இளம் வயதில் போதைவஸ்துக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைத்து திருந்தி வாழும் ஒருவரே இன்று எம்மோடு இணைகிறார்.
கொழும்பைச் சேர்ந்த 38 வயதைக் கொண்ட பிரபாத் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இரு குழந்தைகளின் தந்தை இப்போது உங்களுடன் பேசுகிறார்.
தெரிந்தும் தெரிந்து வைத்து இருந்தும் தெரியாததைப் போல் செய்த முட்டாள்தனமான செயல்களால் என் இளமைக்காலம் கசப்புடன் கழிந்தது.
இதனால் விளைந்தது பெருந்தீமை. வித்து சிறியதுதான் ஆனால் மரம் எவ்வளவு பெரியது. அடர்த்தியானது. அந்த மரத்தைப் போன்றதே அறியாமையால் வரும் கேடு என எம்மிடம் தெரிவித்து நொந்து கொண்டார் பிரபாத்.
“எப்படி இருந்தவன். இப்படியாகிட்டேனே” என நடிகர் விவேக் ஸ்டைலில் அவர் வார்த்தைகளை வெளியிடுகையில் எமது மனத்திற்குள்ளும் துக்கம் அடைத்துக் கொண்டது.
தன் வாயைத் திறந்து தனது மனதிற்குள் தேக்கி வைத்திருந்த அவலத்தை எம் முன்னிலையில் கொட்டினார்.
“நான் நான்காம் வகுப்பு வரையே கல்வி கற்றுள்ளேன். அதற்குமேல் என்னால் கல்வி கற்றுக் கொள்ள இயலவில்லை.
குடும்ப வறுமையும் எங்களுடன் இணைந்து கொண்டதால் கல்வியையும் தொலைத்து விட்டு இளம் வயதில் மாநகர சபையின் நகர சுத்திகரிப்பு பிரிவில் இணைந்து வீதி குப்பைகளை அள்ளும் தொழிலில் இணைந்தேன். அதுவும் கசந்தது.
புறக்கோட்டையிலிருந்த மீன் சந்தை, மற்றும் கருவாட்டு கடைகளில் சுமை தூக்கும் தொழிலாளியாக செயல்பட்டேன். இங்குதான் என் இளம் வாழ்க்கையில் கீறல்கள் விழுந்தன. கஷ்டப்பட்டு உழைப்த்தேன்.
கை நிறைய பணம் புரண்டது. நண்பர்களின் பெருக்கம் அதிகரித்தது. அறியாமை என்னை ஆட்டி வைத்தது. முதலில் நண்பர்களுடன் இணைந்து ஜொலிக்காக சிகரெட் பாவனைக்குள் புகுந்தேன்.
பின்னர் மது பாவனையில் இறங்கினேன். கையில் பணம் தாண்டவம் ஆட வேலைகள் அனைத்தும் நிறைவடைந்ததன் பின்னர் குளித்துவிட்டு நன்றாக உடைகளை அணிந்துக் கொண்டு நண்பர்களுடன் பார்களுக்குள் நுழைந்து மது அருந்துவேன். சிறுக, சிறுக மதுவுக்கு அடிமையான நான் பின்னர் மது என்னைத் துரத்தத் தொடங்கியது.
பின்னர் பகலிலும் குடிக்க ஆரம்பித்தேன்” என எங்கள் முன் தன் கடந்த கால மனக்கவலையை இறக்கி வைத்தார் பிரபாத்.
“குடிப்பழக்கத்தினால் எனது தொழிலும் பறிபோனது. பின்னர் சிறு சிறு தொழில்களில் ஈடுபட்டேன்.
நாள் கூலியாக கிடைக்கும் பணத்தில் கஞ்சாவுக்கும் அடிமையானேன். பின்னர் அபின் சாப்பிட பழகினேன். வீட்டில் தாய், தந்தையின் பேச்சுக்கள் மிகவும் கடுமையாக இருந்தன.
