Subscribe Us

header ads

வீட்டில் ஏற்றிவைக்கப்பட்ட கை விளக்கை போன்றவர்கள்தான் அரசியல்வாதிகளும்..,

பிரகாசமாக எரியும் விளக்கு ஒரு கட்டத்தில் குறைவான ஒளி கொடுக்குமாக இருந்தால் ஒன்று அதற்கு எண்ணெய் ஊற்றவேண்டும் அல்லது திரியை தூண்டி விடவேண்டும் அப்போதுதான் அது மீண்டும் பிரகாசமாக எரியும்.
இதை நாம் சரியாக செய்யாமல் விளக்கு ''குருட்டு வெளிச்சம்'' தருகின்றது என்று சொல்லிக்கொண்டிருப்பதில் நியாயமில்லை.
தனது வாக்கை அளித்து ஒரு மக்கள் பிரதிநிதியை தெரிவு செய்து அந்த நபரை பிரதேச சபைக்கோ, மாகாண சபைக்கோ, அல்லது பாராளுமன்றத்துக்கோ அனுப்பி வைப்பதுடன் பொதுமக்களின் கடமை முற்றுப்பெற்று விடுவதில்லை, தாம் தெரிவு செய்த பிரதிநிதிகள் சரியாக இயங்குகிறார்களா அவர்களின் கடமைகளை சரிவர செய்கிறார்களா என்று கண்காணிக்கவும் பொதுமக்கள் கடமைப்பட்டுள்ளார்கள்.
நாம் நமது சார்பாக ஒரு பிரதிநிதியை எதற்காக தெரிவு செய்து அனுப்புகிறோம் ? நம்மிடத்தில் அநேக பொது தேவைகள் இருக்கும், அந்த தேவைகளை நிறைவேற்றித்தருவதற்கு அரசுக்கும் மக்களுக்கும் இடையில் ஒரு மீடியேற்றர் வேண்டும் அந்த மீடியேற்றராகவே நாம் நமது பிரதிநிதிகளை அங்கு அனுப்புகிறோம். உங்களின் தேவைகள் சரிவர நிறைவேற்றப்படாதவிடத்து அவர்களை கேள்வி கேட்கும் உரிமை உங்களிடம் இருக்கின்றது.
எந்தவொரு பொதுமகனும் தாம் தெரிவு செய்த பிரதிநிதியை எந்தவொரு பொது தேவைகளுக்காகவும் சந்தித்த வரலாறு உண்டா ? வீதி சரியில்லை, வடிகான் சரியில்லை, தெரு விளக்குகள் சரியில்லை, கழிவுகள் சரிவர அகற்றப்படுவதில்லை, பஸ் தரிப்பிடம் சரியில்லை, எக்ஸட்ரா எக்ஸட்ரா..., இது பற்றிய முறைப்பாடுகளை எப்போதாவது மக்கள் பிரதிநிதிகளிடத்தில் தெரிவித்ததுண்டா இல்லவே இல்லை..,
மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்களுடன் சந்திப்புகளை நிகழ்த்துவதாக இருந்தால் அவர்களை சந்திக்க ஒரு நீண்ட வரிசை காத்திருக்கும், அங்கு சென்று அவர்களின் தேவைகளை விசாரித்தால், எனது சமுர்த்தி முத்திரையை வெட்டி விட்டான், நாலு மாசம் இருந்து முதியோர் ஓய்வூதிய பணம் கிடைக்கவில்லை, எனது மகனுக்கு தொழில் ஒன்று வேணும் அதற்கான சீ வி இது, எனது மகளுக்கு இடமாற்றம் வேணும் நீங்கதான் செஞ்சு தரணும், அந்த ரோட்டு போடுகின்ற கொன்றக்ட எனக்கு பார்த்து தாங்க நான் உங்களை கவனிக்கிறேன்.., இப்படியான சுயநலம் மிகுந்த தேவைகளே அவர்களிடத்தில் இருக்கும்.
இந்த தேவைகளை நிறைவேற்றிக்கொடுக்காத அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலில் அவர்களின் எதிரிகள் ஆகிவிடுவார்கள், ஊருக்காக சேவை செய்ய வந்த ஒரு மக்கள் பிரதிநிதியை உங்களின் வீட்டு வேலைக்காரர்கள் ஆக்கியது யார் செய்த தவறு இப்படியே ஒவ்வொரு அரசியல்வாதிகளையும் அவர்கள் செய்யவேண்டிய வேளைகளில் இருந்தும் அவர்களின் கடமைகளில் இருந்தும் திசை திருப்பிவிட்டு கடைசியில்..,
அவன் தனது பதவிக்காலத்தில் ஊருக்காக என்ன செய்தான் ? நாங்கள் வோட் போட்டு தெரிவு செஞ்சதுக்கு எங்களுக்கு என்ன செய்தான் என்கின்ற கேள்வியை எழுப்புவது வேடிக்கையாக இருக்கின்றது. அவன்தான் உங்களுக்காக சேவை செய்வதற்கு நீங்கள் கேட்கவில்லையே அவனைத்தான் நீங்கள் தூண்டவில்லையே நீங்கள் உங்களின் கடமையை சரிவர செய்துவிட்டு அவர்களிடமிருந்து எதிர்வினைகள் பெறப்படாதவிடத்து அவர்களை நிராகரிப்பதில் நியாயம் உண்டு.
நாம் வாக்களிப்பதுடன் நமது கடமை முடிந்து விட்டது என்று எண்ணி சும்மாவே இருக்கும் போது..., நாம் தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதியாகிவிட்டோம் அடுத்த ஐந்து வருடங்களுக்கு நம்மை யாரும் எதுவும் செய்யமுடியாது நாம் சும்மாவே இருப்போம் என்று சிந்திப்பதில் என்ன தவறு இருக்கின்றது ?
வாக்களிப்பதுடன் நமது கடமை முடிந்து போவதில்லை அதையும் தாண்டி நமக்கு கடமைகள் இருக்கின்றது என்று சிந்தித்து செயல்படாதவரை எந்தவொரு அரசியல்வாதியும் அவர்களின் கடமைகளை சரிவர செய்யப்போவதில்லை.
ஆகவே கேள்விகள் கேட்போம் அவர்களை நமது பிரதேசத்தின் தேவைகள் நிறைவேற்றப்படாதவிடத்து, திரியை தூண்டி பிரகாசமாக எரியச்செய்யும் விளக்கினை போல நாமும் அவர்களை தூண்டி பிரகாசமாக எரியச்செய்வோம்.

-Razana Manaf-

Post a Comment

0 Comments