ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர்
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தாக்கவுள்ளதாக பரவும் செய்திகளை அவதானிக்கும்
போது பாரிய சர்வதேச சதிகளை இலங்கை முஸ்லிம்கள் எதிர் கொண்டுள்ளதை அறிந்துகொள்ள
முடிகின்றதென பானதுறை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் தெரிவித்தார்.
அவரது ஊடக அறிக்கையில்
மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது...
பிரபல சிங்கள நாளிதலானது,
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பானது இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து விமானமொன்றை கடத்தி இலங்கையில்
உள்ள அமெரிக்க தூதரகத்தை தாக்கவுள்ளதாக செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த
செய்தியானது அமெரிக்க புலானாய்வு பிரிவினர் இலங்கை புலனாய்வு பிரிவினருக்கு இது
தொடர்பில் தெரிவித்துள்ள நிலையில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணை
செய்வதற்கு அமெரிக்க புலனாய்வு பிரிவினர் இலங்கை வரவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை நாட்டில்
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் செல்வாக்கு உள்ளதான செய்திகள் இனவாதிகளால் பரப்பப்பட்டு
வருகின்றன. இலங்கை முஸ்லிம்களை பொறுத்தமட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் செயற்பாட்டை
முஸ்லிம்களின் செயற்பாடுகளாக கூட அங்கீகரிக்கவில்லை. இவ்வாறான நிலையில் இலங்கை
முஸ்லிம்கள் மீது இவ்வாறான குற்றச் சாட்டை முன்வைப்பது ஏதோ ஒரு பாரிய சதி நிகழப்
போவதை எடுத்துக்காட்டுகிறது.
அமெரிக்க புலனாய்வு
பிரிவு மிகவும் பலமிக்கது. அவர்கள் ஒரு விடயத்தை கூறுவதானால் அதில் உண்மை இருக்க
வேண்டும் / பாரிய சதி இருக்க வேண்டும். இதில் உண்மை இல்லை என்பது தெளிவானது.
அப்படியானால் இச் செய்தியில் பாரிய சதி உள்ளமை புலனாகின்றது. விமான நிலையத்தில்
இருந்து விமானத்தை கடத்தி தாக்குதல் நடத்துவதொன்றும் அவ்வளவு இலகுவான விடயமல்ல.
இதற்கு பலமிக்க கட்டமைப்பு இருக்க வேண்டும். இலங்கையில் இந்த
கட்டமைப்பின் தலைவர் யார்? தலைமையகம் எங்குள்ளது என்பதையெல்லாம் குறித்த செய்திகளை
வெளியிடுவோர் வெளிப்படுத்துவார்களா?
இருப்பினும் இது தொடர்பில்
தமக்கு எந்தவிதமான உத்தியோகபூர்வ செய்திகளும் வரவில்லையென பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவர் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஒரு பாரிய சதி நிகழப் போகின்றதென தெரிந்தும் அது ஏன் பொலிசாருக்கு
அறிவிக்கப்படவில்லை என்ற வினாவானது இதில் உள்ள சதிகளையும் பொய்யையும் தெளிவாக்குகிறது. இச் செய்தி உண்மையாக இருந்தால்
இது தொடர்பில் விசாரணைகளுக்காக பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும்.
இலங்கையில் உள்ள
முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதிகள் சில காலமாக இக் குற்றச்சாட்டை முன் வைத்து
வருகின்றனர். அவ்வாறான நிலையில் இக் குற்றச் சாட்டானது அதற்கு வலுச் சேர்ப்பதாக
அமையும். இதற்கு சர்வதேமும் துணை போயுள்ளமையானது சர்வதேச அனுசரணையுடனான பாரிய
சதிகள் நிகழப் போவதை எடுத்து காட்டுகிறது. இலங்கையில் சர்வதேச சக்திகளின் ஆதிக்கம்
என்றுமில்லாதாவாறு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான சர்வதேச
சதிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் இடம் வழங்கப்படாமை
தான் அவரது ஆட்சி கவிழ்ப்புக்கு சர்வதேசம் பின்னால் நின்று உழைத்தமைக்கான
காரணமாகவும் குறிப்பிடலாம்.
0 Comments