Subscribe Us

header ads

நீலதிமிங்கல கேம்: மீட்கப்பட்ட புதுவை பெண், ரஷியாவில் இருந்து பேசிய மர்ம மனிதர்கள்



புதுவை உப்பளத்தை சேர்ந்தவர் பிரியா (வயது 21). புதுவையில் உள்ள மத்திய அரசு வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

இவர் நீலதிமிங்கலம் விளையாட்டில் சேர்ந்து விளையாடி வந்தார். அதில் வந்த கட்டளையை ஏற்று நேற்று அதிகாலை அவர் புதுவை கடலில் இறங்கி செல்பி படம் எடுப்பதற்காக வந்திருந்தார். அதற்கு முன்பு அவர் தனது தோழியிடம் இதுபற்றி கூறினார்.

எனவே அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஒயதிஞ்சாலை போலீசார் கடற்கரைக்கு சென்று அவரை மீட்டனர். இதைத் தொடர்ந்து  அவரிடம் விசாரணை நடைபெற்றது.

சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா, சூப்பிரண்டு வெங்கடசாமி மற்றும் போலீசார் அவருடைய வீட்டுக்கே நேரடியாக சென்று விசாரித்தபோது பல்வேறு தகவல்கள் கிடைத்தன. 

அவருடைய செல்போனில் ரத்த காயத்துடன் இருப்பது போன்ற ஒரு படத்தை முகப்பு படமாக வைத்திருந்தார். இது நீலதிமிங்கலம் விளையாட்டுக்காக கையை கிழித்துக்கொண்டு அதில் ரத்தம் வரவைத்து இவ்வாறு செய்திருந்தது தெரியவந்தது.

இந்த விளையாட்டில் ஈடுபடுபவர்கள் உடல் முழுவதும் காயங்களை ஏற்படுத்திக் கொள்வது வழக்கம். எனவே டாக்டர்களை வரவழைத்து பெண் போலீசார் முன்னிலையில் அவரது உடலில் காயங்கள் இருக்கிறதா? என்று பரிசோதித்தனர்.

நீலதிமிங்கலம் விளையாட்டில் சேர்ந்ததும் எப்-45 என்று உடலில் 10 இடத்தில் எழுதவேண்டும் என்பது விதிமுறை. இதேபோல பிரியா தனது உடலில் 10 இடங்களில் குண்டூசி கொண்டு குத்தி எப்-45 என்று எழுதி இருந்தார். மேலும் ஒரு பேப்பரில் நான் எனது உடலில் 10 இடங்களில் காயங்களை ஏற்படுத்தி இருக்கிறேன் என்று எழுதி வைத்திருந்தார். இன்னொரு காகிதத்தில் நீலதிமிங்கலத்தின் படம் ஒன்றை வரைந்து வைத்திருந்தார்.

இந்த விளையாட்டில் மொத்தம் 50 கட்டளைகள் பிறப்பிக்கப்படும். அதில் 4-வது கட்டத்தை தாண்டி இருந்தார். 5-வது கட்டத்துக்காக அதிகாலையில் கடலில் இறங்கி செல்பி எடுக்க வந்த போது தான் சிக்கிக் கொண்டார்.

பிரியா தனது செல்போன் மற்றும் லேப்டாப் மூலம் இந்த விளையாட்டை விளையாடி இருக்கிறார். நீலதிமிங்கலம் விளையாட்டு பற்றி கேள்விப்பட்ட அவர் அதைப்பற்றி அறிந்து கொள்வதற்காக இணையதளத்தில் தேடியபோது தான் அதில் ஆர்வம் ஏற்பட்டு அதற்குள் நுழைந்ததாக அவர் தெரிவித்தார்.

கடுமையான முயற்சிக்கு பிறகு தான் அவருக்கு அனுமதி கிடைத்துள்ளது. கடந்த 21-ந்தேதி தான் அவருக்கு முதல் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. தினமும் இரவு 1 மணிக்கு விளையாட்டை தொடங்கி உள்ளார். வீட்டில் தனி அறையில் கதவை அடைத்து உள்ளே உட்கார்ந்து விளையாடி இருக்கிறார்.

இந்த விளையாட்டை ஆரம்பத்ததில் இருந்தே மனநிலை பாதிக்கப்பட்டவர் போல மாறி இருக்கிறார். அவருடைய செல்போனை போலீசார் ஆய்வு செய்தபோது, நீலதிமிங்கலம் விளையாட்டு தொடர்பாக அவர் தொடர்பு கொண்ட பல்வேறு தகவல்கள் கிடைத்தன. 

பெரும்பாலும் லேப்டாப்பை பயன்படுத்தி தான் விளையாடி உள்ளார். நேற்று வீட்டில் அவரது லேப்டாப் இல்லை. பின்னர் போலீசார் தீவிரமாக விசாரித்த போது அவரது தோழி வீட்டில் லேப்டாப் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த லேப்டாப்பை கைப்பற்றினர். 

அதை ஆய்வு செய்தபோது அவர் ஸ்கைப் மூலம் ரஷியாவில் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டு பேசி இருப்பது தெரியவந்தது. ஸ்கைப் வீடியோவில் தோன்றி ரஷியாவை சேர்ந்த மர்ம நபர்கள் இவருக்கு கட்டளையிட்டதுடன் அவரது மூளையை குழப்பும் வகையில் பல்வேறு தகவல்களையும் பரிமாறி உள்ளனர்.


அந்த நபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக மத்திய உள்துறைக்கு புதுவை போலீசார் உரிய முறையில் தகவல்களை அனுப்ப உள்ளனர். 

இதற்கிடையே பிரியாவை நல்வழிப்படுத்தும் வகையில் ஜிப்மர் மனோதத்துவ டாக்டர் குமரனை அழைத்து வந்து அவருக்கு மனோதத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மாலை 7 முதல் 9 மணி வரை அவர் பிரியாவிடம் பேசி சிகிச்சை அளித்தார். மேலும் அவர் நீலதிமிங்கலம் விளையாட்டு எப்படியெல்லாம் விளையாடினார் என்பது பற்றியெல்லாம் கேட்டறிந்தார். இன்றும் அவருக்கு மனோதத்துவ சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

நீலதிமிங்கலம் விளையாட்டில் பங்கேற்று கையில் அறுத்துக் கொண்ட காயங்கள் உள்ளன. இதை மறைப்பதற்காக இந்த விளையாட்டில் சேர்ந்ததற்கு பிறகு முழுக்கை டீசர்ட் அணிந்துள்ளார். பிரியாவுடன் புதுவையை சேர்ந்த வேறு சிலரும் இந்த விளையாட்டில் ஈடுபட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே பிரியாவின் அனைத்து தோழிகளிடமும் விசாரணை நடக்கிறது.

நீலதிமிங்கலம் விளையாட்டால் பாதிக்கபட்ட பெண் வீட்டிற்கு இன்று சென்ற முதல்-அமைச்சர் நாராயணசாமி இயல்பு நிலைக்கு மாற அறிவுரை வழங்கினார்.

Post a Comment

0 Comments