கடந்த நான்காண்டுகளில் மட்டும் சவுதி அரேபியா உள்ளிட்ட ஆறு வளைகுடா நாடுகளில் 28,523 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக இந்திய நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்கள் தற்கொலை, சாலை விபத்துக்கள் போன்றவற்றால் உயிரிழக்கின்றனர்.
அரபு நாடுகளில் பெரும் பணத்தை சம்பாதிக்கும் நோக்கத்தில் பல லட்சங்களை செலவழித்து அங்கு செல்லும் பலர், மீண்டும் திரும்பி வரமுடியாமல், சிக்கி தவித்து ஒரு கட்டத்தில் உயிர்பிழைக்கிறார்கள்.
தமிழகத்தில் உள்ள ஒரு சிறுநகரமான தாராபுரத்திலுள்ள ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் உயிர் பிழைத்தால் போதும் என்று இரண்டே மாதத்தில் சவுதி அரேபியாவிலிருந்து திரும்பி விட்டதாக பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
70-75 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்ற பெருங்கனவுடன் சவுதி அரேபியா சென்றேன். அங்கு இறங்கிய மறுநிமிடமே எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
விமான நிலையத்திலிருந்து என்னை அழைத்துசெல்வதற்கு வந்திருந்த ஒருவர் எனது பாஸ்போர்ட்டை அங்கேயே பிடுங்கிக்கொண்டார். விமான நிலையத்திலிருந்து சுமார் ஐந்து மணிநேரம் காரில் பாலைவனத்தை ஒட்டிய பகுதிக்கு அழைத்து சென்று அங்குள்ள ஒரு மிகப் பெரிய மனித நடமாட்டமற்ற பங்களாவை காட்டி, இதை நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டனர்
முதல் மாதம் சம்பளம் வந்தவுடன் அங்கிருந்து கிளம்பிவிடலாம் என்று காத்திருந்தேன். மாதம் 75 ஆயிரம் சம்பளம் என்று ஏஜெண்டுகள் கூறிய நிலையில், உணவு போன்றவற்றை கழித்துக்கொண்டு எனக்கு கையில் கிடைத்தது வெறும் 15 ஆயிரம் ரூபாய்தான்
மேலும், அங்கிருந்து தமிழகம் திரும்புவதற்கு விசா, விமான பயணச்சீட்டு ஆகியவற்றை பெறுவதற்கு ஒன்றரை லட்சம் செலவழித்து அங்கிருந்து புறப்படுவதற்கு இரண்டு மாதமாகிவிட்டது.
ஒருநாள் நான் வேலை பார்த்த இடத்திலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் நடந்து சென்றபோது, ஆச்சர்யமளிக்கும் வகையில் தமிழில் பேசும் இளைஞர்களை சந்திக்க நேர்ந்தது.
தமிழகத்தில் பெரிய கல்லூரிகளில் பி.இ படித்த அந்த இளைஞர்கள் அங்கு வாழ்க்கையே நொந்துபோய் மாடு மேய்த்துக்கொண்டிருந்தார்கள். தங்களுக்கு சொந்த ஊருக்கே சென்று அங்கேயே நிரந்தரமாக தங்க விரும்புவதாகவும், ஆனால் இங்கிருந்து தப்ப முடியவில்லை என்று தெரிவித்தனர் என தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
0 Comments