மொபைல் போன், இண்டர்நெட் மற்றும் சமூக வலைத்தளங்கள் போன்றவை அதிகமாக நம் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கின்றன. இவை நமக்கு பல வழிகளில் உதவி புரிகின்றன என்றாலும் அவற்றுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் மிக மிக அதிகம் என்பதே உண்மை.
இவற்றை பொழுதுபோக்காக நினைப்பதே பல பிரச்சனைகளுக்கும் காரணம். கற்பதற்கும், பயன் அடைவதற்காகவும் இவற்றை பயன்படுத்தினால் பிரச்சனையே இல்லை. இங்கு தொழில்நுட்பம் நம்மை எப்படி எல்லாம் ஆட்டிப்படைக்கின்றது என்பதை தான் தொகுத்திருக்கின்றோம்.
நேருக்கு நேராக பழக அச்சம்
தற்பொழுது சமூக வலைத்தளங்கள் மூலமாக பேச்சுவார்த்தைகள் அதிக அளவில் நடக்கின்றன. இதனால் மக்கள் ஒருவரோடு ஒருவர் நேராக பார்த்து பழகி கலந்து ஆலோசிக்கும் நிலை முற்றிலும் மறந்து விட்டது. இதனால் நீங்கள் வெளி உலகத்திற்கு சென்றால் யாருடனும் பழக பேச நம்பிக்கை குறைந்தவர்களாகி விடுகின்றீர்கள்.
ஆக்கபூர்வ ஆற்றல் குறைகின்றது
'அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு' என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அதுதான் இந்த கேட்ஜெட்ஸ் மற்றும் இண்டர்நெட்டின் பயன்பாட்டில் இருக்கின்றது. அளவுக்கு அதிகமான நேரமும் சக்தியும் இவற்றில் மக்கள் செலவிட்டுவிடுவதால் ஆக்கப்பூர்வமான ஆற்றல் குறைந்து வருகின்றது. இதனால் கூடுதல் மறதி, உறவுகளுக்கு இடையில் விரிசல் என பல பிரச்சனைகள் உண்டு.
தொழில்நுட்பத்தோடு இணைந்திருத்தல்
நீங்கள் அதிக அளவில் இண்டர்நெட் மற்றும் தொழில்நுட்பத்துடன் இணைந்து இருப்பதால் அவை இல்லாமல் உங்களால் வாழ முடியாது என்ற நிலை வருகின்றது. ஒரு இடத்துக்கு போக வேண்டும் என்றால் கூட அங்கு இண்டர்நெட் வசதி இருக்கின்றதா என்று அறிந்து பின்புதான் செல்கின்றோம். அப்படி சென்ற இடத்தில் அவை இல்லையென்றால் கூடுதல் தலைவலி தான்.
மூலையை விட மொபைலுக்கே முக்கியத்துவம்
தற்பொழுது மக்கள் தங்கள் மொபைலை நம்பும் அளவுக்கு மூலையை நம்புவது இல்லை. தங்கள் வீட்டு விலாசம், இமெயில் விலாசம், கடவுச்சொல், வங்கி கணக்கு போன்ற அனைத்து விவரங்களையும் மொபைலில் சேமித்து வைக்கும் பழக்கத்தில் உள்ளனர். இதனால் மூலையின் செயல்பாடு அதிக அளவில் குறைந்து மறதி அதிகரித்து, அறிவுபூர்வமான ஆற்றல் குறைந்து வரும் நிலை வருகின்றது.
எல்லா வழிகளும் கூகுளை நோக்கியே
உங்களுக்கு ஏதேனும் தகவல் தேவை என்றால் உடனே என்ன செய்கின்றீர்கள். யோசிக்கவே வேண்டாம். உங்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது கூகுள் தான். கல்வி தொடர்பான சந்தேகமோ வழி தேடுதலோ எதுவாக இருந்தாலும் நம் உறவினர்கள், நண்பர்கள் என யாரையும் கேட்காமல் கூகுளை தான் நாடி செல்கின்றோம். இதனால் சுயமாக தேடி அறிவை வளர்த்து கொள்வது என்பது முற்றிலும் குறைந்து வருகின்றது.
தொடர்பு எண்கள் நினைவில் இல்லை
முன்பெல்லாம் நம் நண்பர்களின் தொடர்பு எண்களை நினைவில் வைத்திருந்ததால் அடிக்கடி தொடர்பில் இருந்தோம். இப்பொழுது எல்லாம் மொபைலில்தான் இருக்கின்றன. கொஞ்சம் நம் நினைவிலும் இருந்தால் அதுவே அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அன்பாக இருக்கும் அல்லவா.
தரவுகளை தொலைப்பதை நினைத்து அச்சம்
நமது எல்லா தரவுகளும் மொபைல் அல்லது லேப்டாப்பில் சேமிக்கப்பட்டுள்ளதால் அவை தொலைந்தால் என்ன ஆகும் என்று நினைத்தீர்களா. எல்லாம் முடிந்தது. எனவே முற்றிலும் தொழில்நுட்பத்தை சார்ந்து இருக்காமல் கொஞ்சம் மூலையையும் நம்புங்கள்.
இதை எப்படி தடுப்பது
தொழில்நுட்பம் நம்மை ஆள விடாமல் நாம்தான் அதை ஆள வேண்டும். அவை நம் வாழ்வின் அங்கம்தானே தவிர வாழ்க்கை அல்ல. எனவே சமூக வலைத்தளங்களை உடனுக்குடன் செக் செய்து அவற்றுக்கு முக்கியத்துவம் தறுவதை கொஞ்சம் நிறுத்துவோமா.


0 Comments