Subscribe Us

header ads

அமைச்சுப் பதவியைத் துறந்த போது காஸ்ட்ரோ,சேகுவாரா போல தோன்றிய மைத்திரி தற்போது ஜோக்கர் படத்தில் வரும் ப்ரெசிடண்ட் போல தோன்றுகிறார் (ஒரு மாணவியின் புழம்பல்)

அன்புள்ள ஜனாதிபதி அவர்களுக்கு


இந்தக் கடிதத்தை வழக்கமான சம்பிரதாய ஒழுங்கில் நான் எழுதவில்லை.ஏன் கேணத்தனமாய் தமிழில் எழுதுகிறாள் என்று நீங்கள் நினைக்கக் கூடாது.நீங்களும் உங்களது அரசும் உருவாக்கப் போகும் புதிய அரசில் யாப்பில் சிங்கள மொழிக்கு எந்தவிதத்திலும் சளைத்தது அல்ல தமிழ்.இனிமேல் எல்லாம் தமிழில் தான்..நீங்கள் தமிழ் படிக்க வேண்டும்...சரி போகட்டும். இது சிங்களத்திலும் வரும்.சொல்ல வரும் மேட்டர் அதுவல்ல.

எனக்கு வயது இருபத்தெட்டு.நாலாம் வருட அரச மருத்துவ கல்லூரி மாணவி.மூன்றாவது முறையாக உயர்தரப் பரீட்சை எழுதியே பல்கலைக்கழகம் சென்றேன்.இடையில் ஏற்பட்ட சுகயீனத்தால் இரண்டு வருடம் ஏற்கனவே வீணாகிவிட்டது. தரமற்ற சைட்டம் மருத்துவ கல்லூரி சர்ச்சைகளால் கடந்த ஒன்பது மாதங்களாய் இலங்கையில் உள்ள மருத்துவபீடங்கள் எல்லாம் இழுத்து மூடப்பட்டு இருப்பது உங்களுக்குத் தெரியுமோ தெரியாது.

உலகத்திலேயே மிகவும் பாவப்பட்ட மருத்துவ மாணவர்கள் வாழும் தேசங்களைப் பட்டியலிட்டால் சந்தேகமே இல்லாமல் வெற்றிக் கேடயம் எங்களுக்குத் தான் கிடைத்துவிடும் போல இருக்கிறது..'சைட்டம் மட்டகரமான ஐட்டம்' என்று சர்வதேசமே பஞ்சாயத்து செய்துவிட்டது . 

ஆனால் இதற்கு விடிவு இன்னும் இல்லாத நிலையில் எம்மை வைத்துப் பலர் அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள்.அரச மருத்துவ மாபியா தன்னிஷ்டத்திற்கு ஏதோ செய்கிறது.எம்மைப் போராளிகளாக்கி வீதிகளில் இறக்க முயல்கின்றன ஆட்டோவிலும் டீமோ பட்டாவிலும் முழு உறுப்பினர்களையும் ஏற்றிச் செல்லக் கூடிய சில சிவப்பு கட்சிகள்.

எனது பிரச்னை இந்தக் கோமாளிகள் பற்றியதல்ல. சமூகம் கண்டு கொள்ளாத இன்னொரு பக்கம் பற்றியது.நான் இப்போது ஊரில் இருக்கிறேன்.பிறந்து வளர்ந்து ஏ.எல் வரை படித்த ஊர்..படிக்கும் காலங்களில் வகுப்பில் முதல் மாணவி நான் தான்.ஆனால் வாழ்க்கைப் பரீட்சையில் தோற்றுவிடுவேனோ என்ற அச்சம் சற்று முன்னர் ஏற்பட்டது.இன்று எனது வகுப்பில் கடைசி இடம் மாணவியும் திருமணம் செய்து செட்டிலாகிவிட்டாள்.நான் வீட்டுத் திரைச் சீலைக்குப் பின்னால் இருந்து பெருமுச்சுடன் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.சீதனக் கொடுமைகள் தான் பெண்களை முதிர் கன்னிகளாக்கும் என்று இது நாள் வரை நினைத்து இருந்தேன்.ஆனால் உங்களது ஆட்சியில் மருத்துவபீடங்களும் பெண்களை முதிர்கன்னிகளாக்கும் என்பதைத் தெரிந்து கொண்டேன்..

