~அ(z)ஸ்ஹான் ஹனீபா~இளமை என்பது நிரந்தரமல்ல...
உலகில் மனிதனது பருவங்கள் எதுவும் நிரந்தரமில்லாத போது இளமைப்பருவம் ஒருபோதும் நிலையானதாக ஆகமாட்டாது
இன்று எம்மில் சிலர் இளமைப்பருவம் நிலையானதென்று நினைத்தவர்களாக நடப்பதை எண்ணுகையில் விசித்திரமாகத்தான் இருக்கின்றது!
முகநூலில் ஏனையோரின் குழந்தைகளுக்காக பிரார்த்தனை வேண்டும் ஒருசிலர் தனக்கு திருமணமான செய்தியை, ஏன் தனக்கு குழந்தைகள் உள்ளனர் என்ற மகிழ்ச்சிகரமான செய்தியைக்கூட வெளியில் கூறுவதை இழிவாக நினைக்கின்றனர்!!!
தனது மனைவி, குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்காது எங்கோவுள்ள ஒருத்திக்காக நேரம் ஒதுக்கி அவளுடன் உறவாடி, சல்லாபமாக இருப்பதில் என்ன சந்தோசம் இருந்திடப்போகின்றது?!
இக்கேவலமான செயலில் இறைவன் ஒருபோதும் நிம்மதியை அளிக்கமாட்டான், மாறாக இதில் பாரிய கேவலத்தையும் மீண்டெழமுடியாத விளைவையும் வைத்திருக்கின்றான் என்பதே நிதர்சனம்.
இவ்வாறானவர்கள் தாடியை மழித்து Slim ஆக கோடும் ஷூடும் அணிந்து பார்ப்பவர்களது கண்களுக்கு இளைஞனாக தோற்றமளித்தாலும் உண்மையில் இத்தோற்றம் நந் நோக்கத்தைக் கொண்ட தோற்றமல்ல, தன்னைத்தானே புதைகுழியில் தள்ளும் தோற்றம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
வெட்கம், மானம், மரியாதை, சூடு, சொறனை இன்றி மனைவியையும் குழந்தைகளையும் புறந்தள்ளிவிட்டு முன்னறிமுகமற்ற ஹாராமான ஒருத்தியின் சுகத்தையும் சந்தோசத்தையும் எதிர்பார்க்கும் இத்தகையவர்கள் மனிதப் போர்வையில் சுற்றும் ஜடங்கள் தான், மிருகங்கள் தனது குட்டிகளுடன் காட்டும் பாசம்கூட இவர்களிடம் இல்லாதபோது இவர்கள் மிருகங்களின் நிலைக்குக்கூட ஒப்பாகமாட்டார்கள்; ஏனெனில் அந்தளவு இவர்களது செயல் கீழ்த்தரமாக அமைந்திருக்கின்றது எனலாம்.
மனிதன் என்பவன் சமூகப்பிராணி எனும் தத்துவியலாளர்களது கருத்துக்கிணங்க அவன் சிறந்த சமூகப்பிராணியாகத் திகழவேண்டுமெனில் தனது பெற்றோர்,உற்றார் உறவினர்கள் மற்றும் மனைவி குழந்தைகளுடன் அன்னியொன்னியமாகவும் நல்லமுறையிலும் நடக்கவேண்டும், தன்னை சார்ந்தவர்களுக்கு முழுக்க முழுக்க அநீதி இழைத்துவிட்டு சமூகமட்டத்தில் நல்லவனாக அடையாளம் காட்டுவதில் எந்தப்பயனுமில்லை.
சொந்த மனைவிக்கும் குழந்தைகளுக்கும் காட்டாத அன்பும் பாசமும் தீர்க்கமுடியாத பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் என்றால் யாராலும் மறுக்கமுடியாது.
போலி எப்போதும் அதன் பிரதிபலிப்பை மக்கள் மன்றத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டியே தீரும், அந்தவகையில் இப்போலியான தொடர்புகள் என்றும் சிறந்த குடும்ப வாழ்கைக்கு உகந்ததுமல்ல பொருத்தமானதுமல்ல என்பதை நன்குணர்வது சாலச்சிறந்ததாகும்.
எனவே இவ்வாறான போலி சுகத்தைக்கொண்ட தொடர்புகளைத் தவிர்த்து குழந்தைகளுக்கு சிறந்த தந்தையாகவும் மனைவிக்கு அன்பான கணவனாகவும் திகழ்ந்து மனைவியின் சிறந்த மனிதருக்கான சான்றிதழை இவ்வுலகில் பெற்று இறைவனது திருப்பொருத்தத்தை அடைய முயல்வோம்.
நட்புடன்
அ(z)ஸ்ஹான் ஹனீபா
ஹுஸைனியாபுரம்-பாலாவி

0 Comments