Subscribe Us

header ads

திரைக்கு பின்னாலுள்ள வெளிநாட்டு உழைப்பின் உண்மை நிலையும் பொறாமைகொள்ளும் நம் சமூகமும்


கட்டாரிலிருந்து பக்கத்து வீட்டு அகமது வெளிநாடு போய்விட்டான் என்றால், இனி அவனுக்கென்ன என்று ஆரம்பித்து, அவனின் ஒவ்வொரு செயற்பாடும் எல்லோராலும் அவதானிக்கப்படுகிறது, ஒரு பொருளை வாங்கினாலோ, அவனின் பிள்ளைகள் சொந்தங்கள், பொருள் ஒன்றை அனுபவித்தலோ சொல்லமுடியா எதிர்ப்புகளும் வஞ்சனைகளும் மனதில் எழுந்து ஏதோ இனம் புரியாத வெறுப்பும் கோபமும் வெளிநாடு சென்றவரின் குடும்பங்களுடன் அயலவர், உற்றார் உறவினருக்கு எழும்புவது என்ன மாதிரியான ஒரு வியாதி என்று இன்னும் கணிப்பிட்டு சொல்லமுடியாமல் தான் இருக்கிறது. 

நாட்டில் இருந்து உழைப்பவன் கோடிக் கணக்கில் சம்பாதித்தாலும் அடுக்கு மாடிகள் கட்டினாலும் காணிகள் வாங்கினாலும் அவன் உழைத்து வாங்குகிறான் என்று ஏற்றுக்கொள்ளும் சமூகம் வெளிநாடு போனவனை மட்டும் "வெளிநாட்டு பணம்" என்று ஒரு வித வார்த்தை பிரயோகத்தை பாவித்து, பொறாமை வாஞ்சனை கொண்டு நோக்கும் கேவலமான சமூகத்தில் வாழ்கிறோம் என்று நினைக்கும் போது ஒவ்வொரு வெளிநாட்டு தொழிலாளியும் மனம் உடைகின்றன. 

காரணம்...
வெளிநாட்டு வாழ்க்கையில் வெளிநாடு சென்றவன் அனுபவிக்கும் துன்பங்கள் கொடுமைகள் ஆயிரம் ஆயிரம், உறவுகளை பிரிந்து வந்து சோகத்தில் மனதை கனப்படுத்தி வேலைக்கு சென்று நாளாந்தம் வேலை செய்யும் இடத்தில் எத்தனையோ பிரச்சினைகள், அது போக, தங்குமிடம் திரும்பியவுடன் உணவு சமைப்பதில் தொடங்கி, துணி துவைத்தல் போன்ற அத்தனையும் அவனின் கையாலே முடிய வேண்டும். மற்றும் ஒவ்வொரு சுகமில்லாத தருணத்தை அவன் கடத்துவது வார்த்தைகளால் சொல்ல முடியாததொன்று. குடும்பங்களை பிரிந்து வாழும் வலியை அந்த தருணங்கள் அழுத்தி சொல்லிவிட்டு போகின்றது. 

மேலும் வசதியாக வாழ்ந்த வீடு வாசலை விட்டு நெருக்கமான ஒரே அறையில் பல தொழிளார்களுடன் தங்கி மட்டுப்படுத்தப்பட்ட மலசல கூடங்களில் காலைக்கடன்களை முடித்து உரிய நேரத்திற்கு செல்ல வேண்டிய ஒரு கட்டாயம் இருக்கின்றது. அதே போல கட்டிடநிர்மான தொழில் செய்வோர் தனது உணவு பொதிகளை கொண்டு சென்று வெளியில் வைத்துவிட்டு, சாப்பிடும் நேரத்தில் எடுக்கும் போது அது பழுதடைந்து அன்றைய நாளை பட்டினியுடனும் கடத்திய சம்பவங்களும் நடந்திருக்கிறது. 

இந்த மாதிரியான துன்பங்களை அனுபவித்து தான் அவன் மாத இறுதியில் அந்த ரியாலையோ , திர்ஹத்தையோ காணுகின்றான். நாட்டில் இருக்கும் அவனின் குடும்பங்கள் அனுபவிக்கும் கொடுமைகள் ஏராளம்.. முக்கியமாக பாதுகாப்பு இல்லை, நாட்களை பயத்துடன் கடத்த வேண்டிய நிலமை, மேலும் பணம் இருந்தும் அன்றாட வீட்டு தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள எத்தனையோ போராட்டங்கள், தனது மனைவியோ மகளோ ஒரு இடத்திற்கு செல்ல வேண்டுமென்றால் அவர்களுக்கு தெரிந்த சொந்தகார ஒரு வழித்துணை வேண்டும் வாகனம் வேண்டும் இப்படி துன்பங்கள் பல. மற்றும் குடும்பங்கள் ஒன்று சேரும் சந்தோச, துக்க தருணங்களில் தன் மனைவி பிள்ளைகள் மட்டும் அநாதைகள் போன்று கலந்து கொள்ளவேண்டிய ஒரு கட்டாயம்.

 மேற்சொன்னது போல் காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம், அதையும் தாண்டி தனது உடற்தேவைகளை தியாகம் செய்து ஒழுக்கமாவும் இறைவனுக்கு பயந்து ஹராமான வழிகளில் செல்லாமல் இருக்கும் ஒவ்வொரு வெளிநாட்டு தொழிலாளியும் நிஜ ஹீரோக்கள் தான். ஆகவே, நீங்கள் பொறாமை கொள்ளும் வெளிநாட்டு உழைப்புக்கு பின்னால் மேற்கூறப்பட்ட பல தியாகங்கள் இருக்கின்றது எண்ணினால் போதுமானது. 

நன்றி
முஹம்மட் ரிஷாட் (சம்மாந்துறை) 

Post a Comment

0 Comments