அமைச்சர்
ஹக்கீம் பெருநாள் வாழ்த்து செய்தியிலும் தற்போதைய அரசை புகழ்ந்தும் முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை இகழ்ந்தும் அரசியல் செய்ய வேண்டிய வங்குரோத்து நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளதாக முஸ்லிம்
முற்போக்கு முன்னணியின் தேசிய அமைப்பாளர் சத்தார் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள
அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது ஊடக அறிக்கையில்
மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..
தற்போதைய அரசானது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மீது பலவாறான குற்றச் சாட்டுக்களை முன் வைத்தே
வந்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த காலத்தையும் தற்போதைய காலத்தையும் அவர்கள்
குற்றம் சுமத்திய விடயங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது குற்றச் சாட்டுக்கள்
அதிகரித்துள்ளதே தவிர ஒன்றேனும் குறையவில்லை.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸவின் காலத்தை விடவும் முஸ்லிம் சமூகம் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளன.
இதுவரை எங்குமே நீதி நிலைநாட்டப்பட்டதாகவும் அறிய முடியவில்லை. நீதி அமைச்சர் மற்றும்
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உட்பட பலரும் முஸ்லிம்கள் மீதான செயற்பாடுகளை மிகச்
சிறிய சம்பவங்களாக கூறியுள்ளனர்.
நான்கு பொலிஸ் குழுக்கள்
அமைத்து தேடிய ஞானசார தேரர் மிக இலகுவாக நீதி மன்றம் சென்று பிணை எடுத்து
சென்றுள்ளார். இந்த பிணை எடுப்பதற்கு நீதித் தாயின் கண்கள் எவ்வாறெல்லாம் கட்டப்பட
வேண்டுமோ அத்தனை வழிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இப்படியான அரசானது நீதியை நிலை
நாட்டும் என எதிர்பார்த்திருப்பதாக அமைச்சர் ஹக்கீம் கூறியிருப்பதானது எந்த
வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத கூற்றாகும்.
அமைச்சர் ஹக்கீமுக்கு
இவ்வாட்சி நீதியை நிலை நாட்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தால் அந்த எதிர்பார்ப்பை
வழங்கிய ஒரு விடயத்தையாவது அமைச்சர் ஹக்கீம் முன் வைப்பாரா? எங்களால் இவ்வாட்சி நீதியை நிலை நாட்டாது என்பதற்கு பல ஆயிரம்
ஆதாரங்களை எடுத்துரைக்க முடியும்.
அமைச்சர் ஹக்கீம் முன்னாள்
ஜனாதிபதி மகிந்தவை இகழ்ந்தும் தற்போதைய அரசை புகழ்ந்திருப்பதானது, முஸ்லிம்
மக்களிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை தொடர்ந்தும் வில்லனாக காட்டி இவ்வரசை
பாதுகாக்க முனைவதை எடுத்து காட்டுகிறது. இதனை பார்க்கின்ற போது தற்போதைய அரசை
காப்பாற்ற அமைச்சர் ஹக்கீமுக்கு ஏதேனும் கொந்தராத்து வழங்கப்பட்டுள்ளதா என்ற
சந்தேகமே எழுகிறது.


0 Comments