Subscribe Us

header ads

ஃபேஸ்புக் கலகலப்புக்கள் 2018 - சபாரின் சுவாரஸ்யமான பதிவு


முதல் பகுதி இணைப்பு : https://www.facebook.com/zafar.ahmed.5070/posts/2019108481476693?hc_location=ufi

சூரியன் எப்.எம் .லூட்டிகள் ; சூரியன் எப்.எம் நியூஸ் பேஜை பொதுப்போக்குவரத்தில் அல்லது சபை நடுவில் பார்ப்பது பகிரங்கமாய் ஆபாசப் படம் பார்க்கும் நிலைக்கு மாறிப் போனது....''பட்டப்பகலில் ட்ராபிக் பொலிசாருக்கு ஆசிரியை செய்த காரியம் என்ன தெரியுமா?" என்று இருக்கும்..பதறியடித்துக் கொண்டு போய்ப் பார்த்தால் பைக்கை நிறுத்தாமல் போய் இருப்பார்..தமிழ்க் கூறும் நல்லுலகம் செக்ஸ் பஞ்சத்தில் உழலும் மூடர் கூடம் என்று நினைத்துக் கொண்டு பிட்டு மசாலாத்தனமான தலையங்கங்களால் கலக்கி வருகிறது சூரியன் எப்.எம் பேஜ்..

தினகரனின் பித்தலாட்டம் : எண்பத்தேழு வருடப் பாரம்பரியமிக்க பத்திரிகையான தினகரனுக்குள் யாரோ ரெட் சிப்பைப் பொருத்திவிட்டார்கள்..நேபாளத்திற்கு விஜயம் செய்து இருந்த சிரிசேனாவின் போட்டோவைப் போட்டு "எல்லோரும் நல்லாப் பார்த்துக்கோங்க, இவர் தான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச " என்றது..மறு நாள் "எல்லோரும் இங்கே கவனிங்க, தவறுக்கு வருந்துகிறோம்..நேற்றுத் தவறுதலாய் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா இன் புகைப்படம் வெளியானது " என்று போட லக லக லக....ஃபேஸ்புக் மெண்டல் ஆஸ்பத்திரியில் தினகரனும் தன் அடையாளத்தைப் பொறித்துச் சென்றது...

96 : பள்ளி நாள் காதலை யதார்த்தமாய் சொன்ன 96 படம் முப்பதுகளின் தொடக்கத்தில் இருப்பவர்கள் கடந்தவர்களுக்கு எல்லாம் ஒரேயடியாகப் பிடித்துப் போக "நீ ரொம்ப தூரம் போய்ட்டியா ராம்" என்ற டெம்ப்ளேட்டை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டனர்..உண்மையில் இந்த நாட்டில் ரொம்ப தூரம் போய்விட்டது டாலர் தான்...183 ரூபாய்க்கு மேல் போகிறதாம் ஒரு டாலர் ...

2.0 : ஆமா !. பறவைகளும் விலங்குகளும் மட்டும் தான் துன்புறுத்தப்படுவதில்லை என்று படம் தொடங்க முன்பு போடுவது பொய்தானே..அறுபத்தெட்டு வயது முதியவர் என்றும் பாராது.....

ராஜபக்சவும் கல்யாண வீடும் : பேருவளையில் நடந்த ஒரு திருமண வீட்டுக்குப் போன ராஜபக்ச மணமகள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார்..இதில் அந்தப் பெண்ணின் தவறு ஒன்றும் இல்லை.ஆனால் ஃபேஸ்புக் பெரிய பள்ளிவாசலில் ஓட்டு ஓட்டென்று ஓட்டினார்கள் இதுவரை ஒரு பாவமுமே செய்திராத புண்ணியவான்கள். ராஜபக்சவும் என்ன செய்வார்..இரண்டு வருடங்கள் அப்படியே இருக்க ஜனாதிபதித் தேர்தலை வைத்துப் பதவி இழந்தார்..இடையில் பிரதமராக அதுவும் நிலைக்கவில்லை.இப்போது எதிர்க்கட்சித் தலைவராம்..பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிபோகும் என்கிறார்கள்..பாவம்..பெயிலாகிக் கொண்டே போகும் கொழுத்த மாணவன் போல இருப்பதால் எங்கே கதிரையக் கண்டாலும் உட்கார்ந்து கொள்கிறார் அப்பச்சி..