போதை வெறியுடன் வீடு சென்றதால் என்னை வீட்டாரும் வெறுக்கத் தொடங்கினர். துன்பமும், கவலையும் இணைந்த கலவை என்னை மன ரீதியாக தாக்கியது...” எனத் தொடர்ந்து கருத்து தெரிவித்த வரை தடுத்து, இவ்வாறு மாற்றம் பெற யார் காரணம் எனக் கேட்டோம்.
“அதுதானே ஆரம்பத்திலேயே சொன்னேன். நண்பர்கள் தான் அவர்களிடம் யோசனைகளை கேட்க அவர்களும் ஒவ்வொரு வகையான போதைவஸ்துக்குள் என்னைத் தள்ளினர்.
அப்போது எனக்கு வயது வெறும் 23 தான். இந் நிலையில்தான் கொழும்புக்கு வெளியே புறநகரில் சப்பாத்து, குடை திருத்தும் தொழிலில் இறங்கினேன்.
இதில் எனக்கு ஏற்கனவே சிறு பயிற்சி இருந்தது. அங்கு சென்றதும் மீளவும் இத் தொழில் மூலமாக பணம் என் கைகளில் தவழ்ந்தது. நண்பர்கள் என்னை விட்டதாக இல்லை.
அவர்களும் என்னை துரத்த மது, சிகரெட், கஞ்சா, அபின் என போதைவஸ்துகளும் என்னைத் துரத்தத் தொடங்கின.
அதன் பயன் மாதுவை தேடி அலையத் தொடங்கினேன். சுடும் வெயிலில் குடையை விரித்து அதன் நிழலில் வீதியோரத்தில் சப்பாத்து, செருப்பு, குடைகள், பேக் வகைகளை ‘ரிப்பேர்’ செய்து கொடுத்து பணம் சம்பாதிக்கும் என் வாழ்வியலில் விழுந்த ஓட்டையை ரிப்பேர் செய்ய இயலாது திண்டாடினேன்.
வேலை முடிந்து மாலையில் புதிய அலங்காரம் செய்துகொண்டு மாதுவை தேட ஆரம்பித்தேன். ‘மைனரைப்’ போன்று அலங்காரம் செய்து கொண்டு பெண்களுடன் விடுதிகளுக்குள் நுழைந்தேன்.
இவ்வாறான பெண்கள் என்னைத் தேடி வரத் தொடங்கினர். இவர்களுடன் தினமும் கூத்தாடினேன். முதலில் இவர்களால் மகிழ்ச்சியாக இருந்தது.
பின்னர் இடி விழும் என கற்பனையில் கூட எனக்குள் யோசனை எழவில்லை. மது, மாது என்பன எனது நண்பர்களாக மாறின.
பின்னர் மதுவை கைவிட்டு ஹெரோயின் போதைப் பொருளை நாடிச் சென்றேன். இவைகளிலிருந்தும் தப்பிச் செல்ல வழி கிடைக்கவில்லை. அப்போது அனைவரும் என்னை வெறுக்கத் தொடங்கினர்.
ஹெரோயின் பாவிப்பதால் ஒரு வகை ஜொலி இருக்கும் என நண்பர்கள் சொன்னதால் அதில் காலை வைத்தேன். ஒரு ஜொலியும் இல்லை. இது வெறும் பைத்தியக்காரக் கதை. உடல் வலி எடுக்கும், தூக்கம் வரும்.
மாட்டை விட கேவலமாக வேலை செய்யலாம். சுயசிந்தனை எம்மைவிட்டு அகன்று விடும். என்ன செய்கிறோம் என்பது எமக்கே தெரியாது.
ஹெரோயின் பாவித்து பழக்கப்பட்டுவிட்டால், ஹெரோயின் கிடைக்காத அல்லது பாவிக்காத தருணத்தில் வாந்தி வரும். உடல் செத்து போன மாதிரி மாறிவிடும்.
ஒன்றுமே விளங்காது. ஹெரோயின் வாங்குவதற்கு பணம் இல்லாத தருணத்தில் திருட்டு தொழிலில் நுழைய வேண்டி ஏற்படும்.
