Subscribe Us

header ads

‘உனக்காகத்தான் எல்லாம்’ என்று உருகியவரின் மறுபக்கம், ‘எல்லாம் நடிப்பு - போலிக்காதலில் இருந்து தப்பிப்பது எப்படி?

காதலின் இனிமையில் இடியாய் விழுந்து அதிர வைக்கக்கூடியது காதலரின் பின்னணி. ‘உனக்காகத்தான் எல்லாம்’ என்று உருகியவரின் மறுபக்கம், ‘எல்லாம் நடிப்பு- மோசடி’ என்று தெரியவந்தால், அதுபோல் அதிர்ச்சி அளிக்கக்கூடியது எதுவுமில்லை. ‘இனியும் அவருடன் காதலைத் தொடர்வது ஆபத்து’ என்று தெரிய வரும்போது, ‘விலகினாலும் விடாது கறுப்பு’ என்பதுபோல தொல்லைகள் தரக்கூடும் அந்த மோசடி காதலர்கள். அவர்களின் வலையில் சிக்காமல், ஓசையில்லாமல் ஒதுங்குவது எப்படி...?


காதலை ஏற்றுக் கொள்வதைவிட சிக்கலானது காதலை கைவிடுவது. எல்லாவற்றையும் மறந்துவிட்டு புதுவாழ்வுக்குத் திரும்புவது அவ்வளவு சுலபமல்ல. கசப்பான அனுபவங்கள் வெறுப்பைத் தந்தாலும், நினைவுகள் திரும்பத் திரும்ப வாட்டும். அதையும் தாண்டி, காதலை கைவிடும்போது அந்த காதலராலும் தொல்லைவரலாம். துயரங்களைத் தாண்டி, தொல்லைகள் இல்லாமல் காதலை கைவிட நிதானம் தேவை. காதலனிடம் சாதுரியமாக செயல்பட்டு விலகுவதுடன், மனதை சமாதானப்படுத்தி காதலில் இருந்து வெளியேற வேண்டும்.



முதலில் காதலரிடம் எப்படிப்பட்ட குணங்கள் தெரிந்தால் விலகும் முடிவை எடுக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.



காதலர் சுயநலம் கொண்டவராகவும், சோம்பேறியாகவும் இருந்தால் யோசிக்க வேண்டும். உங்கள் அன்பை துச்சமாக மதித்து அலட்சியம் காட்டினால் கண்டனம் தெரிவிக்க வேண்டும். முதல் பார்வையில் வந்த ஈர்ப்புக்கும், பழகிய அனுபவத்தில் கிடைத்த புரிதலுக்கும் வேறுபாடு இருக்கும்பட்சத்தில், உங்களுக்குள் அடிக்கடி கருத்துமோதல் வந்தால், பேச்சுவார்த்தையில் சுமுக முடிவுக்கு வர முடிகிறதா? என்று பாருங்கள். ஆரம்ப கால நடை, உடை, பாவனைகளுக்கும், காதலை ஏற்றுக் கொண்ட பிறகு காதலரின் நடவடிக்கைகளுக்கும் நிறைய வித்தியாசம் தெரிந்தால், அவற்றை மாற்றிக் கொள்ள வலியுறுத்துங்கள்.



ஒழுக்க அளவிலான குறைபாடுகளை காணும்போது அவரிடம் காதலை தொடர முடியாது. உங்களைப் போலவே மற்ற பெண்களிடமும் காதல் வலை வீசும் ஆண்களின் தொடர்பை உடனே துண்டிப்பது நல்லது. அதுபோலவே நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டு, உடல் ரீதியான தொடர்புக்கு வலியுறுத்தும் காதலரிடமும் எச்சரிக்கை தேவை. ‘என் மேல் நம்பிக்கையில்லையா?’ என பேச்சில் தூண்டில்போடும் பலர், உறவுக்குப் பின்னர் காதலை உதறித் தள்ளிவிட்டு போன அனுபவங்கள் நிறைய உள்ளன. இதுபோல் உங்களை தவறாகப் பயன் படுத்தும் எண்ணத்துடன் பழகும் காதலரிடம் இருந்து ஒதுங்கத்தான் வேண்டும்.



காதலரைவிட்டு பிரிவது என்ற முடிவுக்கு வந்த பின்னர், கவனமாக செயல்பட வேண்டும். என்ன பேச வேண்டும், என்ன பேசக்கூடாது, எப்படி பேச வேண்டும், எதைச் செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். ‘என்னிடம் பேசாதே’ என்று ஒரே ஒரு ‘வாட்ஸ்ஆப் மெஸேஜில்’ காதலை முறித்துக் கொள்ள முடியாது.



