கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டிகள் வெற்றி, தோல்வி தாண்டிய உணர்வுபூர்வமானதாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.
நேற்றைய போட்டியும் அவ்வாறே அமைந்தது. ரோஹித் சர்மாவின் அபார சதம், கோலி, ராகுலின் அற்புதமான இன்னிங்ஸ், குல்தீப், பாண்டியாவின் திருப்புமுனை விக்கெட் ஆகியவற்றால், இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டரில் நடந்த உலகக் கோப்பையின் 22-வது லீக் ஆட்டத்தில் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி பாகிஸ்தானை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.
இதன் மூலம் உலகக் கோப்பைப் போட்டியில் 7-வது முறையாக தொடர்ந்து பாகிஸ்தானை வென்ற சாதனை வரலாற்றை இந்திய அணி தக்கவைத்துக்கொண்டது. கடந்த 1992 முதல் 2019-ம்ஆண்டுவரை இந்திய அணியை வீழ்த்த முடியாத பாகிஸ்தானின் சோகம் தொடர்கிறது. ஆட்டநாயகனாக ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் மான்செஸ்டரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் டாஸ் வென்றால் பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமத் பேட்டிங்கை தேர்வு செய்ய வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் பிரதமருமான இம்ரான் கான் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்து இம்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில்,” சஃப்ராஸ் இன்றைய போட்டியில் சிறப்பான பேட்ஸ்மேன்கள், பவுலர்களுடன் போட்டிக்கு செல்ல வேண்டும்.
மைதானம் ஈரப்பதமாக இல்லாமல் இருந்து சஃப்ராஸ் டாஸ்யை வென்றால் நிச்சயம் பேட்டிங்கை தேர்வு வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.
ஆனால் இம்ரான் கானின் ஆலோசனைக்கு மாறாக டாஸ் வென்று ஆடுகளத்தின் தன்மை அறியாமல் பீல்டிங்கைத் தேர்வு செய்தார் சஃப்ராஸ்அகமத்.
இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரரும் வர்ணையாளருமான மக்கேல் வாகன் தனது ட்விட்டர் பக்கத்தில், உங்களது கேப்டன் ட்விட்டரில் இல்லை இம்ரான் கான்” என்று கிண்டலாக பதிவிட்டிருந்தார்.
மேலும் நெட்டிசன்கள் பலரும் சஃப்ராஸின் முடிவை விமர்சித்தனர்.
0 Comments