மனித வாழ்கையில் கல்வி எனும் பதம் அரும்பெரும் செல்வாக்குப் பெற்றது. மனித நடத்தைகள், மனித வாழ்கையின் பல மாறுதல்களை ஏற்படுத்தும் ஒரு விடயமாக நாம் கற்கும், கற்பிக்கும் கல்வி காணப்படுகின்றதென்றால் மிகையாகாது. கல்வி கற்பதும் கற்பிப்பதும் அமானிதமே. இறைவன் கல்வியை அனைத்து மாந்தர்களுக்கும் வழங்குவதில்லை, மாறாக அவன் நாடியவர்களுக்கு மாத்திரமே வழங்குறான். எனவே, இந்த அறிய பொக்கிஷம் கிடைக்கபெற்றவர்கள் இறைவனுக்கும் தான் பொறுப்புச் சாட்டப்பட்டுள்ள சமூகத்திற்கும் உண்மையாகவும் உணர்வுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.
இலங்கைத் திருநாட்டின் பாடசாலைக் கல்வித் திட்டத்திலே மாணவர்களை வாட்டி எடுக்கக் கூடிய மூன்று பரீட்சைகளாக தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தர பரீட்சை, மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சை என்பன காணப்படுகின்றன.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையானது க.பொ.த சாதாரண தர பரீட்சை, மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சை இவை இரண்டிலுமிருந்து முற்றிலும் வேறுபட்டதாகக் காணப்படுகின்றது. பரீட்சையானது மாணவர்களான பிள்ளைகளுக்கே காணப்படல் வேண்டும் ஆனால் இன்றைய நோக்கில் அவை பிள்ளைகளின் பெற்றோருக்கே எனத் தோன்றுகின்றது.
எதிர்கால சந்ததியினரான எமது செல்வங்களின் மனங்களில் கல்வி என்பது கசக்கும் கனி என்ற பதத்தை இந்த பருவம் முதற் கொண்டே எமது பெற்றோரில் சிலர் காட்டி விடுகின்றனர். சிறுவயதில் அவர்களில் மனங்களில் நாம் ஏற்படுத்திய அந்த விஷம் பெரியவர்களானதும் கூட ஒட்டிக் கொண்டு நிற்கும் என்பதை பெற்றோராகிய நாம் மறந்தும் மறைத்தும் விடுகின்றோம்.
ஓய்வில்லாத கற்கை, பொழுதுபோக்கின்மை, கல்வியில் அடக்குமுறை, எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம், சரியான தருணத்தில் சரியானவை கிடைக்கப்பெறாமை போன்றவையே இக்கால பிள்ளைகளின் முக்கிய பிரச்சினைகளாக காணப்படுகின்றன. அறிவை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் கல்வியை கற்பது தவறல்ல, மாறாக பொறாமையை வளர்க்க என்ற நோக்கில் கல்வி கற்பது கற்பிப்பது முற்றிலுமான தவறாகவே கணிக்கப்படுகின்றது. அதற்காக சமூகத்தில் பல பிஞ்சு உள்ளங்கள் பலிக்கடவாக்கப்படுகின்றது அது தவறு.
பெற்றோரின் ஆசைகள் மற்றும் அவர்களது வேட்கைகள் மாத்திரமே புலமைப்பரிசில் பரீட்ச்சையில் தொக்கி நிற்கின்றது என்றால் மிகையாகாது. வெறுமனே மாதாந்த ஐநூறு ரூபாய் கொடுப்பனவுக்ககவும், ஒரு தேசிய பாடசாலை அனுமதிக்காகவுமே இந்த போராட்டம்.
நல்லவை கெட்டவை அறியா இந்த பிஞ்சுகளின் மனங்கள் இந்த பருவம் முதற் கொண்டே பாழ்படுத்தப்பட்டு நஞ்சூட்டப்படுகினறது. கல்வியை இறைவன் அனைவருக்கும் ஒரே அளவில் வழங்குவதில்லை, மாறாக அவை ஒருவருக்கொருவர் வேறுபட்டதாகவே காணப்படும். கேற்கும் கேள்விக்கான பதிலை வழங்குவதில் வளர்ந்தவர்களான எமக்கிடையில் கூட நேர இடைவெளியில் வித்தியாசங்கள் காணப்படும். சிலர் உடனே பதிலை வழங்குவர், பலர் சிந்தித்து பதிலை வழங்குவர், இன்னும் சிலர் சிந்தித்துக் கொண்டே இருப்பார் ஆனால் அவர்களிடமிருந்து எவ்வாறு சரி பதில் கிடைக்கும். ஆனால் நேரம் தாமதிக்கும். இந்த விடயத்தை புரிந்து கொண்டால் மாத்திரமே போதுமானது. எமது குழந்தைகளும் இவ்வாறுதான்,
நூறு பிள்ளைகள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் ஒரு பாடசாலையில் சுமார் ஐந்து அல்லது பத்து மாணவர்களே அதி சித்தியடைகின்றனர். சித்தியடகினற மாணவர்களை கணக்கில் கொள்ளும் பாடசாலை சமூகம் மற்றும் வெளிச் சமூகம் சித்தியடையாத மீதமுள்ள பெரும்பான்மை தொண்ணூறு மாணவர்களின் நிலையை ஏன் கணக்கில் கொள்வதில்லை? அவர்கள் சித்தியடையாமைக்கான காரணத்தை கண்டறிந்த பாடசாலைகள் எமது சமூகத்தில் காணப்படுகின்றதா? இங்கேதான் நாம் தவறிழைத்து விடுகின்றோம்.
