இந்தோனேசியாவில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த தங்க சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 60 தொழிலாளர்கள் காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனேஷியா வடக்கு சுலவேசியில் உள்ள போலாங் மோங்கோண்டோவ் பகுதியில் அரசு அனுமதியின்றி தங்க சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று தங்க சுரங்கத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வேலைபார்த்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் 60 பேர் சிக்கியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தகவலறிந்து வந்த மீட்பு குழுவினர் அந்த பகுதியில் வசித்து வரும் உள்ளூர் மக்களும் இணைந்து நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து மீட்புகுழுவினர் கூறுகையில், நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை தேடி வருவதாகவும், மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானதாகவும் 13 பேர் மீட்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியா அரசாங்கம் இத்தகைய சிறு அளவிலான தங்க சுரங்கங்களை தடை செய்துள்ளது. இருப்பினும் தொலைதூர பகுதிகளில் உள்ள சுரங்கங்களை அதிகாரிகள் பெரும்பாலும் கண்டுகொள்ளாமல் இருப்பதாலேயே இதுப்போன்ற அசாம்பாவித விபத்துகள் அதிகம் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
0 Comments