உங்களின் ஒற்றை வார்த்தையை புரிந்து கொண்டு ஒதுங்கும் ஒழுக்கமான நபர் என்றால் நீங்கள் அவரை பேச்சு மூலமாகவே திருத்தியிருக்க முடியும். ஆனால் மோசமான பின்னணி கொண்டே பேர்வழிகள், பிரிவை உணரும்போது வேறுவிதமாக செயல்பட நினைப்பார்கள். பழைய நினைவுகளை தூண்டி வெறுப்பேற்றவும், சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் ரகசியங்களை வெளியிடுவதாக மிரட்டவும் நினைப்பார்கள். இன்னும் மோசமாக மிருக வெறியுடன், உங்களை ஒழித்துக் கட்டும் கோபாவேசமும் தூண்டப்படலாம். எனவே சாதுரியமாக, பிரச்சினையில்லாமல் பிரிவை சந்திக்க வேண்டும்.



அதற்கு முதல் வேலையாக, நீங்கள் எடுத்திருக்கும் இந்த பிரிவினை முடிவு சரியானதா? என்று ஒருமுறை யோசித்துக் கொள்ளுங்கள். அவர் உங்களுக்கு பொருத்தமற்றவர், எதிர்கால வாழ்க்கைக்கு ஒத்துவராதவர், எவ்வளவோ முயற்சித்தும் தவறான பாதையில் இருந்து மீட்டெடுக்க முடியாதவர் என்றால் நிச்சயம் பிரிவதென்ற முடிவுக்கு வாருங்கள். மனதில் தன்னம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டு, பிரிவு முடிவை அவருக்கு தெரியப்படுத்துங்கள். அவரது பதில்களையும், உணர்வுகளையும் உற்று நோக்குங்கள். அதிக உணர்ச்சிவசப்படுபவராக இருக்கிறாரா? கோபமும், பழிவாங்கும் உணர்வுடன் செயல்படுகிறாரா? என்பதை கவனியுங்கள்.



“தவறான நடத்தைகளை கைவிடாதபோது உங்களை துணைவராக ஏற்றுக்கொள்ள என் மனது இடம் கொடுக்கவில்லை” என்பதை தெளிவுபடுத்துங்கள். ‘குடும்பச் சூழலும், தற்போதைய சூழலும் உங்களுடன் சேர முடியாத நிலையை உருவாக்கி உள்ளது’ என்பதை விளக்குங்கள்.



அத்தனைக்கும் படியாமல் முரண்டு பிடிக்கும் நபரை இன்னும் ஒருபடி நாசூக்காக கையாள வேண்டும். மரியாதைக் குறைவாகவும், அவரது ‘ஈகோ’வை தூண்டிவிடும் வகையிலும் தடாலடியாக பேசக் கூடாது. அப்படிப்பட்டவரிடம் ‘நீங்கள் என்னை ஏமாற்றிவிட்டீர்கள்’ என்று சொல்வதற்குப் பதிலாக, ‘நீங்கள் அப்படி நடந்து கொண்டதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை’ என்று கூறுங்கள். ‘உங்களை என் வாழ்வில் மிக முக்கியமானவராக நினைத்தேன், ஆனால் நீங்கள் என்னை அதுபோல் மதிப்பதாக தெரியவில்லை’ என்று முறை யிடுங்கள். ‘வாழ்க்கை முழுவதும் தொடரும் பந்தம் என்று நினைத்த உங்கள் உறவு, உங்கள் உள்ளெண்ணம் அப்படியில்லாததால் சிதையப்போகிறது’ என தெளிவுபடுத்துங்கள்.



அவரது தொடர்புகளை ஒரேயடியாக அல்லாமல், மெல்ல மெல்ல குறையுங்கள். அவரது போன் அழைப்புகளை முற்றிலும் புறக்கணித்து விடாமல், கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க வேண்டும். நேரடி சந்திப்புகளையும் மெல்ல மெல்ல தவிர்க்கவேண்டும். பொது இடங்களில், பாதுகாப்பான இடங்களில் சில நிமிடங்களுக்கு சந்தித்துவிட்டு, நெருக்கமான விஷயங்களை விவாதிப்பதை தவிர்த்து விட்டு விலக வேண்டும். பின்னர் படிப்படியாக அந்த சந்திப்புகளையும் வெவ்வேறு காரணங்களைக்கூறி புறக்கணியுங்கள்.



முடியுமானால், செல்போன் எண், சமூகவலைத்தள கணக்குகளை மாற்றிக் கொள்ளலாம். அவரது எண், முகவரிகளில் இருந்து தகவல்கள் வராத வகையில் ‘பிளாக்’ செய்து வைக்கலாம். காதலரின் வற்புறுத்தலுக்கு இணங்கி எங்கும் தனியே சந்திக்க செல்ல வேண்டாம். உங்கள் பிரிவினை - கருத்து மோதல் பற்றிய விவரங்களை, பெற்றோர் அல்லது நெருங்கிய தோழிகளிடம், ஆண் நண்பர்களிடம் தெரிவித்து தகுந்த பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். மோசமானவரை கைவிட்டு புதிய வாழ்வில் தன்னம்பிக்கையோடு காலடி வையுங்கள். 

Post a Comment

0 Comments