பணத்திற்காக கொலையும் செய்ய மனம் துடிக்கும். போதை தலைக்கு ஏறியதும் இனிப்புப் பண்டங்களையே சாப்பிட ஆசை வரும். பைத்தியக்காரனைப்போல உளறிக் கொண்டு வீதியோரங்களில் வீழ்ந்து கிடந்தேன்.
ஹெரோயின் பாவிப்பதற்கு பணம் தேடி திருட்டு தவறுகளையும் செய்யத் தூண்டும்.
ஹெரோயின் பாவனையாளர்கள் தங்களின் போதை ஆசையை தீர்த்துக் கொள்ள, தன் மனைவியைக் கூட பலருக்கு வாடகைக்கு விடும் சந்தர்ப்பங்களை நான் நேரில் கண்டவன்.
இது ஒரு கேவலமான செயல். போதையின் தாக்கம் பலரின் குடும்பத்தை கேவலப்படுத்தி உள்ளதுடன் சுக்கு நூறாக உடைத்தும் உள்ளது..” என்றவரிடம் அவரின் பேச்சை தடுத்து சில கேள்விகளை எழுப்பினோம்.
போதை பொருளுக்கு அடிமையானவர்கள் எதற்காக கை, கால்களை சவரக்கத்தியால் கிழித்துக்கொள்கிறார்கள் என்று கேட்டோம்.
ஹெரோயின் போதைப் பொருள் இல்லாத தருணத்தில் வெறியால் தங்களின் உடலை சவரக்கத்தியால் தாறுமாறாக கிழித்துக் கொள்வார்கள்.
அதில் அவர்களுக்குள் ஒரு சந்தோஷம் இரத்தம் நிலத்தில் சொட்டு சொட்டாக விழுவதை பார்த்து ரசிப்பார்கள். இது ஒரு மிருகத்தனமான போதையின் உச்சக்கட்டமாகும்.
பணம் இல்லாவிட்டால் போதைப் பொருள் கொள்முதல் செய்ய கொலை செய்யவும் தூண்டும். வீட்டு சமையல் பாத்திரங்களை திருடி யாருக்காவது விற்று பணத்தை பெறுவோம்.
போதைக்கு அடிமையானவர்கள் கொண்டு வரும் பொருட்களை கொள்முதல் செய்யவென முன்பின் அறிமுகமற்றவர்கள் எங்களை பின் தொடருவார்கள். அடிமாட்டு விலைக்கு திருட்டு பொருட்களை வாங்குவார்கள்.
பழைய போத்தல் கடை உரிமையாளர்கள் போதைக்கு அடிமையானவர்களான குடுகாரர்களை கண்டால் ஏசி துரத்தி விடுவார்கள்.
ஹெரோயின் பாவனையார்கள் குடுகாரர்கள் என்றே அழைக்கப்படுவார்கள். இவர்கள் தங்களுக்குள் பைத்தியக்காரர்களைப் போல தனிமையில் பேசிக் கொள்வார்கள்” என அவர் பதிலளித்தார்.
“எவ்வாறு நீங்கள் இவ்வாறான கேவலமான நிலையிலிருந்து விடுபட்டீர்கள்?” எனக் கூறுமாறு கேட்டோம்.
“உண்மையிலேயே நான் ஒரு கேவலமான வாழ்க்கைக்குள் எனது இளம் வயதை தொலைத்துவிட்டேன். இனி அந்த இளமையை பெற இயலுமா?
போதைப்பொருள் பாவனையாளர்களை சட்டத்தினால் மட்டும் ஒழித்து விட இயலாது. மது, ஹெரோயின், கஞ்சா, அபின், பெண் பாவனையிலிருந்து விடுபட வேண்டுமானால் இப்போதைக்கு வாழ்பவரின் மனம் திருந்த வேண்டும்.
