சிங்கள தேசிய பத்திரிகை ஒன்றில் கீர்த்தி வர்ணகுலசூரிய என்ற செய்தியாளர் எழுதி வெளியிட்டுள்ள செய்தி பொய்யானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்னும் 9 மாதங்களில் இலங்கையில் வெளிநாடுகளின் தலையீட்டுடன் கலப்பு நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட உள்ளதாகவும் அந்த நீதிமன்றத்திற்கான வெளிநாட்டு நீதிபதிகள் ஏற்கனவே இலங்கைக்கு வந்துள்ளனர் என்று மக்களை தூண்டி விடும் வகையில் அந்த செய்தி எழுதப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
கண்டியில் நேற்று நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
நாட்டை கட்டியெழுப்ப மக்களுக்கு வலுவை வழங்குவதே நாடொன்றின் இருக்கும் ஊடகங்களின் பொறுப்பாகும்.
எனினும் இலங்கையில் உள்ள சில ஊடகங்களில் செயற்பாடுகள் மிகவும் கவலைக்குரியதாக உள்ளது.
ஞாயிறு திவயினவின் பிரதான தலைப்புச் செய்தி என்ன?. போர் குற்றம் நீதிமன்றம் இன்னும் மாதங்களில், வெளிநாட்டு நீதிபதிகள் வருகின்றனர் என அந்த தலைப்புச் செய்தி எழுதப்பட்டுள்ளது. இந்த செய்தி முற்றிலும் பொய்யானது. இந்த செய்தியை முற்றாக நிராகரிக்கின்றோம்.
நாட்டின் அரசியலைமைப்புச் சட்டத்திற்கு அமைய வெளிநாடுகளில் இருந்து நீதிபதிகளை வரவழைத்து வழக்கு விசாரணைகளை நடத்த முடியாது. அதற்கு இடமும் இல்லை. வெளிநாட்டு நீதிபதிகள் வர வேண்டும் என்றால் அரசியலமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும். அதற்கு எந்த வகையிலும் நான் இணங்க போவதில்லை.
இந்த செய்தி நாட்டு மக்களை தவறாக வழி நடத்துவது மாத்திரமல்லாது அவர்களை பதற்றத்திற்கு உள்ளாகும். இப்படியான செய்திகளை ஏன் வெளியிடுகின்றனர் என்று நான் ஆச்சரியம் அடைக்கின்றேன்.
குறைந்தது தொலைபேசியில் தொடர்பு கொண்டு இப்படியான ஏதாவது ஒன்று இருக்கின்றதா என்றாவது கேட்க வேண்டும். இதுதான் ஊடகம் ஒன்றிடம் இருக்க வேண்டிய ஒழுக்கம்.
இந்த செய்தியில் கூறுவது போல் வெளிநாட்டு நீதிபதி விமானங்களில் ஏறி வந்து கொண்டிருக்கின்றனர். இப்படிதான் இந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு எம்மை போர் குற்ற நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் மின்சார நாற்காலிக்கு கொண்டு செல்லும் என்றும் கூறினார்கள். எந்த இடத்திலும் அப்படியான தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
திவயின பத்திரிகை எந்த பொறுப்பும் இன்றி பொய்யான செய்திகளை வெளியிடுகிறது என்று பல சந்தர்ப்பங்களில் பல்வேறு தரப்பினர் குற்றம் சுமத்தியிருந்ததுடன் திவயின பத்திரிகைக்கு எதிராக பத்திரிகை சபை முறைப்பாடு ஒன்றை விசாரித்து வருகிறது.


0 Comments