Subscribe Us

header ads

பாடசாலையில் கொடுக்கும் மதிய உணவுக்காகவே எனது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புகின்றேன் – மருதமுனையில் கண்ணீர் சிந்தும் தாய்

‘பகலுணவு கொடுப்பதற்கு எம்மிடம் வசதியில்லாததால் பாடசாலையில் கொடுக்கும் மதிய உணவுக்காக எனது பிள்ளைகள் பாடசாலைக்கு செல்கின்றனர்” என மருதமுனையில் கடற்கரையோரம் வசிக்கும் ஹயறுனிஷா எனும் தாய் கூறிய அந்த வார்த்தையினால் எங்களது உள்ளம் உருகி போய் விட்டது.

மருதமுனை கல்வி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு அமையத்தின்(SESEF) சார்பில் மருதமுனை அல்மினன் பாடசாலைக்கு அன்மையில் நானும் அமைப்பின் ஆலோசகர் பொறியியலாளர் எஸ்.எம் .ஜுனைதீனும் சென்று அந்த பாடசாலையின் அதிபரை சந்தித்து கலந்துரையாடிய போது மேற்படி ஹயறுனிஷா குடும்பம் பற்றி தெரிய வந்தது.

பின்னர் அந்த குடும்பம் வசிக்கும் மருதமுனை கடற்கரையோரம் சென்று பிரதேச முக்கியஸ்தரும் ,நூலக அமைப்பு பொறுப்பாளருமான எழுத்தாளர் முகமத் இஸ்மாயில் முபாரக் அவர்களது உதவியுடன் அந்த குடும்பத்தின் நிலவரங்களை நேரில் பார்க்க கிடைத்ததுடன் அந்தக்குடும்பம் வசிக்கும் குடிசையையும் அவதானிக்க முடிந்தது.

வசிப்பதற்கு வீடின்றி அன்றாடம் ஒழுங்கான உணவின்றி தமது ஐந்து பிள்ளைகளும் தாயும் தகப்பனுமாக வறுமையின் நிழலில் இந்தக்குடும்பம் வசிப்பதை பார்த்து உள்ளம் உருகிப்போய் எங்களது கண்களில் இருந்து கண்ணீர் வந்து விட்டது.

யாசின் பாவா உதுமா லெப்பை(வயது 58) இவர் கல்முனைக்குடியைச் சேர்ந்தவர் இவரது மனைவி பிள்ளைகள் சுனாமி அனர்த்தத்தினால் உயிரிழந்ததையடுத்து ஏறாவூரைச் சேர்ந்த ஹயறுனிஷா (வயது36 ) எனும் பெண்ணை மனம் முடித்து இன்று ஐந்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.

கணவர் அன்றாடம் கூலிவேலை செய்பவர். அவர் கூலி வேலை செய்து கொண்டு வரும் பணத்திலேயே இவர்களின் நாளார்ந்த உணவு தேவை நிறைவேறினாலும் அது அவர்களின் முழுமையான உணவுத்தேவையை நிறைவு செய்ய வில்லை.

அதனால் மதிய உணவுக்கு மிகவும் கஸ்டப்படுகின்றனர். மதிய உணவு தேவையை நிறைவு செய்வதற்காக இந்த குடும்பத்திலுள்ள பிள்ளைகள் பாடசாலைக்கு விருப்பத்துடன் செல்கின்றனர். எனினும் இந்த பிள்ளைகளை படிப்பிக்க வேண்டும் என்ற எண்ணமும் அவாவும் தாய் ஹயறுன்னிஸாவுக்குண்டு.

பழுதடைந்த குடிசையில் வாழும் இவர்கள் வசிக்கும் குடிசை ஒரு பலமான காற்று வீசுமாக இருந்தால் விழுந்து விடும் நிலையையே காணக் கூடியதாக உள்ளது.இரவு வேளைகளில் ஒரு சிறு மழை பெய்தால் கூட நித்திரை செய்யும் பிள்ளைகளை என்ன செய்வார்களோ என்பது விடை தெரியாத வினாவாகும்.

இந்தக் குடிசைக்கு மின்சார வசதியில்லை. இவர்கள் ஒரு பந்தம் போன்ற வெளிச்சத்தையே பாவிக்கின்றனர்.

இவர்களிடம் ஒரு பிளேண்டியை வைத்து குடிப்பாதற்கு கூட இவர்களிடம் வசதியில்லாத நிலையும் காணப்படுகின்றது.

கடற்கரையை தமது மகிழ்ச்சியின் இடமாக மாற்றிக் கொண்ட இந்தக்குடும்பத்தின் பிள்ளைகள் கடற்கரையில் ஓடித்திரிந்து விளையாடி வறுமையிலும் தமது மகிழ்ச்சியை கழிக்கின்றனர்.

சித்தி சுஜானா(வயது10) சித்தி சியானா(வயது9) நிப்லி (வயது 7) சித்தி ஹஷ்னா (வயது 4) அய்மன்(வயது 1) ஆகிய ஐந்து பிள்ளைகளில் மூவர் பாடசாலைக்கு செல்கின்றனர்.

இந்த பிள்ளைகளை எப்படியாவது படிப்பிக்க வேண்டும் என்ற ஆசையுடன் தாய் அக்கறை எடுத்து வருகின்றார். இந்தப்பிள்ளைகளுக்கு ஒரு ஒழுங்கான உடுப்பு கிடையாது கிடைப்பதை அவ்விடத்தில் போடுகின்றனர்.

அடிப்படை வசதிகளின்றி இக் குடும்பம் வாழ்ந்து வருகின்றது. இந்தக் குடும்பத்தின் நிலை மிகவும் பரிதாபகரமானது.

இந்தக் குடும்பத்தின் நிலையை பார்த்தவுடன் இவர்களின் நிலைமையை எனது நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதுடன் அவர்களுக்கான வீட்டு வசதியை ஏற்படுத்திக் கொடுக்க முடியுமானவர்கள் உதவுவதற்காகவும் இந்த பதிவையிட்டேன்.

இந்த புனிதமான மாதத்தில் சதகாவுக்கும் சகாத்துக்கும் பல ஆயிரம் நன்மைகளை தரும் இந்த மாதத்தில் இந்தக் குடும்பத்திற்கும் உதவுங்கள். இந்தக் குடும்பத்தின் வீட்டுத் தேவையை நிறைவு செய்து கொடுக்க முன்வாருங்கள் என இந்த புனித மாதத்தில் அல்லாஹ்வின் பெயரால் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
(புகைப்படங்கள் :முகமத் இஸ்மாயில் முபாரக்)

இவ்வண்ணம்.
அன்புடன் எம்.ஐ.எம்.வலீத்
மருதமுனை
(நன்றி:- ஸ்ரீலங்கா முஸ்லிம் இணையம்)




Post a Comment

0 Comments