Subscribe Us

header ads

கவனிக்கப்பட வேண்டிய விதவைகளும் கைவிடப்பட்ட பெண்களும்


இன்று சமூகத்தில் விதவைகள், விவாகரத்துப் பெற்ற பெண்கள், கைவிடப்பட்ட பெண்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை பார்க்கின்றோம்
இவர்களில் 20 வயது தொடக்கம் 50 வயது வரையான பெண்கள் தமது குடும்ப சுமைகளுடன் பிள்ளைகளின் பல்வேறு பிரச்சினைகளுடன் வாழ்கின்றனர்.
உதாரணமாக காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவை எடுத்துக் கொண்டால் 18 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உள்ளன.
அதில் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் விதவைகள், விவாகரத்துப் பெற்ற பெண்கள், கனவனினால் கைவிடப்பட்ட பெண்கள் என பல பெண்கள் காணப்படுகின்றனர்.
இவர்களுக்கு சிறு பிள்ளைகள் பெரிய பிள்ளைகள் குழந்தைகள் என உள்ளவர்களும் இருக்கின்றனர்.
இப்படியான பெண்கள் தமது குடும்ப ஜீவியத்தை போக்குவதற்கு தமது பிள்ளைகளின் உணவு உடை கல்வி போன்ற தேவைகளை பூர்த்தி செய்வதற்கு படாத பாடு பட்டு வருகின்றனர்.
இப்படியான பெண்களில் இரண்டு குடும்பங்களின் நிலையை உதாரணத்துக்கு இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்.
புதிய காத்தான்குடி பிரதேசத்தில் சுனாமியினால் தனது மனைவி மரணமான நிலையில் இன்னுமொரு பெண்ணை ஒருவர் திருமணம் செய்தார். அதில் அவருக்கு ஒரு குழந்தை உள்ளது. அந்தக் குழந்தைக்கு இன்று வயது 8 ஆகும்.
குழந்தை குகயீனமான நிலையில் காணப்படுகின்றது. ஆனால் அந்தக் குழந்தையையும் தாயையும் கை விட்டு விட்டு அவர் சென்று விட்டார். இப் போது அந்த தாய் குழந்தையை பராமரிக்க மிகவும் கஷ்டப்படுகின்றார். பிறரிடம் கையேந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இன்னுமொரு பெண் அவர் திருமணம் செய்து மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் மூவருமே கல்வி கற்கின்றனர்.
கனவன் மனைவியையும் பிள்ளைகளையும் விட்டு விவகாரத்து பெற்று விட்டார். மாதமொன்றுக்கு காதி நீதிபதியின் உத்தரவுப்படி 20000 ரூபா செலுத்த வேண்டும். ஆனால் அவர் அதனை முறையாக செலுத்துவதில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த குடும்பத்திலுள்ள மூத்த பிள்ளை தனது தந்தைக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி செலவுக்கு பணமில்லை என்று கூறியுள்ளார்.
தந்தை பிள்ளையை அழைத்துக் கொண்டு கடற்கரைக்கு கொண்டு சென்று தன்னிடம் பணம் கேட்க கூடாது என்று தனது சொந்தப்பிள்ளைக்கு அடித்து அச்சுறுத்தி வீட்டுக்கு கொண்டு போய் விட்டு விட்டு போயுள்ளார்.
தமது பிள்ளைகளின் உணவு, கல்வி, வீட்டு தேவைகளுக்காக தினமும் தனவந்தர்களின் வீடுகளுக்கு சென்று வேலை செல்பவர்களும் இதையும் தாண்டி மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டு வேலைகளுக்காக செல்பவர்களும் இருக்கின்றனர்.
