(சிலாபம் திண்ணனூரான்)
“ஊக்கத்தைக் காட்டிலும் உதவி புரியக்கூடிய உயரிய சக்தி உலகில் வேறு எதுவுமேயில்லை. ஊக்கம் சும்மா மனதளவில் இருந்து விட்டால் மட்டும் போதாது. அது செயலாக வெளிப்பட வேண்டும். அந்தச் செயலுக்குத்தான் உழைப்பு” என்று பெயர் என்கிறார் கொழும்பு 11 மெயின் ஸ்ரீட் (பிரதான வீதி) நடைபாதையில் வியாபாரம் செய்யும் இளைஞர் ஜி.ராஜ்குமார்.
“எனது விடாமுயற்சிதான் எனக்கு இன்றைக்கு வெற்றியைக் கொடுத்திருக்கு. நடைபாதையில் வியாபாரம் செய்வது என்பது மிக இலகுவான காரியம் அல்ல. கிரீஸ் தடவிய மரத்தை கட்டிப்பிடித்து மல்லுக்கட்டி ஏறுவது போன்றது.
காலையில் வீட்டை விட்டு வீதிக்கு வருகையிலேயே எனது மனது பட் பட்டென அடித்துக்கொள்ளும்.. ஏன் தெரியுமா? இன்று மெயின் வீதிக்கு போனதும் அதிகாரிகள் நடைபாதையில் வியாபாரம் செய்ய அனுமதிப்பார்களா? அல்லது எங்களை தங்களின் வார்த்தைகளால் திட்டித் தீர்த்து விடுவார்களா? என்ற மனப் பயம் தான் எப்போதும் என் மனதில் குடியிருக்கும். இவ்வாறான சங்கடங்களை என்னைப் போன்ற நடைபாதை வியாபாரிகள் அனைவரும் தினம் தினம் அனுபவிக்கின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில்தான் நான் பெரும் கஷ்டத்துடன் வியாபாரம் செய்கிறேன். எனது அப்பாவும் இதே இடத்தில் வியாபாரம் செய்தார். அவரிடம் நான் வேலை செய்தேன். அவரின் பின்னர் இருபது வருடங்களுக்கு மேலாக இதே இடத்தில் வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் வியாபாரம் செய்கிறேன். இது உங்களுக்கு புதுமையான செய்தியாக இருக்கும். என்னைப் போன்ற நடைபாதை வியாபாரிகள் அனைவரும் இயற்கைக்குள் வாழ்ந்து பதப்பட்டு பக்குவமாகிவிட்டோம்.
நான் பெரிதாகப் படிக்கவில்லை. எட்டாம் வகுப்பு வரையே கல்விகற்றேன். எனது வியாபாரம் விந்தையானது. நாகரிகப் பெண்கள் முதல் கிராமத்து அழகிகள் வரையில் சுண்டி இழுக்கும் வியாபாரத்தைத்தான் இருபது வருடங்களுக்கு மேலாகச் செய்து வருகின்றேன். என்னிடம் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள தைத்த ஆடைகள் அனைத்தும் பெண்களின் உள்ளாடைகள்” என்றார் ராஜ்குமார்.
“நான் உள்ளாடைகளை விற்பனை செய்தாலும் எனது வாடிக்கையாளர்களான பெண்களிடம் எவ்வித சேஷ்டையும் செய்ய மாட்டேன். கேலி பண்ணுவது, நையாண்டி வார்த்தைகளைக் கொட்டுவது எல்லாம் எனக்குப் பிடிக்காது. என்னிடம் பெண்களின் உள்ளாடைகளான உள்பாவாடை, பெனியன், பிரஸியர், பேண்டிஸ் உள்ளிட்ட பல்வேறு ஆடைகள் உள்ளன. பிரஸியர் (பிரா) வகைகளின் பல ரகங்கள் என்னிடம் உள்ளன. இந்நாட்டில் தயாரிக்கப்படும் பிரஸியர் வகைகளிலிருந்து சீனா, தாய்லாந்து,
இந்தியா ஆகிய நாடுகளின் பிரஸியர் வகைகளும் விதம் விதமாக கொள்முதல் செய்து வைத்துள்ளேன். பெண்களின் மார்பகங்களுக்கு ஏற்றவகையில் இருபத்தெட்டு அங்குலம் முதல் நாற்பத்தி நான்கு அங்குலம் வரையிலான அளவில் பல்வேறு ரகங்களில் பிரஸியர் உள்ளன. அதேபோன்று பேண்டிஸ்சும் உள்ளன” என தனது வியாபாரம் குறித்த தகவல்களை ராஜ்குமார் தெரிவித்தார்.
ராஜ்குமாரின் பேச்சு பெரும் சுவையாக இருந்தது எமக்கு. காக்கா தன் அலகில் கொத்தி எடுத்ததை விழுங்கலாமா, கீழே போடலாமா என யோசிப்பது போன்று எங்களை யோசிக்கவும் வைத்து விட்டார் ராஜ்குமார். இந்த வியாபார நடவடிக்கையில் தான் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்தும் அவர் கூறினார். “இந்த எனது வியாபாரத்தில் பிரஸியர் வியாபாரம் பெரும் சிக்கலானது. நவநாகரிக இளம் பெண்கள் முதல் உயர்தர குடும்ப பெண்கள் வரை எனக்கு பெண் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இவ்வாறான எனது வாடிக்கையாளர்கள் தான் எனக்கும் என் குடும்பமும் வாழ தீனி போடுபவர்கள். இவர்களை எனது வாடிக்கையாளர்களாக பெற்றுக் கொள்ள நான் பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும். என்னிடம் ஏ.சி.இல்லை கண்ணைப் பறிக்கும் மின்விளக்குகள் இல்லை. மொத்தத்தில் எனக்கோ வாடிக்கையாளர்களுக்கோ ஆடைகளை வாங்குபவர்கள் அமர்வதற்கு கதிரை கூட இல்லை.
