24X 365 மக்களால் நிரம்பி வழியும் கேந்திர ரயில் நிலையங்களில் மிகப்பிரதானமானது “கொழும்பு கோட்டை ரயில் நிலையம்”.
மருதானையிலிருந்து புறப்பட்டு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டபோது, ஏற்கனவே அங்கு காத்திருந்தவர்கள், எம்மையும் தள்ளிக்கொண்டு முண்டியடித்து ஏறவே, பதிலுக்கு நாமும் அவர்களை தள்ளிவிட்டு இறங்க நேர்ந்தது. ரயிலுக்கும், மேடைக்கும் இடையிலான ஆபத்து மிகுந்த பகுதியில் இப்படியொரு விளையாட்டு தேவை தானா?
பிறகு, கண்டிக்கான ரயில் வந்து கொண்டிருந்த போதே (நிறுத்துவதற்கு முன்னர்) பலரும் ஓடிச்சென்று ஏறுவது, ரயிலில் தொங்கிக்கொண்டு மேடையில் ஓடியோடி ஏறுவது, அதன்போது கதவுகளில் மோதிக்கொள்வது என சர்க்கஸ் காட்டியோருக்கு, இது எத்தனையோ உயிர்களை காவு கொண்ட ரயில் நிலையமென்பது ஒன்றும் தெரியாத சங்கதியல்ல.
பெண்கள், நோயாளிகள், சிறுவர், முதியோர் என பல தரப்பினரும் பயணிக்கவிருக்கும் போது, உடல்வலு மிக்க இளைஞர்கள் மட்டும் முண்டியடித்துக் கொண்டு இருக்கைகளை ஆக்கிரமித்தால் ஏனையோரின் நிலை என்னாவது? உண்மையில், அந்த இளைஞர்களே நின்றுகொண்டு பயணிக்க சக்தியுள்ளவர்கள்.
“யாருக்காச்சும் சீட் தேவையெனில் 2nd Class டிக்கட் எடுத்திருக்கலாமே?” என்றொரு கேள்வி சிலரிடமிருந்து வரலாம். “ஆம் எடுத்திருக்கலாம் தான். ஆனால் அது எல்லோராலும் முடியுமா?” என்ற எதிர்க் கேள்விக்கும் அவர்களே பதில் சொல்லட்டும்.
“மிதி பலகையில் பயணிப்பது தடை” என இயற்றப்பட்ட சட்டங்கள் வெறும் காகித்தில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருப்பதாலோ என்னவோ, உயிர்களைப் பணயம் வைத்து அதன் கதவுகளில் ஒரு கூட்டம் தொங்கவே செய்கிறது. அவர்களை ஏசிப் பயனில்லை. தமது பொருளாதார நிலை, நேர விரயம், ஊர் அமைவிடம் என ரயிலுடன் பிணைந்தோர் வேறு என்ன தான் செய்ய முடியும்?
பக்கத்து தண்டவாளத்தில் இன்னொரு ரயில் வரும்போதும், இடைக்கிடையே பாலங்கள் மற்றும் மின் கம்பங்கள் வரும்போதும், அப்படி தொங்கிப் பயணிக்கும் மொத்தப்பேரும் மொத்தமாக உள்நோக்கிச் சென்று பிறகு பழையபடி தொங்கும் காட்சிகள், பார்ப்போரின் கால்களை கூசச் செய்கின்றன.
வங்கிகளில் வரிசையாக நிற்பதைப்போல, ரயில் நிலைய அதிகாரிகள் மூலம், பயணிகளை வரிசையாக நிற்கச்செய்து ரயில் வந்ததும் முறையாக ஏறச் செய்தால் அதன் மூலம் ஆபத்துகளைத் தவிர்ப்பதோடு, பெண்கள், முதியோர், நோயாளிகள் போன்றோருக்கும் அமர்ந்து பயணிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். அத்துடன், ரயில் பெட்டிகளின் கொள்ளளவுக்கேற்ப மட்டும் டிக்கட்கள் விநியோகித்தால், மிதிபலகையில் தொங்கிப் பயணிப்பதும் இல்லாமலாகிவிடும்.
சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகள் இவ்விஷயத்தில் கவனமெடுத்தால், நாளை இழக்கப்படவுள்ள பல உயிர்கள் காப்பாற்றப்படலாம். பல குழந்தைகள் அநாதையாவது தடுக்கப்படலாம் என்ற நம்பிக்கையில் இக்கருத்தை எழுதுகிறேனே ஒழிய விமர்சிப்பதற்காக அல்ல.
நன்றி.
A.J.M Inshaaf
0 Comments