இப்போது பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வது குறைந்து விட்டன.
தமக்கான மாதச் செலவை கனவரிடமிருந்து பெற்றுக் கொள்ள காதி நீதிமன்றத்தை நாடும் பெண்கள் உட்பட பல பெண்களின் பின்னால் புதைந்து கிடக்கின்ற வாழ்வின் கொடுமைகளை வரிசையாக அடிக்கி கூற முடியும்.
சில பெண்கள் தமது பிரச்சிகைளை வெளிப்படுத்த முடியாமல் வீடுகளுக்குள் அழுது கொண்டு முடங்கி கிடக்கின்றனர்.
இவ்வாறன பெண்கள் பொருளாதார ரீதியான, உடலியல் ரீதியான, உளவியல் ரீதியான, சமூக ரீதியான பல தேவைகளை வேண்டி நிற்கின்றனர்.
இவ்வாறான பெண்கள் சில நேரங்களில் வழி தவறி சமூகச் சீரழிவுக்குள் தள்ளப்படும் போது அவைகளை சமூக ஊடகங்களில் பிரபல்யப்படுத்தி அப் பெண்களை மானபங்கப்படுத்தி விடுகின்றனர்.
அப் பெண்களை சமூக ஊடகங்களில் கண்டு கொள்வதற்கு ஆர்வம் காட்டுகின்றவர்களும் சமூகத்தில் இருக்கின்றனர்.
இவர்களின் பிரச்சினை என்ன, இவர்கள் ஏன் இவ்வாறு நடந்து கொண்டார்கள், இவர்களின் தேவையை எவ்வாறு நிவர்த்திக்க முடியம் என்று ஆராய்வது மிகக் குறைவாகும்.
இவ்வாறான பெண்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு என்ன?
1. அவர்களின் விபரங்கள் பள்ளிவாயல்களினால் திரட்டப்படல் வேண்டும்.
2. அவர்களுக்கான வாழ்வாதாரம் சகாத் திட்டத்தின் மூலம் சரியாக வழங்கப்படல் வேண்டும்.
3. இளைஞர்கள் சீதனமின்ற திருமணம் செய்தல் வேண்டும்.
4. இயலுமானவர்கள் இவ்வாறான பெண்களை இனம் கண்டு அவர்களை இரண்டாம் திருமணம் செய்ய முன் வரவேண்டும்.
5. தனவந்தர்கள் முடியுமானவர்கள் இவ்வாறான பெண்களுக்கு உதவ வேண்டும்.
6. சமூக நிறுவனங்கள் அரசியல் பிரமுகர்கள் இவ்வாறான பெண்களின் வாழ்வதாரத்திற்கு கூடுதலான உதவிகளை செய்ய வேண்டும்.
7. சமூக செயற்பாட்டாளர்களும் பெண் சமூக செயற்பாட்டாளர்களும் இவர்களின் விடயத்தில் கூடுதல் அக்கறை எடுத்து கரிசணையாக செயற்பட வேண்டும்.
8. பள்ளிவாயல்களின் நிருவாகிகள் இந்த விடயத்தில் கூடுதல் அக்கறை எடுக்க வேண்டும்.
9. இந்த விடயங்கள் அதிகம் அதிகம் ஜும்ஆக்களில் மற்றும் தர்பிய்யாக்களில் பேசப்படல் வேண்டும்.
10. இரண்டாம் திருணம் செய்வதற்காக முதல் மனைவியை அதிலுள்ள பிள்ளைகளை ஓரங்கட்டி விட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டு இரண்டாவது மனைவியை மாத்திரமே கவனிக்கின்றவராக இருக்க கூடாது.
11. இவற்றில் இஸ்லாம் கூறியுள்ள விடயங்களை உலமாக்கள் கற்றறிந்தவர்கள் எடுத்துக் கூற வேண்டும்.
12. இது தொடர்பாக பெண்கள் மத்தியில் கலந்துரையாடல்கள் இடம்பெற வேண்டும்.
எனவே, இது தொடர்பில் சிவில் சமூக நிறுவனங்கள், முக்கியஸ்தர்கள் கூடுதலான அக்கறை எடுத்து, இவ்வாறான பெண்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை ஏற்படுத்த அவர்களுக்கு உதவ முன் வரவேண்டும் என்பது எனது தாழ்மையான ஆலோசனைகளாகும்.

Post a Comment

0 Comments