Subscribe Us

header ads

புனித ரமழானிற்கு முன்னர் ஊர்மட்ட ஷுராக்கள் அவசியம் ஸ்தாபிக்கப் படல் வேண்டும்!

வருமுன் காக்க அடிமட்ட தலைமைகள் அவசியம், வந்தபின் பார்க்கமட்டுமே தேசியமட்ட தலைமைகளால் முடியும்.
போரிற்குப் பின்னரான இலங்கையில் பூதாகராமாக உருக்கொண்டு வரும் கட்டுக் கடங்காத பேரினவெறிப் பூதம் குறித்த எனது சில அவதானங்களை வஸிய்யதாக இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
அன்பிற்குரிய சகோதரர்களே, 
அன்று தம்புள்ளை அளுத்கமை முதல் இன்று அம்பாறை திகனை வரை இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள காழ்ப்புணர்வு பரப்புரைகள் வன்முறைகள் குறித்து நாம் எல்லோரும் நன்றாகவே அறிந்து உணர்ந்து பட்டுத் தெரிந்து வைத்துள்ளோம்.

உண்மையில் நாம் உடனடியாக குற்றம் சுமத்துகின்ற அரசியல் தலைவர்கள் கட்சிகள் கூலிப் படைகள் என்பவற்றிற்குப் பின்னால் பிராந்திய தேசிய சர்வதேசிய பின்புலங்களுடன் கட்டுக்கடங்காமல் பூதாகரமாக வளர்ந்து வரும் பேரினவெறி பயங்கரவாதத்தினை அதன் சரியான பரிமாணங்களில் விளங்கிக் கொள்ளாது களநிலவரங்களை கையாளும் குறுகிய வட்டத்திற்குள் சுழன்று கொண்டிருக்கின்றோம் என்பதே உண்மையாகும்.
இன்று எம்மை சுனாமி போல் சூழ்ந்து வரும் கட்டுக்கடங்காத இனமதவெறி அத்துமீறல்கள் அடாவடித்தனங்கள் அன்றுபோல் சில சம்பவங்களோடு முடிந்துவிடும் மோதல்கள் அல்ல அது தேசிய பிராந்திய சர்வதேச பின்புலங்களைக் கொண்ட தெளிவான பெருந்தேசிய சங்கிலித் தொடர் நிகழ்ச்சி நிரல் என்பதனை நாம் அறிவோம்.
அவ்வப்போது சந்தர்பங்களை சமாளிக்கவும் பின்னர் மறந்துவிடவும் கூடிய உஷார் மடையர்கள் போல் செலாற்றுவதில் அல்லது எதிர்வினையாற்றல்களோடு நின்று கொள்வதில் நாம் பிரசித்தமாக இருக்கின்றோம்.
ஏதேனுமொரு பிரச்சினை தோன்றுகிற பொழுது உடனடியாக அரசியல் வாதிகளையோ, பிரபலங்களையோ , கொழும்பிலுள்ள ஸ்தாபனங் களையோ அணுகுவது வழமையாக இருக்கின்றது, சமகாலத்தில் அரசியல் ரீதியாகவும், இயக்க ரீதியாகவும் தமக்குள்ளே முரண் பட்டு , பிளவுண்டுள்ள முஸ்லிம் சமூகம் ஒற்றுமையின்மையால் பல்வேறு துறைகளிலும் வலுவிழந்து பாரிய தலைமைத்துவ வெற்றிடம் ஒன்றுடன் பெரும் நம்பிக்கையீனத்துடன் நாம் இருக்கின்றமை யாவரும் அறிந்த விடயமே, எமது கடந்தகால பயிரிடல்களின் அறுவடைகளையே நாம் இன்று கண்கூடாக காணுகிறோம்.
இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை இவ்வாறான சவால்கள் ஏற்கனவே அல்குர்ஆனிலும் ஸுன்னாஹ்விலும் உம்மத்திற்கு எதிர்வு கூறப்பட்டுள்ள சோதனைகள் என்பதனையும் அவற்றிற்கு எவ்வாறு உம்மத் முகம் கொடுக்க வேண்டும் என்ற உன்னதமான வழிகாட்டல்களும் அவ்வாறே சொல்லித்தரப்பட்டுள்ளன என்பதனையும் நாம் முதற்கண் ஈமானிய உணர்வுடன் பரிந்து கொள்ள வேண்டும்.
எமது தனிப்பட்ட , குடும்ப, சமூக, தேசிய வாழ்வினை அதன் எல்லா துறைகளிலும் அரசியல், சமூக, பொருளாதார, சமய கலாசார வாழ்வியலை எல்லா மட்டங்களிலும் ஊர் மஹல்லா மட்டங்களில் இருந்து தொகுதி மாவட்ட மாகாண தேசிய மட்டங்கள் வரை தீவிரமான ஆனால் நிதானமான மீள்பரிசீலனை செய்தல் தீர்வுகளை நோக்கிய முதலாவது படியாகும்.
நிச்சயமாக எவ்வாறு நாம் தனிநபர்களாக எமது சொந்த வாழ்வை, குடும்ப வாழ்வை, உறவு முறைகளை, செலவினங்களை, இருப்பு பாதுகாப்பை, கொடுக்கள் வாங்கல்களை, போக்குவரத்துகளை, பொறுப்புக்களை கடமைகளை அன்றாடம் வாராந்தம் மாதாந்தம் வருடாந்தம் தனியாகவும் கூட்டாகவும் மீளாய்வு செய்து திட்டமட்டுக் கொள்கிறோமோ தேவையான நிபுணத்துவ ஆலோசனைகளை சேவைகளை வளங்களை பெற்றுக் கொள்கிறோமோ அவ்வாறே ஒவ்வொரு மஹல்லா ஊர் மட்டத்திலும் கூட்டாக ஷுரா முறையில் எமது சமூக வாழ்வை கூட்டுப் போறுப்புடன் திட்டமிட்டுக் கொள்வது எமக்கு இஸ்லாம் சொல்லித்தரும் அதி உன்னதமான கட்டாயமான வழி முறையாகும்.
நாம் வாழுகின்ற தேசத்தைப் பொறுத்தவரை எமது குடிசனப்பரம்பல் எம்மைச்சூழ வாழும் பெரும்பான்மை சமூகங்கள், எமது அமைவிடங்கள், எமது சன்மார்க்க, சிவில், அரசியல் தலைமைகள், எமது புத்திஜீவிகள், எமது மஸ்ஜிதுகள், எமது வளங்கள், எமது பலம் பலவீனங்கள் என்பவை பிரதேசத்திற்கு பிரதேசம் ஊருக்கு ஊர் மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபட்டவைகளாகும்.
எனவே எமது அரசியல் சிவில் சன்மார்க்க தேசியத் தலைமைகளின் நெறிப்படுத்தல்களின் கீழ் ஊர் மட்டம் மாவட்ட மாகாண மட்டங்கள் முதல் தேசிய மட்டங்கள் வரை சமூகத்தின் எல்லா தரப்புகளையும் உள்வாங்குகின்ற கலந்தாலோசனை (ஷுரா) கட்டமைப்புகளை எம்மை ஒருங்கிணைக்கும் பொறிமுறைகளை நாம் ஏற்படுத்தி அந்தந்த மட்டங்களிற்கான அழகிய கட்டுக்கோப்பான தலைமைத்துவக் கட்டமைப்புகளை தோற்றுவிப்பதே தீர்வுகளை நோக்கிய அடுத்தபடி தயார் நிலையாகும்.
ஊர்மட்ட ஷுரா சபைகளை அமைத்துக் கொள்ள அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில் அவ்வப் பிரதேசங்களிற்கு விஜயம் செய்து தேவைப்படுகின்ற நிபுனத்துவ ஆலோசனைகளை தேசிய ஷுரா சபை வழங்கி வருகின்றமை குறிப்பிடத் தக்கது.
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

Post a Comment

0 Comments