ஐக்கிய தேசிய கட்சியை 2004இல் கவிழ்த்து இந்த நாட்டுக்குக் கிடைக்கவிருந்த 45ஆயிரம் கோடி ரூபா சர்வேதேச உதவியைத் தடுத்ததுபோல் இப்போது எட்டு வீதத்தை அடையவுள்ள பொருளாதார வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே நாட்டில் இனவாதம் தூண்டிவிடப்பட்டுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேரசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று முன் தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியவை வருமாறு;
இப்போது நாட்டில் எல்லாப் பகுதிகளிலும் பரவலாக இனவாத செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றன.திட்டமிட்ட அடிப்படையில் இவை முன்னெடுக்கப்படுகின்றன.இந்த இனவாத செயற்பாடுகளுக்கும் அரசுக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை.இதன் ஊடாக இலாபம் அடைய வேண்டிய தேவை அரசுக்கு இல்லை.
நாங்கள் நாட்டில் இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகின்றோம்.இனவாதத்தை நாம் விதைக்கவில்லை.இந்த இனவாதத்தில் எவரும் சிக்க வேண்டாம் என்று நாம் கேட்டுக்கொள்கிறோம்.இனவாதத்தைத் தூண்டுபவர்களை நிராகரியுங்கள்.அவர்களைத் தூரப்படுத்துங்கள்.
நாம் இலங்கையர்கள் என்ற உணர்வு எமக்கு வார வேண்டும்.இனவாதம் தலைதூக்கினால் அந்த உணர்வு ஏற்படாது.இனவாதத்தை முற்றாகத் துடைத்தெறிவதன்மூலம்தான் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும்.30வருட யுத்தத்துக்கு இரையான எமது நாட்டை மீண்டும் இனவாதத்துக்கு இரையாக்க முடியாது.நாம் பொருளாதாரத்தில் தொடர்ந்தும் பின்தங்க விரும்பவில்லை.
தற்போதைய இனவாத செயற்பாடுகளுக்கு ஒரு நோக்கம் உண்டு.ஐக்கிய தேசிய கட்சியை 2004இல் கவிழ்த்து இந்த நாட்டுக்குக் கிடைக்கவிருந்த 45ஆயிரம் கோடி ரூபா உதவியைத் தடுத்ததுபோல் இப்போது எட்டு வீதத்தை அடையவுள்ள பொருளாதார வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே இனவாதம் தூண்டிவிடப்பட்டுள்ளது.
இந்த உண்மையை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.இனவாதத்துக்கு எதிராக எழுந்து நிற்க வேண்டும்.இந்த இனவாத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கைகளை அரசு அவசரமாக முன்னெடுக்கும்.-என்றார்.
0 Comments