எனது சக மருத்துவ பீட மாணவிகளில் பலர் காதலும் ப்ரேக்கப்புமாய் ஒரு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.அவர்கள் எல்லாம் என்னைப் போன்ற பஞ்சப் பிராணிகள் அல்ல.ரொம்ப வசதியானவர்கள்.எனக்குப் பெரிசாய் யாரும் செட்டாகவில்லை.போதாக்குறைக்கு ஆசாரமான குடும்பம்.இந்த சமூகம் எதிர்பார்க்கும் அழகு ,பெர்ஸனாலிட்டி எல்லாம் என்னிடம் கம்மி..டாக்டர் கோட்டை மாற்றிக் கொண்டு நர்ஸ்கள் புடை சூழ கெத்தாய் ராஜநடை நடந்து வரும் நாளில் ரிசப்ஷனிஸ்ட் பெண்கள் எல்லாம் எழுந்து ' குட் மோர்னிங் மேடம் ' என்று பம்மும் போது எவனாவது கோடீஸ்வர ஹார்ட் பேஷண்டின் மகன் என் பின்னால் ஜொல்லுவிட்டபடி வரக்கூடும்.இது எல்லாம் நடக்க நான் டாக்டராக வேண்டும்.நான் டாக்டராக கெம்பஸ் தொடங்க வேண்டும்.

"இவள் ஏன் இப்படி எல்லாம் அதிரடியாக பேசுகிறாள்" என்று நீங்கள் அதிசயிக்கக் கூடாது..’நான் வாயாடி’ எல்லாம் கிடையாது.நீங்கள் இன்றைய தேதியில் ஃபேஸ்புக் வந்து பார்க்க வேண்டும். இலக்கியம் படித்த பெண்கள் எப்படி எல்லாம் எழுதுகிறார்கள் தெரியுமா ? நீங்கள் அரசியலுக்கு வராவிட்டால் பொலன்னறுவையில் வசிக்கும் அறுபத்தாறு வயதான ஓய்வு பெற்ற ஒரு கிராம சேவகர்.உங்களுக்கு எனது வயதில் ஒரு மகள் இருந்தால் மேலதிக பொருளாதார சுமையாய் அவள் இருந்து இருப்பாள்.. அவள் உணர்வுகள் உங்களுக்குப் புரிந்து இருக்கும்.நீங்கள் கை வைத்த பனியன் அணிந்து சாய்வு நாற்காலியில் அமர்ந்தவாறு வெற்றிலை மென்றபடி கவலைப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள்..

'மஹாபொல' என்ற பெயரில் கிடைத்துவரும் எச்ச சொச்ச உதவித் தொகையையும் நிறுத்தி உங்களது அரசு புண்ணியம் தேடிக் கொண்டுவிட்டதால் போன் பில்லைக் கூட கட்டமுடியாத நிலை.அப்பாவை நான் சுமக்க வேண்டிய வயதில் அவர் என்னை இன்னும் சுமந்து கொண்டு இருக்கிறார்.49 ரூபா டேட்டா கார்ட் வாங்க கை நீட்டும் ஒவ்வொரு கணமும் ‘தன் மானம்’ பத்தடி ஆழத்திற்குக் கீழே ஓடிப் போய் பதுங்கிக் கொள்கிறது.

பொழுதுபோக்க வழி ஏதும் இன்றி ஒரு பூவின் படத்தை ஃபேஸ்புக் ப்ரொபைல் பிக்சராய் போட்டு பெயரையும் மாற்றிக் கொண்டு 24 மணி நேரமும் ஆன்லைன் இருக்கிறேன்.பொய், ஏமாற்றம் , துரோகம் போன்ற தலைப்புகளில் கவிதை எழுதுகிறேன்.வேறு என்ன செய்வது சொல்லுங்கள்..நீங்கள் ஏன் பெரும் தவத்தில் இருக்கும் முனிவர் போல எப்போதும் எதிலும் கருத்து சொல்லாமல் இருக்கிறீர்கள்.நீங்கள் அமைச்சுப் பதவியைத் துறந்து பொது வேட்பாளரான நாளில் எனக்கு காஸ்ட்ரோ,சேகுவாரா போல தோன்றினீர்கள்..ஆனால் இப்போது ஜோக்கர் படத்தில் வரும் ப்ரெசிடண்ட் போல தோன்றுகிறது.ஏன் எல்லாமே தலை கீழாய் மாறிப் போய்விட்டது என்று பாருங்கள்.எம்மீது திணிக்கப்பட்டு இருக்கும் இந்த சமூக அவலத்திற்கு எந்த முகூர்த்தத்தில் தீர்வு சொல்லப் போகிறீர்கள் ப்ரெசிடண்ட் அவர்களே..

இப்படிக்கு
உங்களுக்கு வாக்குப் போட்ட ஒருத்தி

Post a Comment

0 Comments