தவக்காலம் என்பது நம்மை புதுப்பித்துக்கொள்ளும் காலம். இறை அருளைப்பெற ஒவ்வொருவரும் முயற்சி மேற்கொள்ளும் காலம். நமது வாழ்வில் கடந்த கால கசப்பான அனுபவங்களை நாம் எப்போதும் மனதிலே சுமந்து செல்வோமென்றால் நம் மனதின் அமைதியை இழக்கின்றோம். அதனால் மனதில் தீராத கசப்புணர்வுகளும், காயங்களும் ஏற்படுகிறது. எந்த மருந்தும் குணமாக்க முடியாத அதற்கு மன்னிப்பு ஒன்றுதான் மருந்து. அதை ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நாம் புரிந்து கொள்வோம்.
மன்னிப்பு வெறும் உணர்வல்ல, மாறாக இறைத்தன்மை கொண்டது. கடவுள் கண்டிப்பானவர், நேர்மையானவர், நீதியானவர், உண்மையானவர் என்றாலும் அவர் இரக்கமும், அன்பும் கொண்டவர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. பாவிகள் வழிதவறி போகும் போதெல்லாம் அவர்களை தேடிச்சென்று கிறிஸ்து எவ்வாறு மன்னிப்பு அளித்தாரோ, அதைபோலவே தான் நம்மைத்தேடி வந்து நமக்கு மன்னிப்பு அளித்து இயேசு புதுவாழ்வு தருகின்றார். இச்செயல் கடவுளின் இரக்கத்தையும், மன்னிப்பையும் நமக்கு நினைவூட்டுகிறது.
“நான் உனக்கு இரக்கம் காட்டியது போல நீயும் உன் உடன் பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா?” (மத் 18:33) என்ற வார்த்தைகள் நம்மையும் மன்னிக்க அழைப்பு விடுக்கின்றது. நான் மன்னித்து விட்டேன் ஆனால் இன்னும் மறக்க முடியவில்லை என்பதற்கு நாம் மற்றவர்களை இன்னும் முழுமையாக மன்னிக்கவில்லை என்றுதான் அர்த்தம். எனவே இத்தவக்காலத்தில் இறைவனின் இதயத்தைப்போல இரக்கமான இதயம் கொண்டவர்களாக வாழ்வோம். நிபந்தனையின்றி நாம் பிறரை மன்னிப்போம். நமக்கு எதிரா குற்றம் புரிந்தவர்களை மன்னித்து வாழ்வோம். நமது மன்னிப்பால் உடைந்த உறவுகளை புதுப்பிப்போம்.
0 Comments