Subscribe Us

header ads

வௌியிலிருந்து வந்து கிழக்கில் இனப் பிரச்சினைகளை உருவாக்குவோருக்கு சிறந்த பாடம் கற்பிப்போம் –ஜனாதிபதி முன்னிலையில் கிழக்கு முதலமைச்சர் தெரிவிப்பு


கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் முஸ்லிங்கள் மற்றும் சிங்களவர்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் நிலையில் அதனை சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  எனக் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஏனைய பெரும்பான்மை கட்சிகளும் இணைந்து எவ்வித பிரச்சினைகளும் இன்றி ஆட்சி நடத்தி வருவதாகவும் கிழக்கு முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்,

 இந்நிலையில் வௌிப் பகுதிகளில் இருந்து வரும் சிலர்  கிழக்கில் குழப்பங்களையும் இனமுறுகல்களையும் உருவாக்குவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துவருவதாகவும் கிழக்கு முதலமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சுட்டிக்காட்டினார்.

இந்த நல்லாட்சியை சீர்குலைப்பதற்காக இனவாத சக்திகளை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் கடந்த ஆட்சியின் இனவாத ஆட்சியாளர்களுக்கு ஒரு போதும் இடமளிக்க முடியாது எனவும் நல்லாட்சியைக் கவிழ்க்க இனவாத செயற்பாடுகளை முன்னெடுப்போரின் கனவை ஒரு போதும் நனவாக்க இடமளிக்கப் போவதில்லையனெவும் கிழக்கு முதலமைச்சர் கூறினார்

சம்பூரில் அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதியுடன் கலந்து கொண்ட போதே கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் கூறினார்,
இதன் போது பட்டதாரிகளின் பிரச்சினைகளை கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அஹமட் சிங்கள மொழியில் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தார்,

கிழக்கு மாகாண பட்டதாரிகளை ஆசிரியர் வெற்றிடங்களுக்கு உள்வாங்குவதற்கான  அனுமதியைப் பெற்றுத் தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தமது நன்றிகளை தெரிவித்துள்ளார்,

அத்துடன் கிழக்கு பட்டதாரிகளை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை தற்போது முன்னெடுத்து வருவதாகவும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இது தொடர்பான இறுதி அறிக்கை கிடைத்தவுடன் பட்டதாரிகளை உள்வாங்கும் முதற்கட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக கிழக்கு முதலமைச்சர் குறிப்பிட்டார்.


அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த கிழக்கு முதலமைச்சர்,

எமது மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி உரிய வகையில்  இதுவரை கிடைக்கப் பெறாமையினால் நாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளோம்.நாம் ஏற்கனவே திட்டமிட்டுள்ள சில அபிவிருத்திகளை முன்னெடுப்பதில் நாம் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளோம்,ஏற்கனவே வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ள எமது மாகாணத்தை முன்னேற்றுவதற்கான அபிவிருத்தி திட்டங்களை  முன்னெடுக்க நிதிப்பற்றாக்குறை பாரிய பிரச்சினையாக உள்ளது,எனவே கௌரவ ஜனாதிபதியிடம் ஏற்கனவே இது தொடர்பில் நாம் கோரிக்கை விடுத்ததுடன் அவர் அதனை வழங்குவதாக கூறியிருந்தார்,எனவே அவர் அதனை விரைவில் வழங்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

 இதேவேளை முன்னாள் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை ரத்து செய்து சம்பூர் மக்களுக்கு காணிகளை வழங்கியதுடன் மட்டுமல்லாமல் இன்று பல அபிவிருத்தித் திட்டங்களையும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள இந்த மக்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார்,

அத்துடன் சம்பூரில் வீடுகள் கிடைக்காத பலருக்கு வீடுகள் வழங்கப்பட வேண்டுமென நாம் கேட்டுக் கொள்கின்றேன்.

இதேவேளை கிழக்கு மாகாண மக்கள் வறட்சி,வௌ்ளம் என அனைத்து காலப்பகுதிகளிலும் பாதிக்கப்படுபவர்கள் என்பதால் அவர்களை ஜனாதிபதி தமது மனதில் வைத்து அவர்களுக்குரிய அபிவிருத்திகளுக்கு மென்மேலும் ஜனாதிபதி உதவி புரிய வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.
இன்றைய தினம் நெல்சிப் திட்டத்தினால் அமைக்கப்பட்ட சம்பூர் பண்பாட்டு மையம் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீரின் அழைப்பின் பேரில் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டன,

இதன் போது லங்கா பட்டண பாலம் திறந்து வைக்கப்பட்டதுடன் பூங்கா ஆகியனவும் திறந்து வைக்கப்பட்டன.



Post a Comment

0 Comments