அக்டோபர் 26 உம் ஜனாதிபதி தாத்தாவும் :அக்டோபர் 26 ம் திகதி மகிந்த ராஜபக்சவை திடீர் என்று பிரதமராக்கிய சிரிசேனா அதன் பின்னர் அடித்த கொட்டங்களும் சொதப்பல்களும்..ஐயோ..ஒன்றைச் சொல்லவா இரண்டைச் சொல்லவா..வெட்டு ஒன்று துண்டு இருபது என்று கொங்கிறீட் மடையன் கணக்காய் ஜனாதிபதி நடந்து கொள்ள எப்போதோ அவரது மகள் எழுதிய 'ஜனாதிபதி தாத்தா' புத்தகம் களத்திற்கு வந்தது..உலகத்தில் அத்தனை மொழிகளிலும் வந்த முட்டாள் கதைகளுக்கு சிரிசேனா வடிவம் கொடுக்கப்பட்டது..

ஜனாதிபதி தாத்தா புத்தகத்தில் வந்து இருப்பதாய் ஆளாளுக்கு ஒவ்வொரு கதை எழுத எது நிஜம் எது பொய் என்று தெரியாமல் பொதுஜனம் விழிக்க அடேங்கப்பா என்ன ஒரு சோதனை..கதை எழுதிய யாருமே புத்தகத்தைப் படித்து இருக்கவில்லை..வெறும் 356 பக்கங்களைக் கொண்டது புத்தகம்..ஆனால் சகட்டுமேனிக்கு 500, 600 வது பக்கங்களை எல்லாம் ஆதாரம் காட்டி வரும் புனைவுகள் இன்னும் தீரவில்லை.....எது எப்படியோ நாடோடிக் கதைகள் மாதிரி சிரிசேனா கதைகள் பட்டிதொட்டி எங்கும் பேசப்படுகின்றன..அதுவும் அந்த வயல் எரித்த கதையை இலங்கையில் பாதிப் பேர் நம்புவதாக ஐ.நா.சபை சொல்கிறது.

யார் பிரதமர் : சிரிசேனாவின் பிரதமர் மகிந்தவுக்குப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்காமல் போக கெட்ட கோபம் கொண்ட சிரிசேனா வழக்கம் போல பத்து மணிக்குத் தூங்காமல் நள்ளிரவு வரை முழித்து இருந்து பாராளுமன்றத்தைக் கலைத்து விளையாட உச்ச நீதிமன்றம் சிரிசேனாவின் உச்சந்தலையில் கொட்டியது..சிரிசேனா தனது நிறைவேற்றதிகாரத்தைப் பாவித்து இதுவரை செய்தவை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு கஜு சப்ளை செய்தவனை விரட்டியதும் ஆஸ்திரியா நாட்டில் இருந்த இலங்கைத் தூதுவர் தனது தொலைபேசி அழைப்புக்குப் பதில் அளிக்காததால் கூண்டோடு அத்தனை பேரையும் இலங்கைக்கு அழைப்பித்ததும் மட்டுமே...

மற்றபடி மற்றதெல்லாம் செம்ம காமெடி..பகிரங்கமாய் மைலோ குடிக்க வேண்டாம் என்றது,எழுபதாவது சுதந்திர தினப் பேருரையில் திரும்பத் திரும்ப இது முப்பது தான் என்று கோல் பேஸ் சாட்சியாக சத்தியம் செய்தது,ஜனாதிபதித் தேர்தல் மேடைகளில் பிரச்சாரப் பீரங்கியாய்ப் பயன்படுத்திய நூறு நாள் செயற்றிட்டப் புத்தகத்தை யார் எழுதியது என்று தெரியாது என்றது..ராஜபக்ச வென்று இருந்தால் 'ஆறடி நிலத்திற்குள் இருப்பேன்' என்று அப்போது தமாஷுக்குச் சொன்னதாய் கடந்த மாதம் சொன்னது....225 பேர் கையெழுத்துப் போட்டாலும் ரணிலைப் பிரதமராக்கவேமாட்டேன் என்று சொல்லிவிட்டுப் பிரதமராக்கியது...ஹ் ஹ் ஹ் ஹ் ஹ்.....நூறு மீட்டர் ஓடியது போல இளைக்கிறது...இதற்கு மேல் முடியல்ல...

இந்தக் கூத்துக்களை எல்லாம் கண்டு காண்டாகி ஃபேஸ்புக்கை விட்டுக் கல்யாணம் முடிக்கச் சென்று இருந்த நண்பர் அமேஷ்வரனிடம் கேட்டபோது இப்படி சொன்னார்.."ப்ரோ இவன் எதையெல்லாம் செய்யமாட்டேன் என்று சொல்வானோ அதெல்லாம் செய்வான்.புரியுதா?" ...உண்மைதான்......புரிந்தது...

-Zafar Ahmed-

Post a Comment

0 Comments