ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது ஒரு பிச்சைக்கார இயக்கம். இந்த இயக்கத்தின் பெயரை வைத்துக் கொண்டு யார் பின்னணியில் செயற்படுகின்றார்கள் என்பதை அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும். இது தொடர்பான ஆழமான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய பிரத்தியேக செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
21ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் முஸ்லிம்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இதுவொரு இரகசிய உடன்பாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் கூறியிருந்தார்.
நாங்கள் பாரம்பரியத்தை கொண்ட முஸ்லிம் இனத்தவர்கள். 21ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் முதலில் ஆலயங்களே இலக்கு வைக்கப்பட்டன. இதன் பின்னணியில் சர்வதேச உள்ளீடு இருக்கின்றதா என்பதை அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும்.
1915ஆம் ஆண்டு சிங்கள, முஸ்லிம் மக்கள் இடையே கலவரம் ஒன்று ஏற்பட்டது. இதன் 100 வருட பூர்த்தியை 2015ஆம் ஆண்டு கொண்டாடுவோம் என 2014ஆம் ஆண்டு ஊடகங்களின் முன்பாக உதய கம்மன்பில் தெரிவித்திருந்தார்.
ஆனால் ஆட்சி மாறியதால் இவர்களால் அதனை செய்ய முடியாமல் போனது. தற்போது இந்த தாக்குதல் சம்பவத்தை சாதகமாக்கிக் கொண்டே அண்மையில் முஸ்லிம் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டன.
இதில் உதய கம்மன்பிலவின் தேசிய அமைப்பாளரும் உடன்பட்டுள்ளார். ஆனால் அரசாங்கம் அவரை கைது செய்யவில்லை.
அப்துல் ராஸிக்கை கைது செய்யாதது போன்றே மது மாதுவ அரவிந்தையும் அரசாங்கத்தால் கைது செய்ய முடியாமல் போனது. இவர்கள் பாதுகாப்பு தரப்பின் இரகசிய புலனாய்வுப் பிரிவை சேர்ந்தவர்களா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
0 Comments