சனாதிபதி மைத்ரி பிரதமர் ரனில் விக்ரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் நிறுவப்பட இலங்கை வாழ் சிறுபான்மை இனங்களாகிய தமிழர்களதும் முஸ்லிம்களதும் அரசியல் தலைமைகள் தத்தம் இனத்தினுடைய அரசியல் இருப்பினை உறுதி செய்வதற்கான சில சட்ட ஏற்பாடுகளை நிபந்தனையாக விதித்து ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.அவ்வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரதான அபிலாஷைகளில் ஒன்றான அதிகார பகிர்வு தொடர்பான யோசனைகளை அதாவது வடகிழக்கு இணைந்த சுயாட்சி அரசுகள் என்ற ரீதியில் மறைமுகமா சமஷ்டியினை கோரி நிற்பதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் கரையோர முஸ்லிம் மாகாணம் தொடர்பான கோரிக்கையினை முன்வைத்திருப்பதாகவும் அறிய முடிகின்றது. இங்கு மிக முக்கியமாக நோக்கப்பட வேண்டிய விடயம் யாதெனில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு யோசனையும் கிழக்கு மாகாண முஸ்லிம்களை மையமாக கொண்டு ஒரு யோசனையும் முன்வைக்கப்பட்டிருக்கின்ற போதும் பாரிய யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து சொல்லொன்னா துன்பங்களை அனுபவித்து மீள் குடியேறிவருகின்ற வட மாகாண சனத்தொகையில் சுமார் 3% காணப்படுகின்ற முஸ்லிம் மக்களை மையப்படுத்தியதாக ஏதேனும் அரசியல் பாதுகாப்பு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளனவா? என்பதாகும்.
எனவே இங்கு தமிழ்தரப்பினது கோரிக்கையானது அவர்களுடைய சமூக அரசியலில் நியாயமானது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை.அதே போன்றே முஸ்லிம் காங்ரஸ் வைத்துள்ள கரையோர மாகாணம் அல்லது கல்முனை மாவட்டம் தொடர்பான கோரிக்கையையும் புறக்கனிக்க முடியாது. என்றாலும் இவர்களது கோரிக்கைகள் எந்தளவிற்கு பெரும்பான்மை அரசியல் வாதிகளால் வழங்ப்பட இருக்கிறது என்பதே பிரதான சந்தேகமாகும். தமிழ் மக்களது சமஷ்டி கோரிக்கை தொடர்பான தவறான கருத்துக்களை தென்னிலங்கையில் ஏற்படுத்துவதிளே எதிர்கட்சி பெரும்பான்மை அரசியல் வாதிகள் குறியாக இருக்கின்ற போது முற்றுமுழுதாக சிறுபான்மை ஆதரவோடு அமைக்கப்பட்டுள்ள இவ்வரசாங்கமானது சிறுபான்மை மக்களுக்கு அவர்கள் கோறிவருகின்ற அரசியல் தீர்வுகளை வழங்கியதன் பிற்பாடு எவ்வாறான பதிலை தென்னிலங்கைக்கு வழங்கப்போகிறது என்பதும் இங்கு எழுப்பப்படும் பிரதான வினாவாகும். சிறுபான்மை இனங்களுடைய அதிகார பகிர்வு தொடர்பான கோறிக்கைகள் பின்வரும் ஏதேனும் ஒரு முறையில் வழங்கப்படலாம் என எதிர்வு கூறமுடியும்.
1.வடகிழக்கு இணைந்த சமஷ்டியும் அம்பாறையை(கல்முனை) மையப்படுத்தியதான கரையோர மாகாணம் அல்லது மாவட்டம்
2.வடக்கு வேறான கிழக்கு வேறான சுயாட்சி அரசுகள்
3.சுயாட்சி அல்லது சமஷ்டி என்ற கோட்பாடுகளுக்கு தென்னிலங்கையில் ஆதரவு இல்லை என்ற காரணத்தினால் குறைந்த பட்சம் 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்த பிராகம் மாகாண சபைகளுக்குறிய அதிகாரங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படலாம்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள எந்த வகையிலான தீர்வுத்திட்டங்கள் வழங்கப்பட்டாலும் வடமாகாண முஸ்லிம்களை பொருத்தவரையில் எவ்வித அரசியல் இலாபத்தையும் பெறமுடியாது என்பது வெளிப்படையான உண்மையாகும். வட மாகாண முஸ்லிம் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களது கட்சி வடகிழக்கு இணைப்பு தொடர்பாக தமது நிலைப்பாடானது வடக்கும் கிழக்கும் இணையக்கூடாது என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக கூறி வருகின்ற போதும் வடமாகாண முஸ்லிம் மக்களது அரசியல் இருப்பு தொடர்பான எவ்வாறான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசியல் அமைப்பு சபையிடம் முன்வைத்திருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. வட மாகாண முஸ்லிம்கள் மீள் குடியேற்றத்தின் பிற்பாடு எதிர் நோக்குகின்ற பிரதான பிரச்சினை காணி (வில்பத்து, முள்ளியவலை,) தொடர்பானது. புதிய அரசியல் சீர்திருத்தம் காணி தொடர்பான அனைத்து பிரச்சினையினையும் கையாள்கின்ற பொறுப்பை வடமாகண சபையிடம் ஒப்படைத்துவிட்டால் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு எதிரான அரசியல் போக்கினை கடைபிடிக்கின்ற இவர்களால் எதனை சாதிக்க முடியும் என்பதும் கேள்வியாகும். தமிழ் மக்களுடன் இணைந்தே வடமாகாண முஸ்லிம்களது அரசியல் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மையாகும். தமிழ் தரப்பை புறந்தள்ளி வடமாகாண முஸ்லிம்களது அபிலாஷைகள் நிறைவேறுவது என்பது கேள்விக்குறியாகும். அது அவ்வாறிருக்க தமிழ்தரப்புடன் இணைந்து அரசியல் செய்கின்ற முஸ்லிம் காங்ரஸ் கூட வடமாகாண முஸ்லிம்கள் தொடர்பான தமது நிலைப்பாட்டை இது வரையில் வெளியிடவில்லை. இது முஸ்லிம் மக்களது உரிமை தொடர்பாக வடமாகாண முஸ்லிம்களை முஸ்லிம் காங்ரஸ் புறக்கணிக்க முற்படுவதாக எண்ணத்தோன்றுகிறதுவடமாகாண முஸ்லிம்கள் தொடர்பாக ஏன் இக்கட்டுரை வரையப்படுகின்ற தெனில் இலங்கையில் இடம்பெற்ற இனப்பிரச்சினையின் போது இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட ஒரே சமூகம் வடமாகாண முஸ்லிம்கள் என்பதனால் ஆகும். எனவே அகில இலங்கை மக்கள் காங்ரஸ் மற்றும் முஸ்லிம் காங்ரஸ் ஆகிய இரு கட்சிகளும் தமது உள்ளக அதிகார போட்டியை மறந்து அரசியல் சீர்த்திருத்தத்தில் வடமாகாண முஸ்லிம்கள் தொடர்பான ஏதேனும் அரசியல் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்வைக்கப்பட ஆவணம் செய்யுமாறு வேண்டும் நோக்கிளே இக்கட்டுரை வரையப்படுகிறது.
ஆக்கம்- SIFAS NAZAR B.A (JAFFNA) REDG LLB (OUSL)
0 Comments