Subscribe Us

header ads

DUBAI >>> ஷார்ஜாவில் 74 வயது மூதாட்டி டாக்டரேட் பட்டம் பெற்றார்!



அமீரகத்தில் சுமார் 17 ஆண்டுகள் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வுபெற்ற, 5 குழந்தைகளையும் 14 பேரக்குழந்தைகளை பெற்றுள்ள 74 வயது மூதாட்டியான நஜ்மா கலீல் அபு எஸ்பா என்பவர் கல்விக்கு வயது ஒரு தடையல்ல என்று நிரூபித்துள்ளதுடன் முக்கியமான தொடர் வரலாற்று நிகழ்வு ஒன்றையும் இதன் மூலம் ஆவணப்படுத்தியுள்ளார்.

முதலாவது இன்திபதா எனும் மக்கள் பேரெழுச்சியின் 2012 ஆம் ஆண்டு வரையிலான கால் நூற்றாண்டு போராட்டத்தில் பாலாஸ்தீனிய பெண்களின் பங்கு (‘The role of Palestinian women in the struggle within the quarter century of the first intifada until 2012.’) என்ற தலைப்பின் கீழ் நேரடி களஆய்வு செய்து தனது ஆய்வறிக்கைகளை ஷார்ஜா 'தி ஹேக் யூனிவர்ஸிட்டியில்;' சமர்ப்பித்து வரலாற்றுத்துறையில் டாக்டரேட் பட்டம் பெற்றுள்ளார்.

தனது கள ஆய்விற்காக ஜோர்டானில் அகதிகளாக வாழும் பாலஸ்தீனிய பெண் சிறைவாசிகள், வீரமரணமடைந்தவர்களின் உறவினர்கள், பெண் தலைவர்கள் என முக்கியமானவர்களை சந்தித்து தகவல்களை திரட்டியுள்ளார். மேலும் 2014 ஆம் ஆண்டு தனது தாய் மண்ணிற்கே சுற்றுலா விசாவை மிகுந்த சிரமத்திற்கு இடையில் சென்று வந்தவர் தனது பிறந்தகமான 'சல்மா' எனும் ஊரே வெறும் கற்குவியலாக சிதைக்கப்பட்டுள்ளதை கண்டு கண்ணீர்விட்டார், கடந்த பல பத்தாண்டுகளில் பாலஸ்தீனியர்கள் பட்ட துயரின் வரலாற்றுச் சின்னங்களாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், கடந்த 2000 ஆம் ஆண்டிலும் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் மருத்துவரின் அறிவுரைகளையும் மீறி தனது ஆய்விற்காக ஏமான் நாட்டிற்கும் சென்று ஆதாரங்களை திரட்டி வந்துள்ளார். தி ஹேக் யூனிவர்ஸிட்டியின் டாக்டரேட் பட்டதாரிக்கான உடைகளை அணிந்திருந்த உவகைமிகு தருணத்தை அசைபோடும் நஜ்மா கலீல் அபு எஸ்பா, இந்த சாதனை தனது கணவர் டாக்டர். அப்துல்லா முஸ்தபா மற்றும் குழந்தைகளின் ஒத்துழைப்பு இல்லையேல் சாத்தியமாகியிருக்காது என நன்றி தெரிவிக்கின்றார்.

பகல் முழுவதும் வாரிசுகளுக்கும், வாரிசின் வாரிசுகளுக்கும் பாடங்கள் சொல்லித் தருவதில் செலவிடும் நஜ்மா அவர்கள் இரவு 11 மணிக்கு மேல் தான் தன்னுடைய நேரத்தை ஆய்வுகளை ஆவணப்படுத்த செலவிடுவாராம். பாலஸ்தீனிய பெண்களின் பாராம்பரிய உடையில் வந்து விழா மேடையில் பட்டம் பெற்றுக் கொண்ட நிகழ்வை அவரது மூத்தமகள் டாக்டர் சமர் அப்துல்லா அவர்கள் வர்ணித்ததாவது, ஒரு தாய் சந்திந்த போராட்ட வாழ்வின் தொகுப்பே இந்த ஆய்வு என நெகிழ்ந்தார். மேலும் அவரது கணவரும் மகனும் இந்த டாக்டரேட் பட்ட வழங்கும் நிகழ்வை பெருமிதத்துடன் நினைவுகூர்கின்றனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 


Post a Comment

0 Comments