இவ்வாறான இக்கட்டான நிலையில் தான் எனது வியாபாரத்தைச் செய்கின்றேன். வீதியின் ஓரத்தில் நின்று பிரஸியர்களை வாங்க விரும்பும் நவநாகரிகப் பெண்களும் சரி சாதாரண மற்றும் உயர்மட்ட பெண்களும் அவற்றை தாங்கள் அணிந்திருக்கும் ஆடைகளுக்கு மேலாக உடுத்திப் பார்ப்பார்கள். அப்போது வீதியில் செல்லும் கில்லாடிகள் கூட்டமாகக் கூடி பத்துப் பேருக்கும் மேலாக வேடிக்கை பார்ப்பார்கள். அப்போது எனக்கு அடுப்பின் சூடு தாங்காது பொங்கி வடியும் பசும்பாலைப் போன்று கோபம் பொத்துக்கொண்டு வரும். அவர்களை நானும் நண்பர்களும் இணைந்து திட்டி, துரத்தி விடுவோம்.
காரணம், எனது வாடிக்கையாளர்களான பெண்களுக்கு எவ்வித தீங்கும் எனது இடத்தில் வைத்தும் ஏற்படக்கூடாது. அவர்களே என்னை வாழவைக்கிறார்கள். எனது கண்ணியம் அவர்களை என்னிடம் வரவழைக்கிறது. அதை நான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
பெண்களுக்கான உள்ளாடைகளை ஆண்களும் எவ்வித தயக்கமும் இல்லாமல் என்னிடம் வாங்குவார்கள். உயர்மட்ட அதிகாரிகளும் எனது வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
வெள்ளைக்கார உல்லாசப் பெண் பயணிகள் குறிப்பாக, பிரஸியர்களை தொட்டு பார்த்து ரசிப்பார்கள். மாலைதீவுப் பெண்கள் பெரியளவில் பிரஸியர்களை வாங்குவார்கள்.
சில பெண்கள் மற்றும் யுவதிகள் பிரஸியர், பேண்டிஸ், உள்பாவடை போன்ற உடைகளை கொள்முதல் செய்கையில் மிகவும் வெட்கப்படுவார்கள். கூச்சப்படுவார்கள், மெல்லிய குரலில் பேசுவார்கள். அப்போது நான் மிகவும் கவனமாக அன்போடு அவர்களுடன் உரையாடுவேன். எனது நடைபாதை வியாபாரம் வெற்றிநடைபோட எனது அன்பு வார்த்தைகள் பலமாக உள்ளன.
இவ்வாறான ஆடைகளுக்கும் மேலதிகமாக சிறு குழந்தைகளின் ஆடைகளையும் விற்பனைக்காக வைத்துள்ளேன். எனது வாடிக்கையாளர்கள் மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளேன். எனக்கென ஒரு வாடிக்கையாளர் கூட்டத்தையே சேமித்து வைத்துள்ளேன்.
தீபாவளி, பொங்கல், நோன்புப்பெருநாள், சித்திரை புதுவருடப் பிறப்பு, நத்தார் பண்டிகைக்காலம் உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் வியாபாரம் சூடு பிடிக்கும். அக்காலத்தில் மேலதிகமாக இருவரை விற்பனைப் பணியில் அமர்த்திக் கொள்வேன் எனக் கூறினார் ராஜ்குமார்.
“இன்று மழை பெய்யுமா, பெய்யாதா என காலையிலேயே வெறித்து வானத்தை அண்ணாந்து பார்ப்பேன். வானம் வெறித்து மப்பும், மந்தாரத்துடன் இடி முழக்கம் இடியாய் இடித்தால் எனது அடி வயிற்றில் சொப்பிங் பேக் கசங்கும் சத்தம் கேட்கும். அன்று கடையை வீதியில் விரிக்க இயலாது போய்விடும்.
புறக்கோட்டை மெயின் வீதியில் பொலிஸா ரையோ அல்லது படையினரையோ கூட்டமாகக் கண்டாலும் எனக்குள் பயம் கௌவிக் கொள்ளும். எங்களை நடை பாதையிலிருந்து அகற்றுவதற்காக வந்து விட்டார்களோ என்ற அச்சம்தான் அதற்குக் காரணம். இவ்வாறு தான் நாள் தோறும் பயந்த மனநிலையுடன் செத்து, செத்து தொழில் செய்கிறேன் என்றார் ராஜ்குமார் நிதானமான குரலில்.
உண்மையிலேயே, இளைஞர் ராஜ்குமாரின் அனுபவம் பலருக்கு பாடப் புத்தகமாக இருக்கும் என எண்ணிக்கொண்டு அவரின் முயற்சியை பாராட்டி, நாம் விடைபெற்றோம் மனநிறைவுடன்.
(படம்: கே.பி.பி. புஷ்பராஜா)
-metro news-
0 Comments