சித்தியடகின்ற மாணவர்களின் புகைப்படங்களை இட்டு பதாகைகளில் காட்சிப்படுத்துகிறார்கள். எவ்வளவு வருந்தத்தக்க விடயம், சிறு வயதிலேயே அவர்களது மனங்கள் பாதிக்கப்படுகின்றதை மறந்து இவ்வாறான காரியங்களை செய்கிறார்கள். க.பொ.த சாதாரண தர பரீட்சை, மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களின் புகைப்படங்களை காட்சிப்படுத்துவதென்பது வரவேற்கத்தக்கது. காரணம் சுயமாக சிந்திக்கவும் சிறப்பாக செயற்படவும் திறன் வாய்ந்த பருவத்திலுள்ளவர்களை உற்சாகப்படுத்துவதில் எந்தவித தவறுமில்லை.
ஆனால் வாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களையும் அடுத்தவர் விரும்பும்படி வாழும் பிஞ்சுகளின் மனங்களில் இவ்வாறான பதாகைகள் எவ்வாறான தாக்கங்ககளை ஏற்படுத்தும் என சற்று சிந்திக்க நாம் வேண்டும். பரீட்சையில் சித்தியடையாத குற்றவுணர்வு இதன் மூலம் அதிகரிக்குமே தவிர மாறாக அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் என்பது முற்றிலும் தவறான கருப்பொருளாகும். சித்தியடைந்த மாணவர்களை கொவரவிக்கின்றோம் என எண்ணிக் கொண்டு சித்தியடையாத பிஞ்சுகளை மேலும் மேலும் காயப்படுத்துகின்றோம் என்பதை அறிய மறுக்கின்றோம். இழப்புகளை தாங்கிக் கொள்ளாத இந்த மனங்களில் சிறு வயது முதலே கல்வியில் நாட்டம் குறைந்து போக சமூகத்திலுள்ள நாம் செய்யும் இவ்வாறான சில பல தவறுகளே காரணங்களாக அமைகின்றன.
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையாத பல மாணவர்கள் பலர் தமது பெற்றோரின் மூலமும் சமூகத்திலுள்ள சில மேதாவிகளின் மூலமும் தொடர்ந்தும் காயப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். சித்தியடைந்த மாணவர்களை தமது பிள்ளைகளுக்கு ஒப்பிட்டு பேசுவது, குறைத்து மதிப்பிடுவது, கேவலமாக நடாத்துவது போன்ற பல வதைகளுக்கு ஆளாக்குகின்றனர்.. தமது பெற்றோரே தாம் பெற்ற குழந்தைகளை நம்பவில்லையெனில் உலகம் எவ்வாறு நம்பிக்கை கொள்ளும்? உலகை எவ்வாறு அந்தக் குழந்தை நம்பிக்கை கொள்ளும்?
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களும் எதிர்காலத்தில் தமது கல்வியில் மேலோங்கியிருப்பார்கள் என சிந்திப்பது மடத்தனம். இலங்கையின் இன்றைய கல்விச் சூழலில் பல்கலைகழக நுழைவுகளில் அதிகமாக இடம்பெறக் கூடியவர்கள் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையாத மாணவ சமூகமே.
வெறுமனே போட்டி பொறாமை மனப்பாங்கைக் கொண்டு இளம் பிஞ்சுகளில் அழகிய வாழ்க்கைகளை சிதைத்து விடாதீர்கள். உங்களுடைய ஆசா பாசங்களுகுக்கு ஒன்றுமே அறியாத இளம் பிஞ்சுகளை வதைத்து விடாதீர்கள். எமக்கும் எமது குழந்தைகளுக்கும் எது அதி சிறந்தது என படைத்த இறைவனுக்கு தெரியும். எனவே, முயற்சிகள் செய்யப் பழக்குங்கள், அடக்குமுறை செய்யாதீர்கள்.
குழந்தைகள் எமக்கு மட்டுமல்ல எதிர்கால சமூகத்திற்கும் வளர்த்து வார்த்துக் கொடுக்கப்படக் கூடியவர்கள் என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ளங்கள்.
(நானும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்தியவனே)
அனீஸ் அலி முஹம்மத்
முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடம்,
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்.
0 Comments