சவுதி சுற்றுலா பயண விசாக்களை விநியோகிக்க பயண ஏற்பாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் செயல்படும் டிராவல் ஏஜென்ஸீஸ் எனப்படும் பயண முகவர் நிறுவனங்கள் A, B, C, D என 4 பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் 'D' என்ற வகைக்குள் வரும் டிராவல் ஏஜென்ஸிகள் சுற்றுலா விசாக்களை வழங்குவதற்கு அனுமதிக்கப்படும் என சவுதி சுற்றுலா மற்றும் தேசிய பாரம்பரியச் சின்னங்களுக்கான ஆணையம் (Saudi Commission for Tourism and National Heritage - SCTH) தெரிவித்தது. மேலும், ஜித்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இத்தகைய சுற்றுலா விசா வழங்கும் டிராவல் ஏஜென்ஸி ஒன்றுக்கு முதலாவது லைசென்ஸ் வழங்கி திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.
இதற்குமுன் இத்தகைய விசாக்கள் புனித யாத்ரீகர்கள், வர்த்தகர்கள் மற்றும் தங்குமிட அனுமதியின் கீழுள்ள வெளிநாட்டினரின் உறவுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இதற்கிடையில், நாட்டிலுள்ள சுற்றுலா கட்டமைப்புக்களை மேம்படுத்துவதற்காக சுமார் 2.67 பில்லியன் டாலர்களை சவுதி சற்றுலா மற்றும் தேசிய பாரம்பரியச் சின்னங்களுக்கான ஆணையத்திற்கு சவுதி அரசு ஒதுக்கியுள்ளது.
சவுதியில் தற்போது மேலும் 6 சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. குறிப்பாக அல் உலா, பர்ஸான் தீவுகள், அல் ராஸ் அல் அப்யத் கடற்கரை போன்றவை குடும்பத்தினருக்கு ஏற்ற சுற்றுலா தளங்களாகும். இவை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு புனரமைக்கப்பட்டு வரும் 80 சுற்றுலா மையங்களுடன் இணைக்கப்படும்.
எதிர்வரும் 14 வருடங்களில் சவுதி அரேபியாவின் பெட்ரோலியம் அல்லாத வருமானத்தில் சுமார் 18 சதவிகிதம் சுற்றுலாவின் மூலம் கிடைக்கலாம் என்றும், 2020 ஆம் ஆண்டிற்குள் சுமார் 1.5 மில்லியன் சுற்றுலாவாசிகள் வருகை தருவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விசன் 2030 என்ற தூரநோக்குத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பின்மை அகற்றம், பெட்ரோலியம் அல்லாத வேறு துறைகளின் தொழிற்சாலைகள் பெருக்கம், சுற்றுலா, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை அதிகரித்தல் உள்ளிட்ட பரந்த முதலீட்டுத் திட்டங்களை அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
Source: StepFeed / Arab News / Msn
தமிழில்: நம்ம ஊரான்
0 Comments