Subscribe Us

header ads

வரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை திருடி விற்ற கணவன்! இந்தியாவில் சம்பவம்



வரதட்சணை என்பதே ஒரு பகல் கொள்ளை, ஊரறிந்த திருட்டு. இந்த திருட்டிற்காக தினந்தோறும் தினுசு தினுசாக வதைபடும் அபலைப்பெண்கள் இந்தியாவில் ஏராளம். நம் நாட்டில் கிட்னி திருட்டு என்பது அன்றாட நிகழ்வு தான் என்றாலும் பொதுவாக அந்நியரிடமிருந்தே திருடுவர் அல்லது ஏமாற்றிப் பறிப்பார்கள் ஆனால் இதற்கெல்லாம் மேலாக எவனுமே கற்பனை செய்திராத திருட்டை நடத்தியுள்ளான் ஒரு கணவன்.

மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த ரீட்டா சர்க்கார் என்ற பெண்மணி 2 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததை தொடர்ந்து கொல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அடுத்த நாளே அப்பன்டிக்ஸ் எனும் குடல்வால் அகற்றல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வீடு திரும்பினார். எனினும், அப்பன்டிக்ஸ் ஆபரேசன் செய்யப்பட்டதையே வெளியே சொல்லக்கூடாது என கணவனால் மிரட்டப்பட்டு வந்துள்ளார்.

மீண்டும் கடந்த 6 மாதங்களாக முன்போலவே வயிற்று வலி பிரானனை வாங்கியுள்ளது எனினும் அவரை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல கணவன் மறுத்துவிட்டார். இந்நிலையில் அப்பெண்ணின் உறவினர்களே இரக்கம் கொண்டு மருத்துவ மனையில் சேர்த்தனர். மருத்துவ பரிசோதனைகள் அவரது வலதுபுற கிட்னி திருடு போயுள்ளதை காட்டிக் கொடுத்துள்ளது.

ரீட்டாவிற்கும் சர்க்காருக்கும் திருமணமாகி 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் வரதட்சணைக்காக தினமும் கொடுமைப்படுத்தப்பட்டு வந்துள்ளார். ரீட்டாவின் பெற்றோர்களால் திருமணத்தின் போது ஒப்புக்கொண்ட 2,000 ரூபாய் வரதட்சணையை தர இயலவில்லை. எனவே, ரீட்டா வயிற்றுவலியால் துடித்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவருக்கே தெரியாமல் கிட்னியை திருடி சண்டிகரை சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு 2 லட்ச ரூபாய்க்கு விற்றுள்ளான் இந்தக் கயவன்.

கணவனுடன் அவனுக்கு உடந்தையாக இருந்த அவனது சகோதரனும் கைது செய்யப்பட்டுள்ளனர், மாமியார் தலைமறைவாகி விட்டாளாம். இந்தத் திருட்டை கண்டிப்பாக சாமானியனான சர்க்கார் தனியாளாக செய்திருக்க முடியவே முடியாது. மருத்துவனும் மருத்துவமனையும் தான் இந்த திருட்டுக் குற்றத்தை தைரியமாக திட்டமிட்டு செய்திருக்க முடியும். இவர்களைப் போன்ற சமூக அவலங்கள் தயவுதாட்சண்யமின்றி துடைத்தெறியப்பட வேண்டும். கடமையை செய்ய மண்டியிடா அரசும், நீதிமன்றங்களும் முன்வர வேண்டும்.

Source: Newshub / Dailymail / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

Post a Comment

0 Comments