பெரும் அமளிதுமளிக்கு மத்தியில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட மாகாண சபை தேர்தல் திருத்த சட்டத்தின்படி எவ்வாறு தேர்தல் நடைபெற உள்ளது என்பது பற்றி அரசியல்வாதிகள் உட்பட பலரும் பலவாறு கருத்து தெரிவித்து வரும் நிலையில், அந்த சட்டத்தின் முக்கிய அம்சங்களை பற்றிய சுருக்கமான ஒரு விளக்கம் இங்கே கொடுக்கப்படுகிறது.
▶️விகிதாசார அடிப்படையில் மாகாண சபை தேர்தல்களை எவ்வாறு நடைமுறை படுத்தவேண்டும் என்று 1988 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் வரையறை செய்கிறது. அதன்படியே இதுவரை காலமும் மாகாண சபை தேர்தல் நடாத்தப்பட்டிருந்தது.
▶️குறித்த அந்த சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட திருத்தங்களே தற்போது அமுலுக்கு வந்திருக்கும் சட்டமாகும். இதன் கீழ் வரும் குறிப்புக்கள் அனைத்தும் புதிய முறையையே விளக்கப்படுத்தும்.
▶️இந்த முறையில்ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 50% தொகுதிவாரியாக தேர்ந்தெடுக்கப்படுவர். மிகுதி 50% விகிதாசார முறையில் (இலகுவாக விளங்கிக்கொள்வதற்காக இரண்டாவது வகையை தேசிய பட்டியல் என்று அழைப்போம்) தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
▶️ஒவ்வொரு கட்சிகளும் இரண்டு வேட்பாளர் நியமன பத்திரத்தை (Nomination Paper) சமர்ப்பிக்கவேண்டும். ஒன்று தேர்தலில் நேரடியாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கானது. மற்றையது தேசியபட்டியலுக்குரிய வேட்பாளர்களுக்கானது.
▶️தேசியப்பட்டியலில் 50% க்கும் குறையாமல் பெண்களின் பெயர் இருத்தல் வேண்டும். தெரிவு செய்யப்படும் மொத்த உறுப்பினர்களில் பெண்களின் எண்ணிக்கையை 25% உறுதி செய்வதற்காகவே இந்த ஏற்பாடு.
▶️ஒற்றை வாக்குமுறை படியே தேர்தல் நடைபெறும். அதாவது வாக்காளர்கள் ஒரு தொகுதியில் கட்சிக்கே நேரடியாக வாக்களிப்பர். வெற்றிபெறும் கட்சியின் வேட்பாளர் குறித்த தொகுதிக்குரிய வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார்.
▶️புதிய தொகுதிகளின் எல்லைகளை வரையறை செய்வதற்காக தேசிய ரீதியில் பல இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து நபர்களை கொண்ட எல்லை நிர்ணய ஆணைக்குழு ஜனாதிபதியால் சட்டம் இயற்றப்பட்டு இரு வாரங்களுக்குள் நியமிக்கப்படும்.
▶️நான்கு மாதங்களுக்குள் எல்லை நிர்ணய குழுவின் வேலைகள் பூர்த்தியாக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
▶️ஒரு குறித்த மாவட்டத்தில்தெரிவு செய்யப்படவேண்டிய மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையின் 50% சதவீத எண்ணிக்கைக்கு நிகராக தொகுதிகள் உருவாக்கப்படும். உதாரணமாக ஒரு மாவட்டத்திலிருந்து மொத்தம் 20 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவேண்டும் என்றால் 10 தொகுதிகள் உருவாக்கப்படும்.
▶️ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் ஏதாவது ஒருபகுதியில் சிறுபான்மை இனம் செறிந்து வாழும் போது அந்த பகுதியை ஒரு தொகுதியாக பிரகடனப்படுத்த முடியும். அல்லது அதனை பல்லுருப்பினர் தொகுதியாக- Multi-member Electorate (இரட்டை தொகுதி) பிரகடனப்படுத்தமுடியும்.
▶️வடகிழக்குக்கு வெளியே வாழும் முஸ்லிம் மற்றும் தமிழர்கள் கவனிக்கவேண்டிய முக்கிய புள்ளி இதுவாகும். ஏனெனில் இவ்வாறு இரட்டை தொகுதிக்கு ஆகக்குறைந்தது எத்தனை சதவீத மக்கள் இருத்தல் அவசியம் என்ற எந்த குறிப்பும் இல்லாமல் ஒரு மூடலான வசனமாக பாவிக்கப்பட்டிருக்கது.
▶️எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டல் வேண்டும்
▶️அப்படி மூன்றில் இரண்டு கிடைக்காவிட்டால் மீளாய்வு முறை ஒன்று இருக்கிறது. விரிவஞ்சி அந்த முறை இங்கே தவிர்க்கப்படுகிறது.
▶️விகிதாசார அடிப்படையில் மேலதிக உறுப்பினர்களை (தேசிய பட்டியல்) தெரிவு செய்யும் முறை கீழே விளக்கப்படுத்தப்படுகிறது.
▶️அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளை அந்த மாவட்டத்தின் மொத்த உறுப்பினர்களால் வகுக்கப்பட்டு வரும் எண்ணுக்கு தகமை எண் (Qualifying Number) என அழைக்கப்படும்.
▶️தொகுதிவரியாக வெற்றிபெற்ற வேட்பாளர்களின்( கட்சிகளின்) எண்ணிக்கை கழிக்கப்பட்டு ஒவ்வொரு கட்சியும் பெற்ற மொத்த வாக்குகள் கணக்கிடப்படும். பின்னர் அந்த ஒவ்வொரு கட்சியின் எண்ணிக்கையும் தகமை எண்ணினால் தனித்தனியே வகுக்கப்படும். வகுக்கப்பட்டு வரும் எண்ணிக்கைக்கு அமைய தற்போதைய விகிதாசார அடிப்படையில் ஆசனங்கள் ஒதுக்கபடுவதை போல பெரிய எண்ணிக்கையில் இருந்து ஆசனங்கள் ஒதுக்கப்படும்.
▶️ஒவ்வொரு கட்சியினதும் தேசியபட்டியலுக்குரிய எண்ணிக்கைக்குரிய நபர்களை அவ்வந்த கட்சிகளின் செயலாளர்கள் நியமிப்பார்கள்.
தில்ஷான் முஹம்மது.
0 Comments