Subscribe Us

header ads

இதுவரை 8 சிறுவர்கள் மீட்கப்பட்டனர் - இறுதிக்கட்ட மீட்புப் பணிக்குத் தயாராகும் வீரர்கள்


தாய்லாந்து குகையில் சிக்கிய எட்டு சிறுவர்கள் மீட்கப்பட்ட நிலையில் இன்று இறுதிக்கட்ட மீட்புப் பணிக்காக சீல் வீரர்கள் குகையினுள் செல்ல உள்ளனர்.

வடக்கு தாய்லாந்துப் பகுதியில் உள்ள தி தம் லுஅங் என்ற குகைக்குள் கடந்த ஜூன் 23-ம் தேதியன்று சென்ற 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் திடீரெனப் பெய்த கனமழையில் சிக்கிக்கொண்டனர். அதன்பிறகு, ஒருவாரமாகத் தீவிர தேடுதல் பணி நடைபெற்றது. இந்த மீட்புப் பணியில், தாய்லாந்து மீட்புப் படையினருடன் சீனா, மியான்மர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாட்டைச் சேர்ந்த 1,000 மீட்புப் படையினர் பங்கேற்றனர். 10 நாள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, சிறுவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குகை முழுவதும் பல அடி ஆழத்துக்குத் தண்ணீர் இருந்ததால், அவர்களைக் கண்டுபிடித்தும் வெளியில் கொண்டுவர முடியாமல் மீட்புப் படையினர் திணறினர். 
சிறுவர்கள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டு இரண்டு நாள்களுக்குப் பின்னரே மீட்புப் பணிகள் தொடங்கின. முதலில் கடந்த 8-ம் தேதியன்று நான்கு சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து நேற்று, மேலும் நான்கு சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மொத்தம் 8 சிறுவர்கள் குகையிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டுள்ளதாக தாய்லாந்து அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
-VIKATAN-




Post a Comment

0 Comments