேலதிகமாக செலவழிக்கும் பணத்தை சமூக வேலைத்திட்டங்களுக்காக
பயன்படுத்துங்கள்.
0 Comments