உள்ளுராட்சித் தேர்தல் நிறைவடைந்த பின்னர் நாட்டில் அநேகமான உள்ளுராட்சி சபைகளில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை ஆசனங்களை வெல்லாது. இந்நிலையில், புதிய தேர்தல் முறையில் உள்ள குறைபாடுகளும் - பாதிப்புக்களும் தேர்தலின் பின்னர் தெளிவாக தெரியும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இதேவேளை, புதிய தேர்தல் முறையில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தவும் தேவையான முன்னெடுப்புக்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதன்போது மாகாண சபைகளின் அதிகாரங்கள் பலப்படுத்தப்பட்டு மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
காத்தான்குடி, ஊர் வீதி சின்னப்பள்ளி சதுக்கத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது:-
இத்தேர்தலானது அரசாங்கத்தை மாற்றுகின்ற தேர்தலோ அல்லது என்னைத் தோற்கடிக்கின்ற தேர்தலோ அல்ல. எமது மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றக் கூடிய அதிகாரமிக்க சபையாக காத்தான்குடி நகர சபையை மாற்றுகின்ற தேர்தல்.
தேர்தல் வட்டாரங்களில் தெரிவு செய்யப்படக் கூடிய வேட்பாளர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தைச் சார்ந்தவராக இருந்தால் மாத்திரமே எமது தேவைகளை இலகுவாக நிறைவேற்றிக் கொள்ள முடியும். அரசாங்கத்தின் பிரதிநிதிகளை தெரிவு செய்வதால் மாத்திரமே இப்பகுதியில் அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும். தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமாயின் மேற்படி அதிகாரங்களை வைத்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கே அனைவரும் வாக்களிக்க வேண்டும்.
காத்தான்குடியில் நாங்கள் கௌரவமான அரசியல் கலாசாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். யாரையும் விமர்சிக்காது, யாருடைய தனிப்பட்ட விடயங்களையும் பேசாமல் மிகவும் அழகான முறையிலேயே எமது பிரச்சாரப் பணிகளை முன்னெடுக்கின்றோம். எமது வேட்பாளர்களுக்கும் இந்த அறிவுறுத்தல்களை கண்டிப்பாக நடைமுறைப்படுத்துமாறு கட்டாயப்படித்தியும் உள்ளோம். அவ்வாறான நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எம்மை சீண்டும் வகையில் ‘ஊழல் ஊழல்’ என்று கூறித்திரிந்து மக்கள் மத்தியில் பொய்யான தோற்றப்பாட்டினை ஏற்படுத்த முற்படுகிறார்கள்.
எனவே, நாங்கள் எமக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி என்பன முன்வைத்துள்ள 20 குற்றச்சாட்டுக்களுக்கும் தெளிவான – ஆதாரபூர்வமான பதிலை வழங்க ஊழல் மாநாடு ஒன்றை நாளையும் நாளை மறுநாளும் (இன்றும், நாளையும்) ஓழுங்கு செய்துள்ளோம். நானே சகலவற்றுக்கும் பதில் அளிக்கவுள்ளேன்.
நாங்கள் எந்த அபிவிருத்திப் பணியை முன்னெடுத்தாலும் அதற்கு எதிராக கோஷம் எழுப்புகின்றவர்கள் இந்த மண்ணுக்கு எதை செய்துள்ளார்கள். ஊர் வீதி அபிவிருத்தி செய்யும் போது அதனைத் தடுக்க நல்லாட்சிக்கான தேசிய முன்னணியைச் சேர்ந்த சகோதரர்கள் நீதிமன்றம் வரைச் சென்றார்கள். அதேபோன்று, இந்தப் பகுதியில் மைதானமொன்று இல்லாத குறையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்த போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஷிப்லி பாறுக் எம்மை காட்டிக் கொடுத்து அத்திட்டத்துக்கு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தியிருந்தார்.
எவ்வாறான தடைகள் வந்தாலும் இப்பிரதேசத்துக்கு நாங்கள் முன்னெடுக்கும் அபிவிருத்திகளை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. 2022 என்ற தூர நோக்கு சிந்தனையுடன் நாங்கள் திட்டங்களை வகுத்துள்ளோம். அத்திட்டத்தின் ஊடாக காத்தான்குடி சகல விதத்திலும் பரிபூரணமான நவீன நகரமாக மாற்றியமைக்கப்படும்.
தொகுதிவாரி முறையிலேயே எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி ஒரு தேர்தல் தொகுதியாக மாற்றப்படும். அந்த யோசனை என்னால் முன்வைக்கப்பட்ட ஒன்றே. இது வேறொரு திருத்தம் கொண்டு வரும் வரை நிலையாக இருக்கும். இந்த ஊருக்கென்று ஒரு பிரதிநிதித்துவம் இருந்ததால் தான் எமது ஊருக்கான மாகாண சபை பிரிதிநிதித்துவம் பாதுகாக்கப்பட்டது.
மாகாண சபைகளின் அதிகாரங்கள் பலப்படுத்த வேண்டும். நாங்கள் அந்த நிலைப்பாட்டில் உறுதியாகவே இருக்கின்றோம். அத்தோடு, வடக்கும் கிழக்கும் இணைவதற்கு இடமளிக்கவும் மாட்டோம்.
தற்போது உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொகுதிவாரி தேர்தல் முறையானது பல பாதிப்புக்களை ஏற்படுத்தும். தேர்தல் நிறைவடைந்த பின்னர் நாட்டில் உள்ள அநேகமான உள்ளுராட்சி சபைகளில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை ஆசனங்களை வெல்லாது. ஆட்சியமைக்கும் அதிகாரம் எந்தக் கட்சிக்கும் இல்லாது போகும். கூட்டாட்சி நடத்தும் நிலையே ஏற்படும். அதனால் குழப்பமான, நிலையற்ற சபையாகவே அது இருக்கும். இந்நிலை, காத்தான்குடி நகர சபைக்கு ஏற்பட்டு விடக்கூடாது. – என்றார்.
0 Comments