இது முக்கியமானதாகும். எனது மனம் பேசியது. அடேய் மடையா இது ஒரு இழிவான செயல் என சொன்னது. பல தடவை எனக்குள் மனம் பேசியது. சிந்தித்தேன். பின்னர் உண்மையிலேயே வெட்கப்பட்டேன். அப்போது மேற்சொன்ன இழிவான செயல்களை விட்டொழித்தேன்.
இதற்காக கொழும்பை விட்டு அனுராதபுரத்திலுள்ள மாமியின் வீட்டுக்குச் சென்றேன். புதிய உறவு, புதிய சூழல் என்னை முற்றாகத் திருப்பிப்போட்டது.
அனுராதபுரத்தில் பல தொழில்களில் ஈடுபட்டேன். முற்று முழுவதுமாக மனம் திரும்பினேன். வாழ்க்கையில் மாற்றம் தென்பட்டது.
எனது மாமியின் மகளை திருமணம் செய்து கொண்டேன். எனது மாமி இறந்தபின் 2008 இல் மீண்டும் கொழும்புக்கு வந்தேன்.
எனது பழைய நண்பர்களை எல்லாம் கைவிட்டு சுய புத்தியுடன் செயற்படத் தொடங்கினேன். மீன் சந்தையில் மீன் பிடிக்கூட்டுத்தாபனத்தின் மீன் பெட்டிகளை தூக்கும் தொழிலில் இறங்கினேன்.
பின்னர் மீண்டும் எனது பழைய தொழிலான சப்பாத்து, குடை செருப்பு திருத்தும் தொழிலில் இறங்கினேன். இது நடந்தது 2012இல். சுய தொழிலில் நல்ல வருமானம் கிடைத்தது.
இன்று கம்பஹா மாவட்டத்தின் பிரபல நகரில் இரண்டு பேச்சர்ஸ்சில் காணி வாங்கி வீடு நிர்மாணித்து அனைத்து வசதிகளோடும் வாழ்கிறேன். இன்றும் நடைபாதையில் தான் தொழில் புரிகின்றேன்.
எனக்கு இன்று கிடைத்திருக்கும் நிம்மதி பெரிய வசதி படைத்த செல்வந்தர்களுக்கு கூட இருக்குமா என்பது சந்தேகமாகும்.
சத்தியமாக இதை நான் சொல்லுகிறேன்” என தான் திருந்தி வாழ ஆரம்பித்த கதையை கூறினார் பிரபாத்.
“இன்றைய இளம் சமூகத்திற்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?”
இன்றைய இளம் சமூகத்திற்கு எனது வாழ்க்கை பெரிய பாடமாகும். வாழ்க்கையில் நல்லவர்களை இனம் காண்பது சிரமமானது. பலர் திருந்த வேண்டும் என்பதற்காக எனது கதையை சுருக்கமாக சொல்லியுள்ளேன்.
நிதானமாய் இருங்கள். தீங்கு விளைவிக்கக்கூடிய எதையும் உட்கொள்ளாதீர்கள். தீங்கு விளைவிக்கக்கூடிய செயலில் ஈடுபடாதீர்கள். உங்களை நீங்களே பராமரித்துக் கொள்ளுங்கள்.
ஒழுக்க நெறிகளிலிருந்து பிறழாதீர்கள். வாழ்க்கையினை மகிழ்ச்சிகரமாக நடத்திச்செல்ல, சிறந்த உடல் நலத்துடனும் ஆரோக்கியத்துடனும் இருப்பது மிக அவசியம் என்பதை உணருங்கள்.
அப்போது ஒழுக்க நெறிகளை கைவிட மாட்டீர்கள். அனைவரும் வளமோடு வாழவேண்டும் என்பதே எனது பிரார்த்தனையாகும் என்றார் பிரபாத்.
நாங்களும் அவரிடமிருந்து விடை பெற்று வீதிக்குள் இறங்கி திரும்பி பார்க்கையில் சப்பாத்தை பெரிய ஊசியால் தைப்பதற்கு தயாராகிக் கொண்டிருந்தார் பிரபாத்.
METRO NEWS
0 Comments