மேல் மாகாணத்திற்குட்பட்ட வீதிகளில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களில், பயணிகளுக்கு தொல்லை தரும் விதத்திலான நிகழ்வுகள் இடம்பெற்றால், இது தொடர்பில் உடனடியாக பயணிகள் முறைப்பாடு செய்ய முடியும் என்று மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.
தனியார் பஸ்கள் தொடர்பில் பயணிகளிடமிருந்து அடிக்கடி முறைப்பாடுகள் கிடைத்தவண்ணமிருப்பதால், இது விடயத்தில் கூடிய கவனம் எடுத்து, பயணிகளுக்கு மிகச் சிறந்த போக்குவரத்துச் சேவைகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் துசித்த குலரத்ன தெரிவித்துள்ளார்.
சில தனியார் பஸ் நடத்துனர்கள், பயணிகளுக்கு டிக்கட் வழங்குவதில்லை என்றும், டிக்கட் வழங்கினாலும் சில நடத்துனர்கள் மீதி சில்லறைக் காசுகளை சரியாக வழங்குவதில்லை என்றும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனியார் பஸ் நடத்துனர்கள் தொடர்பிலோ அல்லது தனியார் பஸ்களில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டாலோ, இது குறித்த முறைப்பாடுகளை உடனடியாக அதிகார சபையின் 011 55 59 595 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு தெரிவிக்க முடியும் என்றும் அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் பஸ்களில் சகல பயணிகளுக்கும் கட்டாயம் டிக்கட் மற்றும் மிகுதிப் பணம் வழங்கப்படவேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் தண்டனை வழங்கப்படுவதற்கான அதிகாரம், அதிகார சபைக்கு இருப்பதாகவும் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 Comments