Subscribe Us

header ads

மே தினம் ஓர் வரலாற்று ரீதியான சிறப்புப்பார்வை..



உங்கள் வீட்டில் அநேகமானோர் மே 1 ஆம் தேதி விடுமுறை என்று வீட்டில் இருப்பர். மே தினம் என்றும் தொழிலாளர் தினம் என்றும் கூறக் கேட்டிருப்பீர்கள். இந்த மே தினம் வந்தது எப்படி? உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மே முதல் தேதியை மே தினம் என்றும் தொழிலாளர் தினம் என்றும் கொண்டாடி மகிழ்கிறார்கள். மறைமுகமாக கூலிப்படையினரது உரிமைக்கோசத்திற்கான நாளாகும்.18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 12 முதல் 18 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இதற்கு எதிரான குரல்கள் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் தொடங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (Chartists) 6 முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டங்களை நடத்தியது. அதில் முக்கியமானது 10 மணி நேர வேலை என்ற கோரிக்கை.

1830 ஆம் ஆண்டு, பிரான்சில் நெசவுத் தொழிலாளர்கள் தினமும் 15 மணி நேரம் உழைத்து வந்தனர்.

இதனை எதிர்த்து அவர்கள் 1834 இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற வாசகத்தை முன்வைத்துக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஆனால், இது தோல்வியில் முடிந்தது. அவுஸ்திரேலிய நகரான மெல் போர்னில் கட்டிடத் தொழிலாளர்கள் 1856 இல் முதன்முதலாக 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையை முன்வைத்தனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றனர். 1896 ஏப்ரலில் புரட்சி நாயகன் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறுபிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளர்களின் உரிமை குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மேலும், ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதாரப் போராட்டம் அரசியல் போராட்டமாக எழுச்சி கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். தொழிலாளி களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது எனலாம்.

1889 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் சோசலிசத் தொழிலாளர்களின் சர்வதேசத் தொழிலாளர் பாராளு மன்றம் கூடியது. 18 நாடுகளிலிருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேரப் போராட் டத்தை முன்னெடுத்துச் செல்வது என்று முடிவு செய்தனர். 1890 மே 1 ஆம் நாள், அனைத் துலக அளவில் தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்திட அறைகூவல் விடுத்தனர். இந்த அறைகூவலே, மே முதல் நாள் சர்வதேச தொழிலாளர் தினமாக - மே தினமாக வருவதற்குக் காரணமாக அமைந்தது. அடுத்த ஆண்டிலிருந்து உலக நாடுகள் பலவற்றில் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.

அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து, அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இந்த இயக்கம் 1886, மே 1 ஆம் நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இந்த இயக்கத்தின் செயற்பாடே மே தினம் தோன்றக் காரணமாக இருந்தது எனலாம்.

மே தினமாக - தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்படுவதற்கு முன்பே மே முதல் நாளை ஐரோப்பியர், பிரான்சியர் போன்ற பல்வேறுதரப்பினரும் விசேட நாளாக கொண்டாடியுள்ளார்கள் என்பதற்கு பல வரலாற்று சான்றுகளும் இருக்கத்தான் செய்கிறது. வரலாற்றை நோக்கும் போது தொழிலாளர் உரிமை பற்றி அதிகமாக பேசியவர்கள் இடது சாரி சோசலிச சிந்தனை உடையவர்களே என்ற முடிவுக்கு வரமுடியும். அவ்வாறே இலங்கையிலும் மே தினத்தன்று பல இடதுசாரி கட்சிகள் ஊர்வலங்களையும் மாநாடுகளையும் தொழிலாளர் உரிமை வேண்டி நடாத்துகின்றனர். ஆனாலும் ஒரு சில வலதுசாரிகட்சிகளும் மே தினத்தை முன்னிட்டு பல கூட்டங்களை திட்டமிட்டு நடாத்துகின்றனர். வலதுசாரிகளின் இவ்வாறான செயற்பாடுகளின் நோக்கம் தொழிலாளர் உரிமை என்பதை விட தமது அரசியல் இருப்பை நிலைநாட்டிக்கொள்வதாகவும் இருக்கலாம்.

-SIFAS NAZAR-(BA, READING LLB)

Post a Comment

0 Comments