முஸ்லிம்களின் வாக்குகளை அபகரிப்பதற்காகவே தாஜுதீன் விவகாரத்தினை பயன்படுத்துவதற்கு முயற்சிக்கின்றார்கள் எனக் குற்றம் சாட்டியுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிபின் கூட்டு எதிர்க்கட்சி ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ முஸ்லிம்களை தம்மிடத்திலிருந்து என்றுமே அந்நியப்படுத்த முடியாது எனவும் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
பிரபல றகர் வீரரான வசீம் தாஜுதீனின் மரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, வசீம் தாஜுதீன் எனது நண்பர். 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல்களின் போது முஸ்லிம்களின் வாக்குகளை பெறுவதற்காக அவருடைய மரணத்தினை பயன்படுத்தியிருந்தார்கள்.
பின்னர் அந்த விடயத்தினை கிடப்பில் போட்டிருந்தார்கள். தற்போது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துமாறு நாம் அழுத்தமளித்து வருகின்றோம். அரசாங்கம் வாக்குறுதிகளை வழங்கி அவற்றை நிறைவேற்றாததன் காரணத்தால் ஆட்சியாளர்கள் மீது மக்கள் வெறுப்படைந்துள்ளார்கள்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷவின் தலைமையில் ஆட்சி அமைய வேண்டுமென்றும் எதிர்பார்க்கின்றார்கள். அவ்வாறான நிலையில் எமக்கு எதிராக ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்களை சுமத்தி சிறைச்சாலைகளுக்குள் வைத்து அரசியல் பழிவாங்கல் செய்தார்கள்.
இருப்பினும் எந்தவிதமான சான்றுகளும் இல்லாத நிலையில் வெறுமனே வழக்குகளை தொடர்ந்து விசாரணைகள் என்ற பெயரில் அலைக்கழித்து வருகின்றார்கள்.
இவை அனைத்துமே அரசியல் நாடகங்களேயாகும். தற்போது ஆட்சியாளர்கள் விரும்பியோ விரும்பாமலோ உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலொன்றை நடத்தியாகவேண்டும் என்ற இக்கட்டான நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
அவ்வாறான நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இதனால் செய்வதறியாது தடுமாறிக்கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் மீண்டும் பொய்களை உரைத்து பிரசாரங்கள் செய்ய ஆரம்பித்திருக்கின்றார்கள்.
குறிப்பாக வசீம் தாஜுதீனின் விடயத்தினை மீண்டும் கையிலெடுத்து முஸ்லிம்களை ராஜபக்ஷக்களிடத்திலிருந்து அந்நியப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றார்கள்.
இந்த யதார்த்தத்தினை முஸ்லிம் சகோதரர்கள் புரிந்துள்ளார்கள். வசீம் தாஜுதீனின் மரணம் நடைபெற்றவுடன் எனது சகோதரனை அதனுடன் தொடர்புபடுத்தினார்கள்.
பின்னர் என்னை தொடர்புபடுத்தினார்கள். இவை அனைத்துமே புனைகதைகள் என்பது புலப்பட்டவுடன் தற்போது எமது தாயாரை தொடர்பு படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள்.
ஆட்சியாளர்களுக்கு முஸ்லிம்களின் வாக்குகள் தேவை என்பதன் காரணத்தாலேயே இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்கின்றார்கள். இந்த சூட்சுமத்தினை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கையை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன, மத, மொழி வேறுபாடின்றியே சேவை யாற்றினார்.
அதன் காரணத்தால் தான் மீண்டும் அவருடைய தலைமையிலான ஆட்சியை மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
ஆகவே இலங்கையில் உள்ள தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட எந்தவொரு இன மக்களையும் மஹிந்த ராஜபக் ஷவிடத்திலிருந்து அந்நியப்படுத்த முடியாது. அதற்கு இடமளிக்க போவதும் இல்லை என்றார்.
0 Comments